Monday, February 5, 2024

பயணங்கள் (சிறுகதை 13)

பயணங்கள்.

செல்பேசி அலறியபோது விழித்தெழுந்த நான் ஏற்கனவே இரண்டு அழைப்புகள் வந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். எனது இளைய தம்பி விமான நிலையம் வந்துவிட்டதை அறிந்து அழைப்பை ஏற்படுத்தி, இதோ, பத்து நிமிடத்தில் வந்துவிடுவோம் எனக் கூறி, தொடர்பைத் துண்டித்துவிட்டு விமான நிலையம் செல்ல ஆயத்தமானேன்.

கடந்த முப்பது வருடங்களாக மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து விடுமுறைக்காக அல்லது தனது தொழிலை முடித்துக்கொண்டு ஊருக்கு வருபவர்களையும் அவர்களது உடைமைகளையும் ஏற்றி இறக்குவதுதான் எனது தொழில். இருபத்தைந்து வயதில் ஆரம்பித்த தொழில். இப்போது எனக்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. இத்தனை வருடங்களாகவும் இல்லாத ஒரு பரபரப்பு இன்று. காரணம், அழைத்துவரப் போவது எனது சொந்தத் தம்பியை என்பதால். பத்து வருடங்களின் பின் ஊர் திரும்புகிறான்.

நேற்று அதிகாலை ஊரிலிருந்து வெளிக்கிட்டு அவனது மனைவி மக்கள் குடும்ப சகிதம் கொழும்பு வந்துசேர்ந்தோம்.  இன்று அதிகாலை இரண்டு மணியளவில் தம்பி விமான நிலையம் வந்து சேர்ந்ததும் எனக்கு அறியத்தருவதாகக் கூறியதால் சிறிதுநேரம் அயர்ந்து தூங்கிவிட்டேன்.

அவசர அவசரமாக வெளிக்கிட்டு விமான நிலையம் சேர்ந்தபோது மணி இரண்டரை ஆகிவிட்டது. தம்பி வெளியில் வந்து தனது பயணப்பொதிகளுடன் காத்திருந்தான். ஓடிச்சென்று கட்டித் தழுவிக் கொண்டேன். குடும்பத்தினரும் நலம் விசாரித்து உரையாடினர்.

''தம்பி, இப்ப அதிகாலை இரண்டரை மணிதான் ஆகுது. ஓரளவு வெளிச்சம் வரட்டும் ஊருக்குப் பயணமாவோம். பெண்களும் சிறுவர்களும் இருக்கிறார்கள்'' என்றேன்.

''இல்ல நானா, இப்பவே வெளிக்கிட்டுப் போவோம். எப்படியும் நேரத்தோடு வீட்டுக்குப் போய்விடலாம்'' என்று தம்பி கூறியவுடன் ஏனையோரும் ஆமோதிக்கவே பயணப்பொதிகளை வாகனத்தின் பின்பக்கம் ஏற்றிவிட்டு, ஊரை நோக்கிய பயணத்தை அரை மனதுடன் ஆரம்பித்தேன். 

எட்டு அல்லது பத்து கிலோமீட்டர் தாண்டி வாகனம் சென்று கொண்டிருக்கையில், எங்களது வாகனத்தைத் தொடர்ந்து இரண்டு மூன்று மோட்டார் சைக்கிள்கள் சிக்னல்களைப் போட்டுக்கொண்டு வேகமாக வருவதையும் முன்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்த ஒருவன் அவனது இரண்டு கைகளையும் உயர்த்தி ஏதோ சைகை காட்டுவதையும் அறிந்தேன். அவர்கள் வாகனத்தை நிறுத்தச் சொல்லித்தான் சைகை காட்டுகிறார்கள் என்பதை உணர்ந்தும் குறிப்பிட்ட இடம் பாதுகாப்பு இல்லாத இடமாகையால் நிறுத்தாது பயணத்தைத் தொடர்ந்தேன். இதனை அவதானித்த எனது தம்பியும் குடும்பத்தினரும் வாகனத்தின் வேகத்தைக் குறைக்குமாறு கூறவே வேறு வழியின்றி வேகத்தை நன்றாகக் குறைத்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனத்தை நெருங்கி வாகனத்தின் பின் 

சில்லுகளில் ஒன்று காற்றுப் போகிறது. விபத்தினைத் தடுக்க வாகனத்தை நிறுத்திப் பாருங்கள் என்று கூறிவிட்டு வேகமாக முன்னோக்கிச் சென்று மறைந்துவிட்டார்கள். 

