Monday, January 5, 2026

கம்பளை நோக்கிய பயணம்.

 25. கம்பளை நோக்கிய பயணம்.

இன்னும் இரு வாரங்களில் பல்கலைக்கழக இறுதிப் பரீட்சைகள் ஆரம்பமாக உள்ளன. கடந்த நான்கு வருடங்களாக தன் பட்டப் படிப்பை முடிப்பதற்காக தான் பட்ட கஷ்டங்களையும் அலைச்சல்களையும் தன் பெற்றோரின் தியாகங்களையும் மீட்டிப்பார்த்த அமினாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

கண்டி மாவட்டம், கம்பளையைச் சேர்ந்த அமினா குடும்பத்தில் மூத்த பெண் பிள்ளை. அவளுக்குப் பிறகு இரண்டு ஆண் பிள்ளைகள். அமினாவின் வாப்பா மரக்கறித் தோட்டம் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தைச் சிரமமின்றி ஓட்டிவந்தார். உம்மா வீட்டோடு சிறியதொரு சில்லறைக் கடை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளைக் கவனித்து வந்தார்.

அமினாவுக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததும் குடும்பமே குதூகலித்து மகிழ்ந்தது. ஆனாலும் உம்மாவுக்கு கிழக்குப் பகுதி என்றால் ஒருவித பயம். மகளுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கிடைத்தது பயமாகவும் கவலையாகவும் இருந்தது. தமது பகுதியில் கிடைத்திருந்தால் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்திருக்குமே என எண்ணினார்.

உம்மாவின் கவலையைப் புரிந்து கொண்ட அமினா “உம்மா, தென் கிழக்குப் பல்கலைக்கழகம் அம்பாரை மாவட்டம் ஒலுவில் பகுதியில்தான் இருக்கு. ஒலுவில் துறைமுகமும் பக்கத்திலேதான். ஒலுவில் முழுக்கிராமும் முஸ்லிம்கள் வாழும் கிராமம். அங்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. நாங்க கொஸ்டலில் தங்கியிருந்துதான் படிக்கப் போறம். முஸ்லிம், தமிழ், சிங்களப் பிள்ளைகள் எல்லாம் ஒன்றா தங்கியிருந்து படிப்பதாலே பிரச்சினை ஒன்றும் இல்லை உம்மா. என்றாள். - நான்கு வருடங்களுக்கு முன் உம்மாவிடம் கூறியது நினைவுக்கு வந்தது, அமினாவுக்கு.

“வாப்பா, நாளை எப்படியும் நாங்க நாலு பேரும் ஒலுவில் செல்லவேண்டும். ஜெஸா பஸ்ஸுக்கு புக் பண்ணிட்டாவாம். பஸ் காசு கொடுக்கணும். எனக்கும் செலவுக்கு காசு வேணும். என வாப்பாவிடம் கூறினாள், அமினா.

மகள், உங்கட சல்லி எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன், மவ. என்னவோ கிழக்குப் பகுதியில் வெள்ளம் சூறாவளி வரப்போவதாக மிஹ்றுன் மாமி சொன்னா. எதுக்கும் பாத்து அனுப்புங்க எண்டு சொன்னவ மவ. போன வாட்டியும் கெம்பஸுக்குள்ளே வெள்ளம் வந்து நீங்க எல்லாம் கஷ்டப்பட்டு வந்து சேந்தீங்க. அதில வெள்ளத்துல வுளுந்து மதரஸாப் பிள்ளைகள் மவுத்தான சேதியும் தெரியும் தானே. எதற்கும் நல்லா விசாரிச்சுப் போங்க மவ

“அங்க பிரச்சினை ஒன்னும் இல்ல உம்மா. மழைதான் கொஞ்சம் மிச்சம் என்று சொன்னாங்க. அப்படி ஏதும் பிரச்சினை என்றால் பாதுகாப்பாக எங்களை அனுப்பிவைப்பாங்க. நீங்க கவலப்படாதீங்க உம்மா.

