Friday, December 1, 2023

வெண்ணிலாவும் கவிஞரும்


 

நெஞ்சம் மறப்பதில்லை




 

வெண்ணிலா கவிதை மஞ்சரி .

 


சிறுகதை 10 - விதைப்பதும் விளைவதும்.

 சிறுகதை.

விதைப்பதும் விளைவதும்.

அழைப்பு மணி கேட்டதும் எழுந்து சென்ற எனது இளைய மகன்,

'வாப்பா, சமீர் உங்களைப் பார்க்க வேண்டுமாம். லீனா அன்ரிட மகன். யூனிவேசிட்டில படிக்கிறவர்' 

- கூறிவிட்டு அவனது அறையை நோக்கி நடந்தான்.

லீனா என்றதும் சிறிது பரபரப்படைந்த நான், சமீரை உள்ளே அழைத்து அமரும்படி கூறினேன்.

சமீர்தான் முதலில் என்னை உறவு முறைகொண்டு அழைத்து, வந்த விடயத்தைக் கூறினான்.

'அங்கிள், நான் பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திட்டேன். இன்றுதான் முடிவுகள் வெளியாகின. உம்மாதான் சொல்லியனுப்பினாங்க, உங்கிட்ட போய் சொல்லிவிட்டு வாங்க மகன் என்று. வாப்பா காலமான பிறகு படிப்பை நிறுத்திவிட்டு ஏதாவது தொழில் செய்துகொண்டு உம்மாவுக்குத் துணையாக இருப்போம் என்றுதான் நினைத்தேன். உம்மாவும் அப்படித்தான் எண்ணியிருந்தாங்க. ஆனா நீங்கதான் எப்படியாவது நான் பல்கலைக்கழகம் சென்று படிப்பை முடிக்கவேண்டுமென்று புத்திமதி கூறி அனுப்பிவைத்தீங்க. அதை என் வாழ்நாள் முழுக்க நினைவில் வைத்திருப்பதோடு நன்றியுடனும் இருப்பேன்.'

சமீர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவனது தன்னம்பிக்கையும் முதிர்ச்சியும் வியப்பை ஏற்படுத்தின. 

'அங்கிள், நீங்களும் உங்களது நண்பர்களும் சேர்ந்து எனது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவி செய்ததை நினைத்துப் பெருமிதமடைகிறேன். அதற்கு நன்றிக்கடனாக நீங்கள் செய்தது போலவே நானும் எனது நண்பர்களும் சேர்ந்து தந்தையை இழந்து கஸ்டப்படுற மாணவர்களுக்கு அவர்கள் படிப்பதற்கு உதவிசெய்து அவர்களை உயர்த்திவிட வேண்டுமென முடிவெடுத்திருக்கிறோம். எங்களுக்குத் தொழில் கிடைத்ததும் நாங்கள் ஆரம்பிப்போம்.'

தேனீர் அருந்திவிட்டு சமீர் விடைபெற்றுச் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த நான், நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை இரைமீட்டலானேன்.

அன்று ஒரு திங்கட்கிழமை. வேலைக்குச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்த வேளை, அலைபேசி அலறியது. 

'மச்சான், ஒரு பேட் நியூஸ்டா. நம்மட லீனாட கஸ்பன்ட் இறந்திட்டார்ரா. இப்பதான் பரீட் கோல் எடுத்துச் சொன்னான்.'

'என்ன? முந்தநாள்தானே கொஸ்பிட்டல் போய் பார்த்து வந்தோம். நல்லாத்தானே இருந்தார்.'

'ஆமாண்டா. நேற்றிரவு நெஞ்சு நோவென்று சொல்லியிருக்கார். மாரடைப்பு போல இருக்கு. பாவம்டா லீனா. சின்ன வயதிலேயே கணவனை இழந்திட்டா.' - நண்பன் நாஸர் அழாக்குறையாகக் கூறினான்.

லீனா எங்களது வகுப்புத் தோழி. ஆரம்பம் முதல் உயர்தர வகுப்புவரை ஒன்றாகப் படித்தவள். உயர்தரப் பரீட்சை எடுப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் அவளது வாப்பா மரணமடைந்துவிட்டதால் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு தனது சொந்த மாமாவின் மகனைத் திருமணம் செய்துகொண்டாள். லீனாவின் கணவர் நல்லவர். தனியார் நிறுவனம் ஒன்றில் காசாளராக இருந்தவர். வீட்டில் நடைபெறும் நன்மை தீமைகளுக்கெல்லாம் எங்களை அழைப்பார். நண்பர்கள் சகிதம் நானும் மனைவி பிள்ளைகளுடன் சென்றுவருவோம். 

மரணச்செய்தி கேட்டு நெஞ்சு பாரமாகியது. துக்கம் தொண்டைக்குழியை அடைத்தது. அலுவலகத்துக்கும் ஏனைய நண்பர்களுக்கும் விடயத்தை எத்திவைத்துவிட்டு லீனாவின் வீடு நோக்கிச் சென்றேன். நண்பர்களும் வந்திருந்தார்கள். ஜனாஸா ஏற்கனவே வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. அடக்கம் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.