எனது முப்பது வருடகால இத்தொழிலில் இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சந்தித்திருக்கிறேன். நான் வாகனத்தை நிறுத்தாமல் வேகத்தைக் குறைத்து மிக அவதானமாக ஆட்கள் நடமாடும் ஓரிடம் வரும்வரை பயணத்தைத் தொடரத்தான் நினைத்தேன். ஆனால் உள்ளேயிருந்தவர்கள் விபத்து நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் கலவரப்பட்டு வாகனத்தை நிறுத்தி என்னவென்று பார்க்குமாறு  கட்டாயப்படுத்தியதால்தான் நிறுத்தினேன்.

நான் எதிர்பார்த்ததுபோன்றே எங்கிருந்தோ மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எனது வாகனத்தின் முன்னால் வந்து நின்றன. அவற்றிலிருந்து வேகமாக வந்த இருவர் என்னை மறுபக்க வீதி ஓரத்துக்கு  இறங்கிவருமாறு அழைத்தனர். உள்ளேயிருப்பவர்களை இறங்கவேண்டாமெனக் கட்டாயப்படுத்திவிட்டு நான் மட்டும் இறங்கிச் சென்றேன். 

''ஐயா, நாங்க உங்களை எயாபோட்டிலிருந்து பலோ பண்ணித்தான் வாரோம். வெளிநாட்டிலிருந்து சாமான்கள் எல்லாம் கொண்டு வாரது தெரியும். நாங்க எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டோம். எங்களுக்கு காசுதான் வேணும். ஒரு ஐம்பதாயிரம் கொடுத்தாப் போதும். விட்டிடுவோம்.'' என்று அதிலொருவன் கூறிவிட்டு மற்றவனைப் பார்த்து சரிதானே எனத் தலையாட்டினான். அவனும் சரியெனப் பதிலுக்குத் தலையாட்டினான். 

எனது தொழில் அனுபவத்தில் இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சமாளித்து வெற்றிபெற்றதுண்டு. அவ்வாறுதான் இவர்களுடனும் கதைத்துப்பேசி, வாதாடி இறுதியில் ரூபா இருபத்தையாயிரம் கொடுத்துவிட்டு வாகனத்தில் வந்து ஏறினேன்.

''நானா, இதனை இப்படியே விட்டுவிடக்கூடாது. நேரா பக்கத்திலே வார பொலிஸ் ஸ்டேசனுக்குப் போவோம். கொம்ளைன் ஒன்று போட்டு அவங்களைப் பிடிப்போம். இவங்களெல்லாம் கள்ளனுகள்.'' - இளம் இரத்தம் ஆவேசப்பட்டது.

தம்பி அனுபவமில்லாத சின்னப் பிள்ளை. இவனுக்கு எங்கே தெரியப்போகுது நம்மட நாட்டு நடப்புப் பற்றி. பொலிஸுக்குப் போய் அவங்களுக்குப் பந்தம் கொடுத்து, வாகனத்தையும் கொண்டு பொலிஸிலே போட்டு, கடைசியிலே வெறும் இரும்புத் துண்டுகளைத்தான் வீட்டுக்குக் கொண்டுவரணும். இந்தத் தொழிலைப் பொறுத்தமட்டில் இண்டைக்கு இருபத்தையாயிரம் ரூபா இலாபம் என மனதைத் தேற்றிக்கொண்டு ஊர் நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தேன்.