அடுத்த நாள் காலை நண்பிகளுடன் பல்கலைக்கழகம் வந்தடைந்த அமினாவுக்கு சிறிது பயமாகத்தான் இருந்தது. அநேகமான வெளியூர்ப் பிள்ளைகள் சமுகமளிக்கவில்லை. பரீட்சைகளும் நடைபெறமாட்டாதுபோல் தெரிந்தது. அமினா நினைத்துபோலவே பரீட்சைகள் ஒத்திப்போடப்பட்டுள்ளதாகவும் மாணவர்களை விடுதிகளிலிருந்து பாதுகாப்பாக தங்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டது. வெளியூர் பிள்ளைகளை அனுப்பி வைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் இரண்டு மணியளவில் உம்மாவுக்கு அறிவித்துவிட்டு தன் நண்பிகளுடனும் இன்னும் சில மாணவர்களுடனும் தனியார் பஸ் ஒன்றில் ஊர் வந்து சேர ஆயத்தமானாள், அமினா. பல்கலைக்கழக நிருவாகத்தினால் பயணத்துக்கான எல்லா ஒழுங்குகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்பட்டன. ஒலுவிலிலிருந்து அம்பாரை, மஹியங்கனை, கண்டி வழியாக கம்பளை நோக்கி வெளிக்கிட்ட பஸ் எப்படியும் ஆறு ஏழு மணித்தியாலங்களில் கம்பளை நகரை வந்தடைந்துவிடும். பஸ் வெளிக்கிடத் தொடங்கியதிலிருந்து மழை பொழிய ஆரம்பித்தது. வானம் விம்மிப் புடைத்துக் காணப்பட்டது. பாதையில் மண் மேடுகள் சரிந்து கற்பாறைகள் பாதையை மறித்துக் காணப்படுகின்றன போன்ற செய்திகளும் பஸ்ஸின் உள்ளே பரவ ஆரம்பித்தன. கண்டி, கம்பளை பகுதிகளில் பலத்த மழை பெய்வதாகவும் பல வீதிகள் நீரில் மூழ்கிக் கிடப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

பயணம் எந்தவித ஆபத்துகளும் இல்லாமல் கண்டி நகரை நெருங்கிக் கொண்டிருக்கையில் பாதுகாப்புப் படையினரால் இடையில் பஸ் நிறுத்தப்பட்டு கூடுதலான வெள்ளம் பரவுவதால் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர்களைப் பின் தொடர்ந்து வருமாறும் கூறி ஒரு பௌத்த விகாரையை நோக்கி அழைத்துச் சென்றனர். பஸ்ஸில் இருந்த எல்லோர் முகத்திலும் அச்சத்தின் ரேகைகள் படர ஆரம்பித்தன. பஸ்ஸிலிருந்து இறங்கி விகாரைக்குள் சென்றபோது அங்கு ஏற்கனவே சில குடும்பங்கள் பாதுகாப்புக் கருதிக்  கொண்டுவரப்பட்டிருந்தன. அமினாவுக்கும் அவளது நண்பிகளுக்கும் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் அங்கிருந்த புத்த பிக்கு ஒருவர் வந்து “நீங்க பயப்படாதீங்க. நிலைமை மோசமாக உள்ளது என்பது என்னவோ உண்மைதான். கண்டி, கம்பளை எல்லாம் பெரும் வெள்ளம். பலத்த காற்று அடிச்சிக்கிட்டிருக்கு. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கு. எங்கட ஆட்கள் எல்லாம் இங்கேயே இருக்கட்டும். நான் பள்ளிவாசல் மௌலவிமாருக்கு அறிவிச்சிருக்கேன். உங்களை வந்து அழைச்சிட்டுப் போவாங்க. என ஆறுதல் வார்த்தைகள் கூறி, வந்தவர்களின் கவலையைப் போக்கினார். கூறி சில நிமிடங்களில் கண்டி பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள் சிலர் ஒரு வேனில் வந்து அமினாவையும் நண்பிகள் மூவரையும் அழைத்துச்சென்று ஒரு முஸ்லிம் வீட்டில் ஒப்படைத்தனர். பஸ் சாரதியும் நடத்துனரும் இன்னும் சில ஆண்  மாணவர்களும் விகாரையில் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டன. அந்த வீடு இரு மாடிகளைக் கொண்ட பெரிய வீடு. அங்கும் வீட்டுச் சொந்தக்காரர்களின் உறவுகளான இரண்டு மூன்று குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி தங்கியிருந்தனர்.