பிற்பகல் ஐந்து மணியளவில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

வீடு வந்து சேர்ந்ததும் லீனாவின் எதிர்காலம் மற்றும் அவளது ஒரே மகனின் பல்கலைக்கழக படிப்பு என்பன எவ்வாறு அமையப்போகின்றன என நினைத்தபோது வேதனையாக இருந்தது. லீனாவின் உயர்கல்வி இடையில் தடைப்பட்டதுபோல் மகனுக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாதென நினைத்து அவனது கல்விக்காவது நண்பர்களுடன் சேர்ந்து உதவிசெய்ய வேண்டுமென உறுதிபூண்டேன். 

அன்றிரவு நித்திரை கொள்ள முடியவில்லை. புரண்டு புரண்டு கண்களை மூட முயற்சித்த போதும் இயலவில்லை. நாளை பொழுது விடிந்ததும் நண்பர்களை அணுகி ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஊசலாடியது.

விடிந்தும் விடியாத வேளை முதலில் நண்பன் நாஸரைத் தொடர்பு கொண்டு லீனாவின் மகனின் படிப்பிற்கு எப்படியாவது நண்பர்களாகிய நாம் ஒன்றுசேர்ந்து உதவிசெய்ய வேண்டுமெனக்கூறி அவனது ஆலோசனைகளைக் கேட்டேன்.

'அவசரப்படாதேடா! லீனாட அனுமதியில்லாமல் நாம எப்படிடா முடிவெடுப்பது? லீனாவைப்பற்றி நமக்கு தெரியும்தானே! அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ளமாட்டா. எப்படியென்றாலும் அவட 'இத்தா' காலம் முடிய நாலைந்து மாதமாகும். பொறுத்திரு. நம்மட மற்ற நண்பர்களிடமும் சொல்லி அவங்கட கருத்துகளையும் பார்ப்போம்.'

மறுபுறம் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஏனைய நண்பர்களுக்கும் அலைபேசி மூலம் விடயத்தைத் தெரியப்படுத்திவிட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டேன்.

இரண்டு நாட்களின் பின் நண்பன் நாஸரிடமிருந்து அழைப்பு வந்தது.

'நாம மொத்தமாக ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து உதவுறது பிரயோசனம் இல்லைடா. அது ஐந்தாறு மாதங்களில கரைஞ்சிடும். அதனால லீனாட மகன்ட படிப்புச் செலவுக்கு, நாம ஐந்து பேரும் மாதாமாதம் இரண்டாயிரம் வீதம் மொத்தம் பத்தாயிரம் கொடுப்போம். அதுவும் வங்கியில ஓர் எக்கவுண்ட திறந்து மகன்ட பேரிலேயே போடுவம். அத நீ பொறுப்பெடு' 

- வழக்கமான பாணியில் மளமளவென்று கதைத்துமுடித்தான்.

'இத லீனாவுக்கு எப்படிடா சொல்றது? அவ மகன் மாதாந்தோறும் நம்மிடமிருந்து காசு வாங்குறதுக்கு ஒத்துக்குவானா? இல்ல லீனாதான் இதற்குச் சம்மதிப்பாளா?'

- எனது கேள்விக்கணைகள் தொடர்ந்தன.

'நான் எல்லா விடயத்தையும் பேசி முடிச்சிட்டேன்டா. லீனாட அக்காவைக் கண்டு லீனாவுக்கு நடந்த கதிபோல் மகனுக்கும் நடந்துவிடக்கூடாது என விளக்கிக் கூறினேன். எத்தனையோ கெட்டிக்காரப் பிள்ளைகள் இப்படியான நிலைமைகளால் படிப்பையே பாதியில் நிறுத்திவிட்டு கூலித்தொழில் என்றும் கடைகளில் சின்னச் சின்ன வேலைகள் செய்தும் காலத்தை ஓட்டுதுகள். சில பிள்ளைகள் வழிதவறியும் சென்றுவிடுகின்றனர். அதனால லீனாக்கிட்ட எப்படியாவது கதைக்கச் சொன்னேன். அவவும் சரியென ஏற்றுக்கொண்டு நாளை வந்து சந்திப்பதாகச் சொல்லிவிட்டு போய்விட்டா. இப்பதான் வந்து சில விடயங்களைக் கூறினா. லீனாட கணவன் வேலைசெய்த கம்பனியும் ஊழியர்களும் சேர்ந்து ஒரு தொகைப்பணம் தருவதாகச் சொல்லியிருக்காங்களாம். கணவன்ட பேரிலே வெற்றுக் காணியொன்றும் இருக்காம். அதையும் விற்று மகனின் படிப்பை எப்படியோ முடிச்சிடலாம் எனக்கூறி நம்மட உதவியை ஆரம்பத்திலே விரும்பவில்லையாம். அக்காதான் லீனாவுக்கு தந்தையை இழந்த மகனைப் படிப்பிப்பதிலும் வாழ்க்கையைத் தனியொரு பெண்ணால் கொண்டு நடாத்துவதிலுமுள்ள சிரமங்களை எடுத்துக் கூறி ஒத்துக்கொள்ள வைத்திருக்கா.'