- எஸ். ஏ. கப்பார்

(04-02-2024 ஞாயிறு 76வது தேசிய சுதந்திர தினத்தன்று  'தமிழன்' வார வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)



புதிய தலைமுறை (சிறுகதை 12)

 புதிய தலைமுறை

தெருவிளக்கின் ஒளியிலிருந்து தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் பொருட்டு, எனது வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி, ஒரு முச்சந்தியின் இடப்பக்க வீதியின் ஓரத்தில் மூன்று மாணவிகள் நின்றுகொண்டிருந்தனர். தினமும் தனியார் வகுப்பிற்கு வரும் மாணவிகள். வகுப்பு முடிந்தும் இன்னும் வீடு செல்லவில்லை. வானம் தன்னைப் போர்த்திக்கொள்ள இருளைச் சிறிது சிறிதாக அபகரிக்கும் மாலைப்பொழுது. இவர்களது பெற்றோர்களோ அல்லது அண்ணன் தம்பிமார்களோ இவர்கள் மீது அக்கறையில்லாதவர்கள். இல்லையென்றால் தங்கள் குமர்ப்பிள்ளைகளை இருள் படியும் மாலை வேளைகளில் தனியே விட்டுவைப்பார்களா? எனக்கு வேதனையாக இருந்தது.

சிறிது நேரத்தில், பெரும் உறுமல் சத்தத்துடன் இரு மோட்டார் சைக்கிள்கள் ஆறு இளைஞர்களைச் சுமந்துகொண்டு வேகமாக வந்து சடுதியான நிறுத்தலுடன் இலக்கை அடைந்தன. பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் மூன்றாவதாக அமர்ந்திருந்த இளைஞன் நடுவில் நின்றிருந்த மாணவி மீது ஒருவித பார்வைக் கணையைத் தொடுத்தவாறு அவளது கையில் ஏதோவொன்றைத் திணித்தான். அவளது நண்பிகள் இருவரும் மறுக்கம் திரும்பி நின்றார்கள். மீண்டும் அதே உறுமல் சத்தத்துடன் மோட்டார் சைக்கிள்கள் பறந்து சென்றன. 

இன்றைய தலைமுறை மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கும் இப்படியான நிகழ்வுகளை கண்களால் பார்த்துக்கொண்டிருப்பது கூட பாவம் போல் தோன்றியது. ஒன்றுமே செய்யமுடியாத நிலை. தட்டிக்கேட்டால் முதியவர்கள் என்றுகூடப் பார்க்காமல் எதிர்த்துப் பேசுவார்கள். இருந்தும் மனம் கேட்கவில்லை. மாணவிகளை அணுகி விசாரித்துப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே அவர்களை நோக்கி நடக்கலானேன். நான் ஓர் அடி எடுத்து வைத்ததும் அவர்கள் மூன்றடி எட்டிவைத்து வேகமாக நடந்து மறைந்து விட்டார்கள்.

இரண்டு நாட்களின் பின்னரும் இதே போன்றதொரு காட்சி. அதே இடம். அதே மாணவிகள். அதே மோட்டார் சைக்கிள்கள். முதலாவது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என்னைக் கண்டதும் 'அங்கிள் வாரார்டா, கவனம்' எனக் கூறிக்கொண்டு வேகமாக என்னைக் கடந்துவிட்டனர். மாணவிகள் நின்றிருந்த சிறிய குறுக்கு வீதியில் முச்சக்கர வண்டியொன்று வந்து கொண்டிருந்ததால் அவர்கள் பின்னோக்கி நகர்ந்துசெல்ல முடியவில்லை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட நான், அவர்களை நோக்கிச் சென்று,

'பாடம் முடிந்தால் வீட்டுக்குப் போவது தானே. என்ன ரோட்டுகளில் நின்றுகொண்டு ஆண் பிள்ளைகளுடன் அப்படி என்ன கதை. காலங் கெட்டுப் போய்க் கிடக்கிறது. உம்மா வாப்பா நீங்க படிக்கப்போன என்று நினைச்சிருப்பாங்க. நீங்க என்னடாவெண்டா ரோட்டில நின்றுகொண்டு அரட்டை அடிக்கயள்' 

- ஆத்திரத்தில் சிறிது கோபமாக அதட்டினேன்.

'அங்கிள், அத நாங்க பாத்துக்குவோம். நீங்க ஒங்கட வேலையைப் பாருங்க.'