இடி, மின்னல், மழை ஓய்ந்தபாடில்லை. சோவென்ற இரைச்சலுடன் காற்றும் மிக வேகமாக வீசியது. “மவ. நீங்க இப்ப வீட்டுக்கு போவ ஏலா. ஒங்கட உம்மா, வாப்பாக்கு கோல் போட்டு சொல்லுங்க. என ஒரு தாய் கூறியபோது அமினா உடனடியாக தனது தாய்க்கு அழைப்புவிடுத்தாள். அவளது நல்ல காலம் தொடர்பு கிடைத்துவிட்டது.

“மவ. எங்க இருக்கயள். இங்க நிலமை மிக மோசமாக இருக்கு. வந்திடாதீங்க. சரியான தண்ணி வருது. மழையும் பெரிசா பெய்யுது. மண் சரிவும் இருக்காம். எனக் கூறிக்கொண்டிருக்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை முயற்சித்தும் அமினாவினால் உம்மாவுடன் கதைக்க முடியவில்லை. அமினாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. அன்றிரவு முழுக்க பயத்தினாலும் உம்மா, வாப்பா, சகோதரர்கள் பற்றிய கவலையாலும் எவருக்கும் நித்திரை வரவில்லை. சிறுவர்களைத் தவிர எவரும் உறங்கவில்லை.

நள்ளிரவு இரண்டரை மூன்று மணியிருக்கும் “மவ, எழுந்திருங்க. முன்பக்கமெல்லாம் தண்ணி பெரிசா வர ஆரம்பிச்சி. நீர்த்தேக்கம் எல்லாம் தொறந்தாச்சாம். மகாவலி கங்கையும் பெருக்கெடுத்திட்டாம். மேல் மாடிக்குப் போய் பாதுகாப்பா இருப்போம். முதல்ல பொம்பிளைப் பிள்ளைகள் சின்னதுகள் எல்லாம் மேலே போங்க. என வீட்டிலிருந்த பெரியவர் கூறிவிட்டு வீட்டிலிருந்த ஆண் பிள்ளைகள் இருவரையும் அழைத்து கீழ்மாடியில் இருந்த முக்கிய சாமான்களை எல்லாம் மேல் மாடிக்கு ஏற்றத் தொடங்கினார்.  அமினாவும் நண்பிகளும் மேல் மாடிக்குச் சென்று ஒரு ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டனர்.

மறுநாள் பொழுது புலர ஆரம்பித்தது. மழை ஓய்ந்தபாடில்லை. வெள்ளம் வீட்டின் தாள்வாரம் வரை மட்டுமே காணப்பட்டது. வல்ல அல்லாஹ்வின் கருணையால் தங்கியிருந்த வீட்டுக்கு எந்தவொரு பாதிப்புமில்லை.

அவசர அவசரமாக ஒரு குடையைக் கையிற் பிடித்துக் கொண்டு பெரியவர் வெளியே வந்தார். பிரதான வீதி எங்கும் சன நெரிசல். முச்சக்கர வண்டிகள் ஒன்றிரண்டைத் தவிர வாகனங்களைக் காணவில்லை. வெள்ளம் வடிந்தோடும் இடமெல்லாம் சேறும் சகதியுமாகக் காணப்பட்டன. பெரியவரைக் கண்டதும் அவரை நோக்கி வந்த முஸ்தபா ஆசிரியர் “எண்ட அல்லாவே! நம்மட பக்கம் மட்டும்தான் பாதிக்கப்படல்ல போல. பள்ளத்து காணி, கடை, வீடெல்லாம் சரியான மோசம். மிச்சம் மௌத்தும் போல. அரசாங்கம் அவசர கால நிலையை அறிவிச்சிருக்காங்க. கம்பளப் பக்கம்தான் பாதிப்பு அதிகம் போல. பல இடத்தில மலை சரிஞ்சிருக்காம். நான் கண்டிக்கு வந்து அம்பது வருஷமாகுது. இப்படி ஒரு மழையைக் கண்டதில்லை. கம்பளையில வீடுகள் எல்லாம் பத்து பதினைந்து அடி தண்ணி வந்து பெரும் சேதமாம்.என ஆச்சரியப்பட்டுக் கொண்டே நகர்ந்து சென்றார், முஸ்தபா ஆசிரியர்.