- நாஸர் சொல்லி முடித்ததும் என் நெஞ்சை அடைத்திருந்த பெரும் பாறாங்கல்லொன்று பனிக்கட்டிபோல் உருகிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. நீண்டதொரு பெருமூச்சை உதிர்த்துவிட்டு அமைதியாக நாற்காலியில் சாய்ந்துகொண்டேன்.

நான்கு வருடங்கள் நான்கு மாதங்கள் போல் மிக வேகமாகப் பறந்துவிட்டன. இறைவன் உதவியால் நினைத்ததுபோல் எல்லாம் நல்லபடியாகவே நடந்தேறின. ஐந்து நண்பர்களும் லீனாவுடன் சேர்த்து ஆறு பேரும் அன்றுபோல் இன்றும் ஒற்றுமையாகவும் பரஸ்பரம் உதவி செய்பவர்களாகவும் இருப்பதையிட்டு பெருமைப்படுகிறேன்.

இன்றைய நாட்களில் குழுக்களாகச் சேர்ந்து உல்லாசப் பயணங்கள் என்றும் கேளிக்கைகள் என்றும் சமூக வலைத்தளங்கள் என்றும் நேரத்தையும் பணத்தையும் வீண்விரயம் செய்யாமல் தந்தையை இழந்த, நமது நண்பனின் ஒரு பிள்ளையின் உயர்கல்விக்காவது கூட்டாக உதவினால் சமீர் போன்ற எத்தனையோ பிள்ளைகள் சமூகத்தில் நல்ல பிரசைகளாக உருவாகி, அவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வருவார்கள். 

இன்று லீனாவின் மகன் என்னை வந்து சந்தித்துக் கூறிய வார்த்தைகள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. அவை மீண்டும் மீண்டும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன.

-எஸ். ஏ. கப்பார்.

06-11-2023.

(26-11-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)

சிறுகதை 9 - ஒரு துரோகியின் மனைவி

 சிறுகதை.

ஒரு துரோகியின் மனைவி

உயர்தர வகுப்பில் படிக்கும் காலங்களில் ஜெஸினா தன் பெற்றோரின் அன்பிலும் அரவணைப்பிலும் தன் இரு தம்பிகளுடன் கட்டுப்பாட்டோடு வாழ்ந்தவள்தான். உயர்தரப் பரீட்சை முடிவடைந்து பரீட்சை முடிவுகள் வரும்வரை ஆங்கிலக் கல்வியையும் கணினிக் கல்வியையும் தனியார் கல்வி நிலையமொன்றில் கற்க வேண்டுமென எண்ணினாள். அதனால் பெற்றோரின் அனுமதியுடன் தன் இரு தோழிகள் சகிதம் தனியார் கல்வி நிலையமொன்றில் சேர்ந்து படிக்கத் தொடங்கினாள்.

ஜெஸினாவின் அம்மா ஓர் ஆசிரியை. அப்பா தனியார் மருந்தகம் ஒன்றில் தொழில் புரிபவர். ஜெஸினா பெண் பிள்ளை. பெற்றோருக்கு மூத்தவள். ஜெஸினாவுக்கு இரு தம்பிகள். இருவரும் பாடசாலை மாணவர்கள். மூவரும் பெற்றோரின் கண்காணிப்பில் மிகவும் கண்ணியமாக வளர்க்கப்பட்டவர்கள்.

ஜெஸினா தனியார் வகுப்பில் சேர்ந்த பிறகுதான் அவளது வாழ்வில் விதி விளையாடத் தொடங்கியது. அதே தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பித்துக்கொண்டிருந்த நிகால் என்ற ஆங்கில ஆசிரியருடன் காதல் மலர ஆரம்பித்தது. பல மாதங்கள் கடந்த பின்புதான் அவளது காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்தது. எவ்வளவோ புத்திமதிகள் கூறியும் ஜெஸினா ஏற்றுக் கொள்ளவில்லை. நிகால் ஆசிரியரையே திருமணம் முடிக்கப்போவதாக ஒற்றைக்காலில் நின்றாள்.

''மகள். இப்ப உங்களுக்கு திருமணத்திற்கு என்ன அவசரம். தொடர்ந்து படித்து பல்கலைக்கழகம் சென்று ஒரு தொழிலைப் பெற்ற பிறகு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம்தானே?'' 

- அப்பா பக்குவமாக எடுத்துக் கூறியும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது.

'ஜெஸினா, நான் சொல்வதைக் கேளு பிள்ளை. வீணாக உன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளாதே! இப்பதான் உனக்கு 18 வயது. நீ படிக்க வேண்டிய காலம். கல்யாணம் அது இது என்று உன் எதிர்காலத்தைப் பாழாக்கிடாதே.'

- அம்மா அழத் தொடங்கினாள். 

அனைத்தும் ஜெஸினாவுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கானது. இறுதியில் வேறு வழிகளின்றி ஜெஸினாவின் திருமணம் நடந்தேறியது. சுமார் பதினெட்டு மாதங்கள் திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகச் சென்றது. அழகிய பெண் குழந்தையொன்றும் கிடைத்தது. ஜெஸினா பூரித்துப் போனாள்.