- நடுவில் நின்றவள் முகத்தில் அறைந்தாற்போல் கூறிவிட்டு வெடுக்கென்று திரும்பி நடந்தாள். மற்றைய இருவரும் அவளைப் பின்தொடர்ந்து வேகத்தை அதிகப்படுத்தினர். நான் வெட்கித்துப்போனேன். ஒரு தந்தைக்குச் சமனான எனக்கு முகத்தில் அடித்ததுபோல் மரியாதையில்லாமல் கூறிவிட்டார்களே என்ற ஆதங்கம் மேலோங்கியது.

வீட்டுக்கு வந்த நான் மனைவியிடம் நடந்தவற்றைக்கூறி வருந்தினேன்.

'சும்மா தேவையில்லாத வேலைகளைப் பார்க்காம இருங்க. அவளுகள் எக்கேடு கெட்டுப்போனால்தான் நமக்கென்ன? நாசமாப் போகட்டும்.'

- மனைவி கூறியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு ஒவ்வொருவரும் ஒதுங்கி ஒதுங்கிச் சென்றால் இந்த இளம் சமுதாயத்தின் நிலை என்னவாகும்? கேட்கப் பார்க்க ஆளில்லாத சமூகமாய்ப் போய்விடும் அல்லவா? இவர்களின் எதிர்காலம் என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே எனக்குப் பயமாயிருந்தது. 

அடுத்த நாள் பிற்பகல் வேளை, மாணவிகள் கல்வி கற்கும் தனியார் நிறுவன ஆசிரியரை அணுகி நடந்தவற்றைக் கூறினேன். அவரும் கவலைப்பட்டார். 

'நாங்கள் பாடம் முடிந்ததும் உடனே வீட்டுக்குப் போய்விடவேண்டுமென்றும் வீதிகளில் நின்று ஆண் பிள்ளைகளுடன் கதைக்கக்கூடாது என்றும் அவ்வாறு ஏதாவது முறைப்பாடு வந்தால் வகுப்புகளுக்கு அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறித்தான் பாடங்களை நடாத்துகிறோம். எங்கட கதைகளையும் கேட்கக்கூடிய நிலையில் இந்தப் பிள்ளைகள் இல்லை.' என எடுத்துரைத்தார். சிறிது நேரம் உரையாடிவிட்டு 'நம்மால் முடிந்ததைச் செய்வோம்' என மனதிற்குள் நினைத்தவாறு வீட்டை வந்தடைந்தேன். 

இன்று மாலை குறிப்பிட்ட மாணவிகளை அந்த முச்சந்தியில் காண முடியவில்லை. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப்போல் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்தால் இளைஞர்களிடையே பரவிவரும் இது போன்ற மோசமான செயற்பாடுகளை  ஓரளவாவது தடுத்துவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. முயற்சி வீண்போகவில்லை என்ற ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டது. அதனால் எப்படியும் இந்த மாணவிகளினதும் மோட்டார் சைக்கிள் பேர்வழிகளினதும் பெற்றோர்களையும் சந்தித்து இச் சம்பவங்கள் பற்றித் தெரியப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. 

அதே எண்ணத்தோடு இருந்த எனக்கு உறங்கச் சென்றதுகூட ஞாபகமில்லை.

'படித்துப் படித்துச் சொன்னேன். இந்தத் தறுதலைகளோட விஷயங்களில் தலையிட வேண்டாமென்று. கேட்டாத்தானே. பாருங்க. நல்லாப் பாருங்க. வீட்டு ஜன்னல் கண்ணாடி எல்லாத்தையும் நொறுக்கிட்டுப் போயிட்டானுகள்.'

நித்திரையில் இருந்த என்னை அவசர அவசரமாக அரட்டி, தலையில் அடித்துக் கொண்டு அலறினாள், என் மனைவி.

நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்.

(07-01-2024 ஞாயிறு 'தமிழன்' வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)





Wednesday, January 3, 2024

அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும். (சிறுகதை - 11)

 அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும்.

துவிச்சக்கர வண்டியை வீட்டு முன்பக்க மாமரமொன்றில் சாத்திவிட்டு உள்ளே நுழைந்த கலையன்பன் வேண்டா வெறுப்போடு தன் கையிலிருந்த ஆவணத்தை மேசை மீது போட்டுவிட்டு நாற்காலி ஒன்றின் மீது வந்தமர்ந்தான்.