 வகமாக வீடு வந்த பெரியவர் “என்ட அல்லாஹ். நுவரெலிய, அக்குரண, கம்பளை எல்லாம் பெரும் சேதமாம். அரசாங்கம் நாடு பூரா அனர்த்த நிலை அறிவிச்சிருக்காம். மிச்சம் பேர் மௌத்தாம். றம்புக் எல என்ற கிராமம் மொத்தமா மண்ணுக்கே போயிடுச்சாம். எத்தனை பேர் மௌத்து என்று தெரியாதாம். ரெண்டு மாடிக்கு மேலே எல்லாம் தண்ணி வந்துச்சாம்.” எனக் கூறிவிட்டு முன்பாகக் கிடந்த கதிரையில் அமர்ந்து தலையைத் தடவிக் கொண்டிருந்தார்.

இதைக்கேட்ட அமினாவுக்குப் பொறி கலங்கியது. றம்புக் எல அவளது தோழி ஜெஸாவின் வீடு அமைந்துள்ள ரம்மியமான கிராமம். கண்டி மாவட்டத்தில் அக்குறண பிரதேச சபைக்குட்பட்ட அலவதுகொட அங்கும்புர பிரதான பாதையின் மத்தியில் காணப்படும் அழகிய பசுமையான கிராமம். அக் கிராமத்தைச் சூழ மலைகள் அமைந்திருப்பது அக்கிராமத்தை மேலும் அழகுபடுத்துகிறது. சுமார் அறுநூறு முஸ்லிம் குடும்பங்கள் வாழும் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். வீட்டிலிருந்து வரும்போது ஜெஸாவின் உம்மா வாப்பா சகோதரர்கள் எல்லாம் றம்புக் எலவில்தான் இருந்தார்கள் என நினைத்தபோது அமினாவுக்கு வயிற்றைக் கலக்கியது. ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு ஜெஸாவை அணுகி,

“ஜெஸா. நம்மட பகுதி பெரிசாப் பாதிச்சிருக்கு போல. அதிலும் உங்கட றம்புக் எலவில் மண் சேதம் அதிகம் போல. உடனே வீட்டுக்கு கோல் போட்டுக் கேளு எனப் பதட்டத்துடன் கூறினாள், அமினா.

ஜெஸா உம்மாவுடன் கதைப்பதற்குப் பல முறை முயற்சி செய்தும் பலனில்லாமல் போயிற்று. அமினாவும் தனது வீட்டுக்கும் பல தடவை கோல் பண்ணிப் பார்த்தாள். தொடர்பு கொள்ள முடியவில்லை. நெருக்கடியான வேளைகளில் தொலைத்தொடர்பும் சதி செய்வது கண்டு மனம் வருந்தினாள். வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வது தவிர வேறு வழியில்லை என நினைத்து அனைவரும் இறைவனைப் பிராத்தனை செய்தனர்.

மதிய வேளை அமினாவின் உம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. மகள் அமினா மகிழ்ந்துபோனாள். ஆனால் உம்மாவோ, குரல் தழுதழுக்க மகளை அழைத்து, மவ. எங்க இருக்கீங்க. இங்க எல்லாம் அழிஞ்சு போச்சு. வீட்டில தண்ணி வருதென்று சொல்லி இரவு எங்களை எல்லாம் அழைச்சிட்டுப் போய் ஒரு எடத்தில தங்க வச்சாங்க. அங்கதான் இப்ப இருக்கம். எங்களுக்கு ஒண்ணும் ஆகல. அல்லாட கருணையால தப்பிச்சிட்டோம். வீடு முழுக்க சேறும் சகதியுமாப் போச்சாம். வீட்டிலிருந்த சாமான் எல்லாம் நாசமாப் போச்சாம். வீட்டுக்குப் போவ ஏலா. இங்க பாதுகாப்பு படையும் வெளியிலிருந்து வந்த ஆக்களும் வீடு காணிகளைச் சுத்தம் பண்ணுறாங்க. உங்க வாப்பாவும் அங்கதான் நிண்டு வேலை செய்றாங்க. நீங்க இப்ப வர வேணா. இருக்கிற இடத்திலேயே கவனமா இருங்க. நம்மட ஜெஸா ஆக்கள் இருந்த வீடெல்லாம் மண்ணுக்குள்ளே புதைஞ்சு போச்செண்டு கதைக்கிறாங்க. அவள்ட உம்மா வாப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அல்லாதான் காப்பத்த வேணும் எனக் கூறி அழத் தொடங்கினார், அமினாவின் உம்மா.