இவ்வாறு தன் குழந்தையுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்த ஜெஸினாவின் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் அஸ்தமித்துப்போய்விடும் என அவள் கனவிலும் நினைத்ததில்லை.

ஒரு நாள் காலை ஜெஸினாவின் அறையிலிருந்து பலத்த சத்தத்துடன் அழுகுரல் கேட்டது.

கணவன் - மனைவிக்கிடையில் ஆயிரம் பிரச்சினை இருக்கும். நாம் தலையிடக்கூடாது என்றெண்ணி ஜெஸினாவின் பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்தனர். 

இரண்டு நாட்களின் பின் ஜெஸினா தன் அம்மாவை அழைத்து,

''அம்மா, அவர்ர நடவடிக்கை எல்லாம் எனக்கு கஸ்டமாயிருக்கு அம்மா. உங்கட சொல்லைக்கேட்டு நான் தொடர்ந்து படிச்சிருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்க மாட்டா. அவருக்கு கிடைக்கும் சம்பளம் போதாதாம். அதனால அவர் தனியாக ஒரு கல்வி நிறுவனம் தொடங்கப்போறாராம். அதற்கு அதிக பணம் தேவையாம். அதனால நம்மட காணியில வீடு இருக்கிற பகுதி போக மிச்சத்தை வித்து காசு தரட்டாம் என்று என்னை சித்திரவதைப்படுத்துறார்'' என்று கூறி ஓவென அழத் தொடங்கினாள்.

ஜெஸினாவின் அம்மாவுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது போலாகிவிட்டது. ஜெஸினாவின் அப்பா வந்ததும் இதுபற்றி கதைத்து ஒரு முடிவு எடுக்கவேண்டுமென நினைத்து அமைதியாக இருந்தாள். 

கணவன் வீடு வந்ததும் ஜெஸினாவின் அம்மா நடந்தவற்றையெல்லாம் தன் கணவனிடம் கூறி அவரது முடிவை ஆவலோடு எதிர்பார்த்தாள்.

''என்ன செய்வது. அவள் தேடிய தேட்டம். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போனதால் வந்த விளைவு. அவளுக்குச் சேரவேண்டியதை அவளுக்குக் கொடுக்கத்தான் வேணும். இரண்டு குடும்பம் தாராளமாக இருக்கக்கூடிய பெரிய வீடுதான் நம்மட வீடு. ஒரேயொரு பெண் பிள்ளை. நம்மட கண்ணுக்குப் பிறகு அவளுக்குத்தானே எல்லாம். ஆனா காணியில் அரைவாசியை விற்கிறதென்பது எனக்குப் பொருத்தமா படல. இது அவள்ள வாழ்க்கை பிரச்சினை. அதனால மாம்பிளைக்கிட்ட கதைத்துப் பார்ப்போம்.' '

- ஒரு பெருமூச்சுடன் ஜெஸினாவின் அப்பா முடித்தார்.

இரண்டு மூன்று நாட்களின் பின், ஜெஸினாவின் அப்பா தன் மருமகனுடன் கலந்துரையாடினார். மருமகன் தனக்குள்ள பணப் பிரச்சனைகளைக் கூறி பல வாக்குறுதிகளைக் கொடுத்து மாமனாருக்கு நம்பிக்கை ஊட்டி தன் வலையில் சிக்கவைத்தான். 

இறுதியில் குடியிருக்கும் வீட்டுக் காணியின் நான்கில் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டு பணம் முழுவதும் மகள் ஜெஸினாவின் கணவரிடம் கொடுக்கப்பட்டது.

ஒரு வருடம் சென்ற பின்பும் ஜெஸினாவின் கணவன் கூறியதுபோல் எதுவும் நடைபெறவில்லை. ஜெஸினாவுக்கும் சந்தேகம் வலுவடையத் தொடங்கவே ஒரு நாள்,

''என்னங்க, நீங்க தனியா கல்வி நிலையம் தொடங்க எனக் கூறி காணி வித்தமில்ல. ஏன் இவ்வளவு நாளா தொடங்கல. காசும் கரைஞ்சிடுமில்ல.''

- பக்குவமாய் தன் கணவனிடம் கேட்டாள்.

''என்ன? கல்வி நிலையமோ? இந்த பிச்சக்காரக் காசுக்கு கல்வி நிலையம் தொடங்கலாமோ? நான்தான் காணியில அரைவாசிய வித்து காசு கேட்டேன். உங்க அப்பா அதில அரைவாசிய வித்து காசு கொடுத்தார். போய் உங்க அப்பாக்கிட்ட சொல்லி மிச்ச அரைவாசியையும் வித்து காசு கொண்டுவா. கல்வி நிலையம் திறப்போம்.''

எரிந்து விழுந்தான் நிகால்.

இதனை சற்றும் எதிர்பாராத ஜெஸினா அதிர்ச்சியுற்று நிலை தடுமாறினாள். இதுபற்றி தன் பெற்றோருடன் வாய்திறக்காது விதியை நொந்தபடி பொறுமை காத்தாள்.

நாட்கள்தான் கடந்தனவே தவிர, உருப்படியாக ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால், நிகாலின் நச்சரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.  

தன் கணவனின் ஆட்டங்களுக்கு இடங்கொடுத்தால் குடியிருக்கும் வீடும் பறிபோய் தன் பெற்றோரினதும் இரு சகோதரர்களினதும் எதிர்கால வாழ்க்கை சூனியமாகிவிடும் என எண்ணிப் பயந்தவளாய் நிதானமாக இருந்தாள். நாளடைவில் பிரச்சினைகள் விரிசலாகி இருவரிடையேயும் மனக்கசப்பை உண்டாக்கியதுடன், அடிக்கடி சண்டையும் ஏற்பட்டது.

இப்போதெல்லாம் நிகால் வீட்டுக்கு வருவதுமில்லை. மனைவி பிள்ளையைப் பார்ப்பதுமில்லை.

இன்று, கள்ளங் கபடமற்ற ஜெஸினா தன் குழந்தை சகிதம் தன் பெற்றோரின் தயவுடன் ஒரு துரோகியின் மனைவியாக வாழ்ந்துவருகிறாள்.

- எஸ் ஏ கப்பார்.

04-10-2023. 

(15-10-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)

சிறுகதை 8 - ரியூசன் மாஸ்டர்.

 சிறுகதை.

ரியூசன் மாஸ்டர்.

எங்களூரில் இருபத்தைந்து முப்பது ரியூசன் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். இருந்தும் ரியூசன் மாஸ்டர் என்றதும் உடனே நினைவுக்கு வருவது சுலைமான் சேர்தான். ஊரில் மட்டுமல்ல வெளியூர்களிலும் அவரது புகழ் பரவிக் கிடக்கிறது.

சுலைமான் சேர் ஆரம்ப வகுப்புப் பிரிவினருக்கு கல்வி கற்பிக்கும் ஓர் ஆசிரியர்தான். ஆரம்ப காலங்களில் பாடசாலையில் மட்டுமே கற்பித்துக்கொண்டிருந்ததால் பெரும்பாலான பெற்றோருக்கு சுலைமான் சேரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. பின் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிற் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளைக் கற்பிக்கும் ஓர் ஆசிரியராகப் பரிணாமம் எடுத்த பின்பு தான் அவரது புகழ் பரவத்தொடங்கியது.

ஆரம்பத்தில் சுலைமான் சேரிடம் கல்வி கற்று புலமைப் பரிசிற் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் சுமார் எண்பது சத வீதமான மாணவர்கள் சித்தியடைந்தது அவர் கற்பித்த பாடசாலைக்கு கௌரவத்தையும் பெற்றோர் மத்தியில் பெரும் மதிப்பையும் பெற்றுக்கொடுத்தது. 

பச்சிளம் குழந்தைகளைப் பாடாய்படுத்தி வெற்றிபெற வைத்த ஒரு சில வறட்டுக் கௌரவப் பெற்றோர்கள் தாங்களே பரீட்சையில் சித்தியடைந்ததாக எண்ணிக்கொண்டு சுலைமான் சேர் வீட்டுக்குச் சென்று அன்பளிப்பு என்ற போர்வையில் பெறுமதியான பரிசுப் பொருட்களை வழங்கத் தொடங்கினர். காலப்போக்கில் அன்பளிப்புப் பொருட்கள் ரொக்கப் பணமாக மாறியபோது சுலைமான் சேரின் எண்ணமும் பணத்தின் பக்கம் சாயத்தொடங்கியது. அதன் விளைவு பாடவேளைகளில் கற்பிக்கும் நேரம் குறைந்து குறைந்து பாடசாலைக்குச் சமுகமளிக்கும் நாட்களும் வெகுவாகக் குறையத்தொடங்கின. அதிபரும் அது பற்றி பெரிதாகப்  பொருட்படுத்திக் கொள்ளவில்லை. முழு நேர ரியூசன் ஆசிரியராகவே மாறிவிட்ட சுலைமான் சேர் இனிவரும் காலங்களில் தனது கற்பித்தல் முறையில் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டு பணம் பண்ணவேண்டுமெனத் திட்டமிட்டார். 

எனவே பாடசாலையிலுள்ள ஐந்தாந்தர மாணவர்களை ஒன்றுசேர்த்து பல வகுப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனிக் கவனம் செலுத்தி கற்பிக்கப்போவதாகவும் சித்தியடைவது நூறு வீதம் உறுதி எனவும் கூறி மாணவர்களது பெற்றோர்களை ஒரு விடுமுறை தினத்தில் பாடசாலை வகுப்பறையில் ஒன்று கூடுமாறும் அழைப்புவிடுத்தார்.

குறித்த தினத்தில் பெற்றோர்களும் ஒன்றுகூடினர். சுலைமான் சேர் பெற்றோர்களைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார்.

'எனது குறுகிய கால அழைப்பையேற்று வருகை தந்திருக்கும் பெற்றோருக்கு என் அன்பு கலந்த நன்றிகள். கூடுதலாக தாய்மார்கள் வந்திருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான். ஆண்கள் தங்களது தொழில் நிமித்தம் வௌ;வேறு இடங்களுக்குச் சென்று வருவதால் தாய்மார்தான் பிள்ளைகளின் கல்வியிலும் அவர்களது எதிர்கால விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இது போட்டி நிறைந்த காலம். பிள்ளைகளை விளையாட்டு, கைத்தொலைபேசி போன்றவற்றில் கவனம் செலுத்தவிடாது இந்த புலமைப்பரிசிற் பரீட்சையில் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைய உதவிசெய்யவேண்டும். அது சம்பந்தமாக கலந்துரையாடவே உங்களை அழைத்துள்ளோம். அதற்கு எங்களைப்போல் நீங்களும் பல தியாகங்களைச் செய்வதோடு ஒரு தொகை பணமும் செலவு செய்ய வேண்டிவரும். இப் பரீட்சை முடியும்வரை மாதந்தோறும் சுமார் ஐயாயிரம் அளவில் செலவாகும்.' எனக் கூறிவிட்டு மெதுவாக கதிரையில் அமர்ந்தார் சுலைமான் சேர்.

ஐயாயிரம் என்றதும் வருகைதந்திருந்த எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு தங்களுக்குள்ளேயே உரையாடத் தொடங்கினர்.

ஓர் ஏழைத் தந்தை எழுந்து,

'அரசாங்கம்தான் இலவசக்கல்வி என்று சொல்லி எல்லாத்துக்கும் செலவு செய்யுது. படிப்பிக்கிறதுக்கு உங்களுக்கும் சம்பளம் தருது. நீங்க பாடசாலை நேரத்தில படிப்பிக்கலாம்தானே. எல்லாத்துக்கும் காசு காசு என்று கேட்டா நாங்க எங்கே போறது?' - அழாக்குறையாக சொல்லிவிட்டு அமர்ந்தார்.

'நீங்க சொல்லுறதும் சரிதான். இஞ்ச பாருங்க. எங்கட தேவைக்கு நாங்க காசு கேட்கவில்லை. பிள்ளைகளுக்கு ஒரு வாரத்துக்கு ஒரு முறை பரீட்சை வைக்க வேண்டும். அதைத் திருத்தி அவர்களது புள்ளிகளை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். பரீட்சை பேப்பரெல்லாம் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களிலிருந்துதான் எடுக்க வேண்டும். நீங்க விரும்பினாத்தான் கொடுங்க. நாங்க கட்டாயப்படுத்தல்ல' - சிறிது கடுமையான குரலில் பதிலளித்தார் சுலைமான் ஆசிரியர்.

வந்திருந்த ஏனைய பெற்றோர்களும் தங்கள் தங்கள் கருத்துகளைக் கூறி இறுதியில் தாய்மார் தரப்பிலிருந்து மாதந்தோறும் நாலாயிரம் ரூபா கொடுப்பதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் ஆண்கள் தரப்பில் முழுமனதுடன் இம்முடிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதை அவதானித்த சுலைமான் ஆசிரியரின் நரி மூளை வேலை செய்யத் தொடங்கியது. வருகைதந்திருக்கும் தாய்மாரின் பிள்ளைகளைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேக வகுப்புகளை நடாத்தி பணம் பண்ணிவிடலாம் என நினைத்து,

'சரி. எல்லாப் பிள்ளைகளும் நூத்துக்கு நூறு எடுக்க வேண்டுமென்பதுதான் எங்கட நோக்கம். எதிர்வரும் வியாழக்கிழமை பாடங்கள் ஆரம்பமாகும். எல்லோரும் கட்டாயம் வாங்க' எனக் கூறிவிட்டு சுலைமான் ஆசிரியர் சென்றுவிட்டார்.

ஓரிரு மாதங்கள் ரியூசன் பாடங்கள் எல்லா மாணவர்களுக்கும் ஒழுங்காக நடைபெற்றன. மாணவர்களும் தங்கள் பெற்றோர்களின் வசதிக்கேற்ப கொடுத்தனுப்பிய தொகையினை சுலைமான் சேரிடம் கொடுத்தனர். தான் எதிர்பார்த்த தொகையினைக் கொண்டுவந்த பிள்ளைகளை வேறாகப் பிரித்தெடுத்து அவர்களை மட்டும் தனது வீட்டுக்கு வருமாறும் ஏனைய பிள்ளைகளை பாடசாலையில் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார். 

சுலைமான் சேரின் மனிதாபிமானமற்ற இந்தச் செயலினால் அதிக பணம் செலுத்த முடியாத நல்ல கெட்டிக்காரப் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இதைத் தட்டிக் கேட்க யாருமே முன்வராததால் சுலைமான் சேரின் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது.

அறுவை மரப்பலகைகளாலும் பழைய கூரைத்தகடுகளாலும் அமைக்கப்பட்டிருந்த ரியூசன் கொட்டில் தற்போது புதியரக இருக்கைகளும் மின்விசிறிகளும் நவீன ஒலிபெருக்கிச் சாதனங்களும் கொண்ட கவர்ச்சிகர வகுப்பறைகளாக மாறின. சுலைமான் சேரின் வருமானம் பல்கிப் பெருகி புதிய வீடு, கார் என அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. 

காலப்போக்கில் சுலைமான் சேரின் மனதில் குடிகொண்டிருந்த நிம்மதி எங்கோ பறந்துபோய்விட்டது. பச்சிளம் குழந்தைகளைப் பகடைக்காயாக உபயோகித்து ஆடம்பரமாக வாழ நினைத்தவர் தனது மனைவி மக்களின் எதிர்காலம் பற்றி எண்ண மறந்துவிட்டார். மூத்த மகன் கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் போதை மாத்திரைகள் உட்கொள்ளும் நபராக மாறிவிட்டான். இளைய மகன் அவருக்குத் தெரியாமல் காரை எடுத்துச் சென்று விபத்துக்குள்ளாகி வலது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவினால் நாலைந்து மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான். இவற்றையெல்லாம் மனதிற் சுமந்துகொண்டு அவரது மனைவியும் ஒருவித மனநோயாளியாக மாறிவருவது சுலைமான் சேருக்குத் தெரியாமலில்லை.

நடந்தது நடந்ததுதான். இனி யோசித்துப் பயனில்லை. தனது முதுமைக்கால வாழ்க்கை மற்றும் மனைவி மக்களின் எதிர்காலம் பற்றிய பயம் சுலைமான் சேரை மெல்ல மெல்லக் கொல்லத் தொடங்கியது.

- எஸ் ஏ கப்பார்.

25-06-2023

(23-07-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)

சிறுகதை 7 - தோழி ஜெனீறா.

 சிறுகதை.

தோழி ஜெனீறா.

இன்று தோழி ஜெனீறாவின் மகளின் திருமணம். மனைவியும் நானும் பிள்ளைகளுடன் திருமண மண்டபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

ஜெனீறாவும் நானும் ஒன்றாக ஒரே பாடசாலையில் படித்தவர்கள். தரம் ஆறு தொடக்கம் உயர்தர வகுப்பு வரை இரண்டொரு ஆண்டுகள் தவிர, ஏனைய அனைத்து ஆண்டுகளிலும் ஒரே வகுப்பறைதான்.

எங்களது வகுப்பு மாணவிகளில் ஜெனீறா மிக அழகானவள். திறமைசாலி. கள்ளங் கபடமற்றவள். எல்லா மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் அன்பாகப் பழகுபவள். க.பொ.த. (சாஃத) பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் அதி விசேட சித்திபெற்று பாடசாலைக்கு நன்மதிப்பைப் பெற்றுக் கொடுத்தவள். 

தொடர்ந்து அதே பாடசாலையில் உயிரியல் உயர்தரப் பிரிவில் சேர்ந்து கல்வி கற்றோம். க.பொ.த. (உஃத) பரீட்சையில் மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்றிருந்தும் எங்கள் இருவருக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. 

ஏதாவது அரச தொழிலொன்றைப் பெறும் நோக்கத்தில் நான் இரண்டாவது முறையாக பரீட்சைக்குத் தோற்ற விரும்பவில்லை. ஆனால் ஜெனீறா இரண்டாவது முறையும் தோற்றி, பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகம் சென்றுவிட்டாள். அதன் பின் அவளை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.

சில மாதங்களுக்குள் எதிர்பாராதவிதமாக எனக்கும் ஓர் அரச தொழில் கிடைத்தது. தொழில் கிடைத்தவுடன் வீட்டில் என் பெற்றோர்கள் எனக்குத் திருமணம் முடித்துவைக்க விரும்பி அவசரப்படுத்தினார்கள்.


''அம்மா! திருமணத்துக்கு இப்ப என்ன அவசரம்? உத்தியோகம் கிடைத்து இரண்டொரு வருஷமாவது போகட்டுமே. நானும் கையில ஏதாவது சேர்த்துக்கிட்டு கல்யாணம் முடிக்கிறது நல்லதுதானே அம்மா!'' என்றேன்.

''சரி மகன். உன்ட தங்கைச்சிக்கும் இருபத்து மூன்று வயசாகிறது. எங்களுக்கும் வயசாயிடுச்சு, அதுதான் எங்கட கண்ணோட இருவரினதும் கல்யாணத்தை முடிச்சிடலாமென நினைக்கிறோம். காலா காலத்தில அவளுக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து முடிச்சிடணும். அவ என்னடாவெண்டா அண்ணா முடிச்ச பொறகுதான் முடிப்பேன் என்று அடம்பிடிக்கிறா.'' 

அம்மா அழாக்குறையாகக் கூறினாள்.

அம்மாவின் வார்த்தைகளும் நியாயமாகத்தான் இருந்தன. தொடர்ந்து அப்பாவும் வற்புறுத்தத் தொடங்கினார். நான் ஒத்துக்கொள்ளாதது அப்பாவுக்குச் சங்கடமாக இருந்தது. நான் யாரையாவது விரும்பிக்கொண்டிருக்கிறேன் என்ற சந்தேகமும் அப்பாவுக்கு ஏற்பட்டது. எனது நண்பர்களை அணுகி விசாரித்திருக்கிறார். ஜெனீறாவும் நானும் நல்ல நண்பர்கள் என்றும் ஒருவேளை அவளை நான் விரும்பலாம் என்றும் அதனால் ஜெனீறாவின் பெற்றோரிடம் ஒரு முறை கேட்டுப்பாருங்கள் என்றும் அப்பாவிடம் கூறியிருக்கிறார்கள். அப்பாவும் ஜெனீறா வீட்டுக்குச் சென்று விசாரித்திருக்கிறார். ஜெனீறாவின் அம்மாவுடன் கதைத்திருக்கிறார்.

இந்த விடயம் ஒரு விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த ஜெனீறாவைப் பார்க்க அவளது வீட்டுக்குச் சென்றபோதுதான் எனக்குத் தெரியவந்தது.

''டேய்! எப்படி இருக்காய்டா. தொழில் எல்லாம் நல்லம்தானே? அவசரமா உனக்கு பொண்ணு பாக்கிறாங்களாமே? உண்மைதானா? எங்க அம்மாதான் சொன்னா. உங்க அப்பாதான் உனக்கு நல்ல பொண்ணொன்று பார்க்கவேண்டுமென்று அம்மாக்கிட்ட சொன்னாராம்.'' 

சொல்லி முடித்த ஜெனீறா கலகலவெனச் சிரித்தாள். 

நீயும் நல்ல பொண்ணுதானே எனச் சொல்ல நினைத்த என்னை நீண்ட நாட்களுக்குப் பின் கேட்ட அவளது கள்ளமில்லாச் சிரிப்பொலி தடுத்து நிறுத்திவிட்டது.

எனது அப்பாவும் அவளது அம்மாவும் எவ்வளவு நாகரீகமாகவும் பண்பாகவும் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது அவர்கள் மீது எனக்குப் பெரும் மரியாதை ஏற்பட்டது.

நான் அமைதியாக இருந்தேன். அவதானித்த ஜெனீறா,

''நான் படிப்பை முடித்து பட்டம் பெற்று ஒரு தொழிலைப் பெற வேண்டும். அதற்குப் பிறகுதான் என்ட கல்யாணம். எப்படியோ மூன்று நாலு வருஷம் போகும்.'' என்றாள்.

ஜெனீறா நாசூக்காக அவளது முடிவைச் சொல்லுகிறாள் எனப் புரிந்துகொண்டு அவளிடமிருந்து விடைபெற எழுந்தேன். 

''டேய்! கல்யாணத்தை நான் விடுமுறையில நிற்கிற நாளாப் பாத்து வைச்சிடுடா. நானும் கலந்துகொள்ள வேணுமில்ல.'' 

மீண்டும் கலகலவெனச் சிரித்தாள். முத்துக்கள் தெறித்தது போலிருந்தது அவளது சிரிப்பு.

நானும் பதிலுக்குப் போலிச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு விடைபெற்றேன்.

ஓரிரு மாதங்களில் எனக்குத் திருமணம் நடந்தேறியது. மனைவியும் அரச நிறுவனமொன்றில் தொழில்புரிபவள். 

திருமணத்தின் பின் எங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. ஆணொன்று பெண்ணொன்று என இரு பிள்ளைகள். இருவரும் தற்போது பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரிகள். தொழில் வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தொழில் கிடைத்தபிறகுதான் திருமணம் என்று சொல்லிவிட்டார்கள்.

என் திருமணம் நடந்து இரண்டு வருடங்களில் என் தங்கை மற்றும் ஜெனீறா ஆகியோரின் திருமணங்களும் இனிதே நடைபெற்றன. ஜெனீறாவின் திருமண நிகழ்வில் அப்பா, அம்மா, மனைவியுடன் சென்று கலந்துகொண்டேன்.

ஜெனீறாவின் குடும்பத்துடனான உறவு மேலும் மேலும் வலுப்பெற்றது. ஜெனீறாவின் கணவர் ஒரு மின் பொறியியலாளர். பண்பானவர். எங்களது குடும்ப நன்மை தீமை எல்லாவற்றிலும் தராதரம் பாராது கலந்துகொள்பவர். ஜெனீறாவின் தூய்மையான நட்பு பல ஆண்டுகள் கடந்தும் ஓர் அணுவளவுகூட மாறவில்லை.

இன்று ஜெனீறாவின் மகளின் திருமணம். என் மகளைவிட இரண்டு வயது இளையவள். நானும் மனைவியும் கல்யாண மண்டபத்தை நோக்கி குடும்ப சகிதம் சென்றுகொண்டிருக்கிறோம்.

திருமண மண்டபத்தை அடைந்ததும் யாருமே எதிர்பாராவண்ணம் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டு 

என் இளைய மகனைக் கூட்டிச்செல்கிறான் ஜெனீறாவின் மூத்த மகன்.

என் மனைவியும் ஜெனீறாவும் வியப்பு மிகுதியால் அவர்களையே பார்த்து நின்றனர்.

- எஸ். ஏ. கப்பார்.

29-05-2023

(04-06-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)