கடந்த மூன்று நாட்களாக அலைந்து திரிகிறான். இன்றும் கூட கவிவேந்தல் கனகசபை ஐயாவைச் சந்திக்க முடியவில்லை. இன்று எப்படியும் மதியம் வீட்டில் இருப்பதாகவும் வந்து சந்திக்குமாறும் கேட்டிருந்தார்.  அம்மாவின் வேண்டுதலையும் தட்டிக்கழித்துவிட்டு மதியம் வேகா வெய்யிலில் கனகசபை ஐயாவைச் சந்திக்க அவரது வீடு நோக்கிச் சென்று, இரண்டு மணி நேரம் காத்திருந்து, ஐயாவைக் காணமுடியாமல் திரும்பிவந்துவிட்டான்.

கவிவேந்தல் கனகசபை ஐயாவைத் தெரியாதவர்கள் இலக்கிய உலகில் எவருமில்லை. ஐயா தலைமை வகிக்காத அல்லது கலந்துகொள்ளாத எந்தவொரு நிகழ்வும் ஊரில் நடந்ததாக ஞாபகம் இல்லை. குறிப்பாக இலக்கிய நிகழ்வுகளென்றால் ஐயாதான் தலைமை. ஓய்வு நிலை தலைமை ஆசிரியரான கனகசபை ஐயா உண்மையில் சிறந்த மரபுக் கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். அவரது விமர்சனத்திற்கு உட்படாத இலக்கிய வடிவங்கள் எதுவுமில்லை எனலாம்.

கலையன்பன் வளர்ந்து வரும் இளங் கவிஞன். தனியார் நிறுவனமொன்றில் தொழில் புரிபவன். கடந்த மூன்று நான்கு வருடங்களாகக் கவிதைகள் எழுதி வருபவன். தேசிய நாளேடுகளிலும் சஞ்சிகைகளிலும் அவனது கவிதைகள் இடம்பிடித்துள்ளதோடு பாராட்டுகளையும் பெற்றுள்ளன. கவியரங்குகளில் பங்குபற்றி பரிசில்களும் பெற்றவன். 

அவன் எழுதிய கவிதைகளுள் இருபத்தைந்து முப்பது கவிதைகளைத் தெரிவுசெய்து கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட வேண்டுமென்ற ஆவல் கடந்த ஓரிரு மாதங்களாகப் பற்றிக்கொள்ளவே, தனது கவிதைகளைத் தெரிவுசெய்து தட்டச்சுச் செய்து ஒரு நகல் பிரதியைப் பெற்றுக்கொண்டான். அப்பிரதியைக் கவிவேந்தல் கனகசபை ஐயாவிடம் கொடுத்து மதிப்புரை ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் மூன்று நாட்களாக அலைந்துதிரிகிறான்.

'மகன், நேரம் போயிட்டு இல்ல. கை காலை அலம்பிக் கொண்டு வந்து சாப்பிடுங்க.' 

அம்மா அழைத்த போது எழுந்து கைகளைக் கழுவிக்கொண்டு மதிய உணவை உண்ண ஆரம்பித்தான்.

ஓரிரு கவளங்கள்தான் உட்சென்றன. அதற்குள் அவனது செல்பேசி அலறியது. அம்மா எடுத்து அவனது கையில் கொடுத்தார்.

ஐயா கனகசபை - முணுமுணுத்தவாறு எழுந்து கைகளைக் கழுவிக்கொண்டு புறப்படத் தயாரானான்.

'அம்மா சாப்பாட்டை மூடி வையுங்க. இதோ வந்துவிடுகிறேன். ஐயா வந்திட்டாராம்.'

அம்மாவிடம் கூறிவிட்டு வெளிக்கிட்ட கலையன்பனுக்கு அம்மா கூறிய எதுவுமே காதுக்கேறவில்லை.

கனகசபை ஐயாவின் வீட்டு வெளிச்சுவரில் துவிச்சக்கர வண்டியைச் சாத்திவிட்டு உள்ளே நுழைந்த கலையன்பனை வந்து அமருமாறு அழைத்தார் கலைவேந்தல் கனகசபை ஐயா.

தான் வந்த விடயத்தைச் சுருக்கமாகக் கூறினான்.

'தம்பி, எங்க பார்த்தாலும் புத்தக வெளியீட்டு விழாவாத்தான் இருக்கு. ஒரு நாளைக்கு பத்துப் பதினைந்து கவிதை நூல் வெளிவருது. ஒரு நூலாவது உருப்படியா இல்ல, ஒன்று இரண்டைத் தவிர. என்ன செய்வதெண்டு தெரியாம நாங்களும் கலந்துகொள்ளத்தான் வேண்டியிருக்கு. நீயும் என்ட சொந்தக்காரப் பொடியன். ஒண்ட கவிதைகள் ஒரு சிலதைப் பார்த்திருக்கேன். பரவாயில்லை. எப்படியும் இரண்டொரு வாரத்துக்குள்ள நல்லபடியா எழுதித்தாறன். எழுத்துப் பிழையில்லாம அச்சிட்டு எடு. விழா நடத்துறதுக்கு இரண்டு கிழமைக்கு முன் என்னை வந்து சந்தித்து விழா நடத்துற இடத்தையும் நாளையும் கலந்தாலோசி. எனக்குப் பல சோலி. தலைமை தாங்குறதெண்டா நானும் ஆயத்தப்படுத்தவேண்டும். என்ன? நான் சொல்லுறது சரிதானே?' 

மளமளவெனக் கூறி முடித்தார், கனகசபை ஐயா.

தனது கவிதைத் தொகுதிக்கு மதிப்புரை கேட்டுவந்த கலையன்பன், விழாத் தலைவராக அவரையே போடச் சொல்லி நாசூக்காகக் கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தான். செய்வதறியாது சரி, ஐயா எனக் கூறிவிட்டு விடைபெற்றான்.

இரு மாதங்கள் கடந்துவிட்டன. தங்குதடையின்றி நூல் வெளியீட்டு வேலைகள் எல்லாம் நிறைவுற்று,  விழாக்கோலம் போடும் நாளும் வந்தது.

அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் உறவினர்களும் நண்பர்களும் தவிர எதிர்பார்த்தவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே வந்திருந்தனர். அத்துடன் முக்கியஸ்தர்களான தலைவர் கலைவேந்தல் கனகசபை ஐயாவும் முதன்மை அதிதி ராசமாணிக்கம் அதிபர் ஐயாவும் இன்னும் சமுகமளிக்கவில்லை. அமைதியாக இருந்த கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. கதாநாயகன் கலையன்பனுக்குப் பதைபதைக்கத் தொடங்கியது. 

கூட்டத்தில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் 'நீங்க கூட்டத்தை ஆரம்பியுங்கோ. ஐயா கொஞ்சம் லேட்டாத்தான் வருவார்' என்றதும் அவரது வேண்டுகோள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வேறொருவரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

வரவேற்புரை, தலைமையுரை, மதிப்புரை, ஆய்வுரை, முதற்பிரதி - சிறப்புப் பிரதி வழங்கல், சிற்றுண்டி உபசாரம்,  இன்னிசை மழை, பொன்னாடை போர்த்தல், புகைப்படம் எடுத்தல் எல்லாம் சிறப்பாக நடந்தேறின. இறுதியாக நன்றியுரை மற்றும்  ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது. 

 ஒவ்வொருவராக கலையன்பனை அணுகி வாழ்த்துக் கூறி விடைபெறும்போது, 'தம்பி, கனகசபை ஐயாவும் ராசமாணிக்கம் அதிபரும் ஒருவர் போற இடத்துக்கு மற்றவர் போறதில்லையென்று தெரியாது போல. ராசமாணிக்கம் அதிபருக்குப் பதிலா வேறொருவரை போட்டிருக்கலாமே'   எனச் சத்தமாகக் கூறிவிட்டு நகர்ந்தார்.

வீடு வந்துசேர்ந்த கலையன்பனுக்கு நூல் வெளியீட்டுக்காக வங்கியில் அடகு வைத்த அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும்தான் அடிக்கடி மனதிற் தோன்றி மறைந்தன.

எஸ். ஏ. கப்பார்

04-12-2023.

(10-12-2023 ஞாயிறு 'தமிழன்' வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)