“உம்மா நீங்க கவலைப்படாதீங்க. பாதுகாப்பா இருங்க. இன்று எங்களை ஊருக்கு கூட்டி வாரதா பள்ளிவாசல் ஆட்கள் சொல்லிட்டுப் போறாங்க. வெளிக்கிட்டதும் நான் கோல் எடுத்துச் சொல்றேன்.” எனக் கூறிவிட்டு ஜெஸாவை நோக்கி வந்தாள் அமினா.

ஜெஸாவும் ஏனைய இரு தோழிகளும் தங்களது வீடுகளுக்குத் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஜெஸாவைத் தவிர ஏனைய இருவருக்கும் உம்மா வாப்பாவுடன் கதைப்பதற்கு லைன் கிடைத்துவிட்டதும் அவர்களுடன் உரையாடி ஆறுதல் அடைந்தார்கள். ஆனால் ஜெஸாவுக்கு மட்டும் முடியவில்லை. ஜெஸா மிகவும் பதட்டப்பட்டவளாகவும் பயந்தவளாகவும் காணப்பட்டாள்.

ஜெஸாவின் றம்புக் எல கிராமம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்ட சேதியை ஜெஸாவிடம் கூற முடியாது தவித்தாள் அமினா. நல்ல வேளை சமூக வலைத்தளங்கள் அவர்கள் இருந்த இடத்தில் வேலை செய்யவில்லை. அதுவும் ஒரு வகையில் நன்மையாப் போய்விட்டது.

கண்டி பெரிய பள்ளிவாசல் நிருவாகிகளால் வேன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டு தாய்மார்மகளுடன் ஒரு முதியவரும் அடங்கலாக கம்பளை நோக்கிப் பயணமாவதற்காக ஆயத்தமானார்கள்.

“யா அல்லாஹ். எங்களது ஊர்ப்பகுதிக்கு எதுவுமே நடந்து விடக்கூடாது. எனது உம்மா, வாப்பா, தம்பிமார்களை உயிர்களுக்கு ஆபத்தில்லாமல் காப்பாத்திவிட்டாய். வீடு, வாசல், பொருட்கள் போனாலும் பரவாயில்லை. நீ நாடினால் அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். ஜெஸாவின் நிலைதான் மிகக் கவலையாக இருக்கு. அவள்ட குடும்பத்துக்கு என்ன நடந்தது என்று தெரியல்ல. அவள்ட குடும்பத்தக் காப்பாத்து அல்லாஹ். ஜெஸாட முகத்தைக் கூடப் பார்க்க முடியல்ல. அவ்வளது சோகமா இருக்கா. வல்ல ரஹ்மானே எங்க எல்லோரையும் காப்பாத்து. எனக் கண்ணீர் விட்டு அழுதாள் அமினா.

ம்... எல்லாரும் ஏறுங்க என றைவர் கூறியதும் தன் உம்மா, வாப்பா, தம்பி, தங்கை, வீடு வாசல் அனைத்தும் தான் பிறந்து வளர்ந்து வசித்த மண்ணுக்குள்ளேயே புதையுண்ட செய்தி அறியாது தனது வலது காலை முன்வைத்து உள்ளே ஏறி அமர்ந்தாள், ஜெஸா.

 எஸ்.ஏ. கப்பார்.

25.12.25

No comments: