Tuesday, February 28, 2023

சிறுகதை 4 - சித்தியின் வருகை.

 சிறுகதை. 

சித்தியின் வருகை

'சித்தி... சித்தி... சித்தி... எப்ப பார்த்தாலும் சித்திதான்' சீறிப் பாய்ந்தாள் அக்கா.

'சிடுமூஞ்சி. இப்ப என்ன நடந்ததென்று ஆத்திரப்படுறாய்? சொல்ல வந்ததை என்னவென்று காது கொடுக்காமலே கோபப்பட்டால் எப்படி?' பதிலுக்கு நானும் எனது தொனியைக் கடுமையாக்கினேன்.

என் அக்கா ஒரு பட்டதாரி ஆசிரியை. ஊரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றுகிறார். பாடசாலையில் அக்காவுக்கு நல்ல பெயர். மாணவர்களுடனும் சக ஆசிரியர்களுடனும் அன்பாகப் பழகும் ஓர் ஆசிரியை என அறியப்பட்டவர். அவரது கணவரும் ஒரு பட்டதாரிதான். தற்போது தலைநகரில் பிரபல நிறுவனமொன்றில் நல்ல சம்பளத்துடன் கடமையாற்றிவருகிறார். ஆண் ஒன்று பெண் ஒன்று என அவர்களுக்கு இரு பிள்ளைகள். இருவரும் பாடசாலை செல்லும் சிறுவர்கள். மச்சான் இரு வாரங்களுக்கொரு முறை மனைவி மக்களை வந்து பார்த்துச் செல்வார். 

'அக்கா! நீ நினைப்பதுபோல சித்தி மோசமானவ இல்ல. ஆரம்பத்தில நானும் சித்திமேல வெறுப்பாகவும் கோபமாகவும்தான் இருந்தேன் என்பது உனக்கு நல்லா தெரியும். மாமா வந்து எல்லா விடயங்களையும் தெளிவாக விளங்கப்படுத்தி நம்மட சம்மதத்தைப் பெற்ற பிறகுதானே அப்பா நம்மைவிட்டுப் பிரிந்து போன அம்மாவின் வீட்டுக்கு சித்தியைக் கூட்டிவந்தார். சித்தி புறப்படும் வேளையாவது நீ ஒரு வார்த்தை பேசேன்' 

நான் தொடர்ந்தேன். அக்கா எதையும் காதுக்கெடுத்துக்கொள்ளவில்லை என்பதைப் புரிந்துகொண்டு அமைதியானேன்.

நான்கு வருடங்களுக்கு முன்...

சித்தி அம்மாவின் வீட்டிற்கு வந்தது எங்களுக்கு அறவே பிடிக்கவில்லை என்பது உண்மைதான். சில வருடங்கள் சுகயீனமுற்றிருந்த எங்கள் அம்மா அவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் பிரிந்துவிடுவார் என கனவிற்கூட எண்ணியதில்லை. கவலையை மறப்பதற்கு பல மாதங்களாயின. அக்காவுக்கு பக்கத்துக் காணியில் எல்லா வசதிகளும் கொண்ட தனி வீடுகட்டி சிறப்பான முறையில் திருமணத்தையும் செய்துவைத்ததில் அம்மாவின் பங்கு அளப்பரியது. நானும் திருமணம் முடித்து நன்றாகத்தான் வாழ்ந்துவருகிறேன். அம்மாவின் மரணம் சில காலம் அக்காவின் பிள்ளைகளுக்கும் அக்காவுக்கும் பெரும் இழப்பாக இருந்தது. மறுபுறம் அப்பாவின் நிலைமை பெரும்பாடாகி விட்டது. முன்புபோல தனது வியாபாரத்தில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. ஏனோ தானோவென்று தனது கடமைகளை நிறை வேற்றுவதை அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு நாட்கள் நகர்கையில் ஒரு நாள் மாமா எங்களது வீட்டிற்கு வந்தார். மாமா மீது எங்களுக்கு அபரிதமான மரியாதை. அவரது வார்;தைக்கு யாரும் மறுப்புத் தெரிவிப்பதில்லை. கதைக்கும் போது இடையில் குறுக்கறுத்து ஒருபோதும் பதிலளிப்பதுமில்லை.

'இஞ்ச பாருங்க. எனக்கும் பெரும் ஆச்சரியமாத்தான் இருக்கு. இது எப்படி சாத்தியமானது என்று எனக்கு தெரியல. நேத்து தம்பி சமீம் அவரது வீட்டுக்கு வரச்சொல்லி போன நான். தம்பி சமீம் அவர்ர பெண்டாட்டியையும் கூட்டிவந்து அம்மாவுக்கு துணையா அந்த வீட்டிலதான் இருக்கார். அம்மாவுக்கு ஒரேயொரு மகன். சமீம் தம்பிக்கு பிள்ளைகளும் இல்ல. அவரது அப்பா காலமாகியும் பல வருடங்களாகிவிட்டன.'

மாமா என்ன சொல்லவருகிறார் எனப் புரியாமல் அக்காவும் நானும் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டோம்.

மாமா தொடர்ந்தார்.

'தம்பி. அவவும் உங்க அப்பாவும் ஒரே வகுப்பில படிச்சவங்களாம். படிச்ச காலத்துல நல்ல நண்பர்களாகவும் இருந்திருக்காங்க. உங்க அம்மா மரணத்திற்குப் பிறகு அவ உங்க அப்பாவோட கதைச்சிருக்கா. ஒங்க அப்பா ஆரம்பத்தில அடியோட மறுத்திருக்காரு. அப்பாவ முழுமையா கவனிக்கிறதுக்கு ஒண்ட அக்காவாலோ உன்னாலேயோ முடியா. நீயும் வேலைக்குப் போற. அவவும் வேலைக்குப் போற. அக்காவுக்கு சின்னப் பிள்ளைகளும் ரெண்டு. அப்பாவுக்கும் உடல் நிலை அவ்வளவு நல்லா இல்ல. அதனால உங்கப்பாவ அவ மறுமணம் செய்து உங்க அம்மாவின் வீட்டுக்கே வந்து இருக்கப்;போறாவாம்.'

சிறிது நேரம் தலையைச் சொறிந்துவிட்டு மாமா தொடர்ந்தார்.

'இத ஆரம்பத்தில தம்பி சமீமும் மறுத்திருக்கார். பிறகு அம்மா சொன்ன காரணங்களை நியாயமா கருதி ஒத்துக்கிட்டிருக்கார். அதனால உங்க அப்பாகிட்ட கதைக்கிறதுக்கு முன்னே உங்கட சம்மதத்தைக் கேட்கணு மென்றுதான் வந்த நான்'

முதற்தடவையாக மாமாவின் பேச்சுக்கு இடைநிடுவே குறுக்கறுத்தாள் அக்கா.

'என்ன நியாயம் மாமா இது? யாரோ ஒருவளைக் கூட்டி வந்து இவதான் இனி அம்மா என்றால் நாங்க ஏத்துக்குவோம் என்று நினைக்கிறீங்களா? அப்பா கண்ணுக்குப் பிறகு சொத்துக்களையும் அம்மாட நகைகளையும் சுருட்டிக் கொண்டு போய்விடலாம் என்று திட்டமிடுராங்க போல.  அப்பாவுக்கு நல்ல புத்தி சொல்லாம நீங்களும் துணை போகிறீங்க. சீ...'

அக்காவின் வார்த்தைகளைச் சற்றும் எதிர்பாராத மாமா நிலைகுலைந்துவிட்டார். அவரது முகம் கறுத்துப்போனது. என்னால் அவரது முகத்தைப் பார்க்கப் பெரும் சங்கடமாக இருந்தது.

'அக்கா. என்ன கதையிது. மாமா என்று ஒரு மரியாதை இல்லாமல்...'

எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று மெல்லிய குரலில் அக்காவைக் கண்டித்தேன்.

'இந்த இளவெல்லாம் எனக்குத் தெரியாது. அப்படி அப்பா சித்தி கித்தி என்று யாரையாவது கூட்டிவந்தா என்ர வளவுக்குள்ள ஒருவரும் வரப்போடா. என்ர பிள்ளைகளையும் பார்க்கக்கூடா.'

அக்காவின் வார்த்தைகள் அனலாகப் பறந்தன. தொடர்ந்து நானும் மாமாவும் மாறிமாறி அப்பா சார்பான நியாயங்களை எடுத்துக்கூறி வாதிட்டோம். அவள் மசியவில்லை. இறுதியில் அக்காவைச் சமாதானப்படுத்த முடியாமல் மாமாவும் நானும் அவ்விடத்தைவிட்டு நகர்ந்துவிட்டோம்.

நான் தினமும் அம்மா வீட்டுக்குச் சென்று அப்பாவை நலம் விசாரித்து அவரது தேவைகளையும் கவனித்து வந்தேன். வெளியேறும்போது அக்காவையும் பிள்ளைகளையும் பார்த்துவருவதையும் வழக்கமாக்கிக்கொண்டேன்.

சுமார் மூன்று மாதங்களின் பின் எங்கள் வீட்டிற்கு சித்தி வரப்போவதாக மாமா மூலம் அறிந்தேன். பதிவுத் திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் தானே முன்னின்று செய்துமுடித்ததாகவும் மகன் என்ற உரிமையில் என்னால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் என்னை மாமா வினயமாக வேண்டிக்கொண்டார்.

காலம் மிக வேகமாக கடந்து சென்றது. சித்தி அம்மா வீட்டுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நான்கு வருடங்களில் ஒரு நாளாவது அக்காவின் வீட்டுப் படிக்கட்டில் கூட சித்தி காலடி எடுத்து வைக்கவில்லை. அக்கா சித்தியை ஒருபோதும் அப்பாவின் மனைவியாக ஏற்றுக்கொள்ளவுமில்லை. மதிக்கவுமில்லை. ஆனால் அக்காவின் பிள்ளைகள் சித்தியைப் பார்ப்பதையும் சித்தி அக்காவின் பிள்ளைகளுக்கு ஏதாவது உணவுப் பண்டங்கள் கொடுப்பதையும் அக்கா தடைசெய்யவில்லை. 

திடீரென ஒரு நாள் அப்பா மயக்கமுற்று கீழே விழுந்து மூர்ச்சையாகிவிட்டார். அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். சிகிச்சை பலனளிக்கவில்லை. அப்பா சித்தியையும் எங்களையும் விட்டுப் பிரிந்துவிட்டார். இறுதிக் கடமைகளைச் சிறப்பாக செய்துமுடித்தோம்.

அப்பா மரணித்து ஏழு நாட்களின் பின் சித்தி என்னை அழைத்தார். மாமா என்னிடம் ஏற்கனவே கூறிய விடயமாகத்தான் இருக்கும் என்பதால் என்னை நானே தைரியப்படுத்திக்கொண்டேன்.

'மகன், அப்பா மரணித்து ஏழு நாட்களாகிவிட்டன. அவருக்கு நான் செய்யவேண்டிய மார்க்கக் கடமைகள் பல உள்ளன. நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்ததில்லை. நல்ல நண்பர்களாகத்தான் வாழ்ந்தோம். இருந்தபோதும் ஊர் உலகத்துக்கு கட்டுப்படவேண்டியது நமது கடமை இல்லையா?'

'நானும் உங்கப்பாவும் ஒரே பாடசாலையில் ஒன்றாகப் படித்தவர்கள்தான். படிக்கும் காலத்திலேயே அவர் நல்ல கவிதைகளையும் கதைகளையும் எழுதுவார். மாணவ மன்றங்களிலெல்லாம் கவிதை பாடுவார். நான் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டி ஆரவாரப்படுவேன். சக மாணவர்கள் என்னையும் அப்பாவையும் காதலர்களாகக் கற்பனை பண்ணியதுண்டு. ஒரு முறை உங்கப்பா பத்திரிகைக்கு அனுப்பிய சிறுகதை ஒன்று முதற்பரிசு பெற்றது. அது அவ்வார இதழில் வெளிவந்தது. வகுப்பு மாணவர்கள் ஒன்றுசேர்ந்து ஆழுக்கொரு பிரதி வாங்கி வீட்டுக்கு கொண்டுவந்து படித்தோம்.' 

'மறுநாள் எங்களது வகுப்பு மாணவத் தலைவன் எழுந்து உங்கப்பாவைப் பாராட்டி மாலை அணிவித்தான். யாரும் எதிர்பாராதவாறு, 'இந்தக் கதையில் வருவதுபோல் கதாநாயகனின் மனைவி இறந்தால் வகுப்பு மாணவி யாராவது அவரை மறுமணம்  செய்துகொள்வீர்களா?' என வேடிக்கையாகக் கேட்டு கை உயர்த்தச் சொன்னான். யாருமே முன்வரவில்லை, என்னைத் தவிர. அன்று விளையாட்டாகச் செய்தது. இன்று உண்மையாகிவிட்டது.'

சித்தியின் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்தேன். சித்தி தொடர்ந்தார்.

'உங்க அம்மா மரணித்து சில நாட்களின் பின் உங்கப்பாவை வைத்தியசாலையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாவின் மரணம் பற்றி விசாரித்து ஆறுதல் கூறினேன். மிகவும் கவலையுடன் காணப்பட்டார். தனக்குள்ள நோய்கள் பற்றி வேதனைப்பட்டார். நோயின் தாக்கம் அதிகரிக்கும் காலத்தில் தன்னைக் கவனிக்க மனைவி இல்லையே என ஆதங்கப்பட்டார். பிள்ளைகளுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் தானும் மரணித்துவிட வேண்டுமெனக் கூறினார். அதனால் என்ன இன்னொரு திருமணம் செய்துகொள்ளுங்களேன் என்று கூறினேன். வசதி வாய்ப்புகள் இருக்கும்போது மார்க்கமும் அதனை அனுமதிக்கிறதுதானே என்றேன். அவர் மறுத்துவிட்டார்.'

சித்தி இடைநிறுத்தி ஒரு பெருமூச்செறிந்தார். அதன் பின் நடந்தவற்றை என்னிடம் கூற சங்கடப்படுகிறார் என உணர்ந்த நான் சித்தியிடம் மேலும் எதுவும் கேட்கவில்லை.

சித்திதான் தொடர்ந்தார்.

'மகன் நான் இன்றிரவு என் வீட்டுக்குப் போறன். அப்பா போன பிறகு எனக்கு இங்கு என்ன வேலை. நீங்க உங்கப்பாவையும் என்னையும் நல்லா பாத்துக்கிட்டீங்க. நீங்க நல்லா இருப்பீங்க. அக்காதான் உங்கப்பாவின் நிலைமையையும் என்னையும் புரிஞ்சுக்கல்ல. அக்காவையும் பிள்ளைகளையும் கூட்டிக்கு வாங்க. நான் அவக்கும் சித்திதான்.'

சித்தி என்னை அணைத்து உச்சி முகர்ந்தார். நான் திகைத்துப்போய் அமைதியாக நின்றேன். 

இருள் கவ்வத் தொடங்கி வெகு நேரமாகிவிட்டது. சித்தி உள்ளே சென்று அவரது உடுப்புகள் கொண்ட கைக்கடக்கமான ஒரு பையை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து எனது காரின் பின் பக்கம் வைக்கச் சொன்னார். ஏதோ நினைத்தவராக வெளியே வந்து அக்காவின் வீட்டுப் பக்கம் காலடி எடுத்து வைத்தவர் தொடர முடியாமல் பின்வாங்கிவிட்டார்.

'மகன் வாங்க, போவோம்.'

சித்தியின் பையினை எடுத்துக்கொண்டு எனது வாகனத்தை நோக்கி நடந்தேன். காரின் பின் கதவைத் திறக்க முற்பட்டபோது கண்களில் முட்டியிருந்த கண்ணீர் தடுத்தது. அதற்குள் சித்தி திறந்து கொண்டு உள்ளே அமர்ந்துவிட்டார்.

காரின் முன்பக்கமாக நடந்து சென்று முன் கதவைத் திறந்து, இருக்கையில் அமர்ந்து வாகனத்தை இயக்க முற்பட்டபோது செல்பேசி அலறியது.

'சித்தியின் வருகைக்காக அவரது மகனும் மருமகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்'- முணுமுணுத்தவாறு வாகனத்தை நகர்த்தினேன்.

- எஸ். ஏ. கப்பார்.

26-02-2023.

(26-02-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)














Wednesday, February 15, 2023

சிறுகதை 3 - தாய் வீடு.

 சிறுகதை.

தாய் வீடு.

இன்று மூன்றாவது நாள்.

என்னோடு கோபித்துக் கொண்டு அவளது தாய் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் நான் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. அடுத்த நாளோ அல்லது இரண்டாவது நாளோ வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை மூன்று நாட்களாகியும் வரவில்லை. எனக்கு என்னவோ போலிருந்தது. ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. பிரிவை நினைக்கும் போது நெஞ்சு பாரமாக இருந்தது. அப்படி எங்களுக்குள் சண்டை என்று பெரிதாக ஒன்றுமில்லை. பரஸ்பர புரிந்துணர்வு போதாது, அவ்வளவுதான். இத்தனைக்கும் நாங்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. நான் ஒரு முன்கோபி. எதையும் எடுத்தெறிந்து பேசும் சுபாவம். அதுவும் உண்மைதான். மற்றவர்களை புண்படுத்த வேண்டும் என்றோ அல்லது அவமானப்படுத்த வேண்டும் என்றோ நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தவறுகளும் அநியாயங்களும் எங்கு நடந்தாலும் அங்கு என் குரல் ஒலிக்கும். அதை சிலர் பிழையாக விளங்கிக்கொண்டு என்னை விமர்சிப்பார்கள். அதை நான் ஒரு பொருட்டாக கொள்வதுமில்லை. 

என் மனைவிகூட என்னை ஒரு பிடிவாதக்காரன் என்றும் எதையும் ஒத்துக்கொள்வதில்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். எடுத்ததற்கெல்லாம் கோபித்துக் கொண்டு அவ்வளவு தாய் வீடு செல்வது வழக்கமாகிவிட்டது. எனக்கு அவமானத்தையும் பக்கத்து வீட்டாரிடையே ஒருவகை தன்மானப் பிரச்சினையையும் தோற்றுவித்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. இதன் எதிர்விளைவுகளை எண்ணிப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இலேசாக வியர்க்கத் தொடங்கும்.

நாளை ஹஜ்ஜுப் பெருநாள். இருவர் மனதிலும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குடிகொண்டிருந்ததை இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு நாளைய பெருநாளைக் கொண்டாட ஆயத்தமாக இருந்தோம். பலகாரங்களையும் உணவுப் பொருட்களையும் தயாரிப்பதில் அவள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு ஒத்தாசைகள் செய்து கொண்டிருந்தேன். திடீரென ஏதோ நினைவு வந்தவளாக உள்ளே சென்றாள். அலுமாரி திறக்கும் சத்தம் எனக்கு கேட்டது. நேற்று அவளுக்காக வாங்கி வந்த அழகிய விலையுயர்ந்த செருப்புச் சோடியை எடுத்து வந்தாள். 

'என்ன? நல்லதென்று திரும்பத் திரும்ப பார்க்கிறாயா?' என்றேன். 

'இல்ல! நல்ல அழகாத்தான் இருக்கு. விலைதான் மிச்சம் அதிகம் என்றாள். 

'இப்ப என்னதான் விலையில்ல. எல்லாம் ஆனை விலதான்' என்றேன். 

நான் கூறியதை அவள் கவனிக்கவில்லை என்பது எனக்கு நன்கு புரிந்தது. ஏதோ ஒன்றை அவள் கூர்ந்து அவதானிப்பதும் தெரிந்தது. எனக்கு லேசாகப் பயம் பரவத்தொடங்கியது. நாளை பெருநாள். விபரீதமாக ஏதும் நடந்துவிடக் கூடாதென இறைவனை வேண்டிக்கொண்டேன். 

'இஞ்ச பாருங்க, இந்தப் பட்டியை. பிஞ்சு போய் திரும்ப ஒட்டி இருக்கான் போல.' 

அவளது குரல் கேட்டு எனக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு விட்டது. புதுச் செருப்பைப் போய் யாராவது ஒட்டி இருப்பானா? - எனது கேள்வி எடுபடவில்லை. கடைக்காரனிடம் திருப்பிக் கொடுத்து வேறொன்று மாற்றிவரச் சொன்னாள். நான் மறுத்தேன். முடிவு அவள் தாய் வீடு சென்றுவிட்டாள். பக்கத்து வீட்டுக்காரரிடம் பெருநாளைக்கு அவள் தாய்வீடு சென்றுவிட்டாள் என்றும் இன்றிரவே வீடு வந்துவிடுவாள் என்றும் பொய் சொன்னேன். அது பொய்யல்ல, மெய்யென நிரூபிக்க அவள் அன்றிரவே வந்துவிட்டாள்.

இன்னொரு நாள் அவளது நண்பியின் திருமணம். வேலைக்குப் போவதற்குமுன் பத்துத் தடவையாவது சொல்லி இருப்பாள். 

'பாருங்க, என் உயிர் நண்பியின் திருமணம். நான் கட்டாயம் நாலு மணிக்கெல்லாம் அங்கு இருக்கவேணும். ஏதும் பிரச்சினை என்றால் சொல்லிடுங்க. லீவு போட்டுவிட்டு இருந்திடலாம் என்றாள். 

'இல்லை ஜெஷி, நான் இண்டைக்கு கட்டாயம் வேலைக்குப் போகவேண்டும். எப்படியாவது நாலு மணிக்குள்ளே வந்திடுவேன்' என்றேன். 

'இஞ்சபாருங்க, நாமளும் நாலு கல்யாண வீடு, சாவீடென்று போனாத்தான் நம்மட சாவு வாழ்வுக்கும் நாலுபேர் வருவாங்க. வேலை வேலை என்று திரிந்தால் நம்மள ஊர் ஒதுக்கிடும்.' அவளது புத்திமதி எனக்கு உறைத்தது.

அன்று வழக்கத்திற்கு மாறாக நேரத்தோடு வெளிக்கிட்டு வேலைக்குப் புறப்பட்டேன். ஆனால் அவளுக்களித்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் ஐந்து மணிக்கு வந்து நின்று விழிபிதுங்கினேன்.  அவள் ஒன்றுமே கூறாமல் திருமண வீட்டுக்குப்போக ஆயத்தமாக நின்றது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இருவரும் திருமண வீடுசென்று மணமக்களை வாழ்த்திவிட்டு இரவு எட்டு மணியளவில் வீடு வந்தடைந்தோம். எனக்குக் கை கால்கள் எல்லாம் வலித்தன. விழுந்து படுத்தால் சுகமாக இருக்கும் போலிருந்தது. அப்படியே முன்ஹாலில் கிடந்த சோபாவில் மெதுவாகச் சாய்ந்தேன். நித்திரை என்னை ஆட்கொண்டுவிட்டது. விழித்துப் பார்த்தபோது மணி பத்தரை ஆகிவிட்டது. கண்களைக் கசக்கி கைகளை உயர்த்தியபோது தொலைபேசி அலறியது. ரிஸீவரைத் தூக்கினேன். 

'என்ன மச்சான் எப்ப பார்த்தாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அக்கா சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கு வருவதும் போவதுமாக. நாலு அறை அறைந்து அடக்கி வைக்கத் தெரியாதா உங்களுக்கு? உம்மா அழுது கொண்டே இருக்கா. வாப்பா ஆத்திரத்தில் கத்திக்கொண்டிருக்கிறார்.' 

அவளது தங்கையின் குரல் கேட்டு எனக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. ரிஸீவரைக் கீழேவைத்துவிட்டு அவள் வருகைக்காக வாசலில் காத்துநின்றேன்.

மூன்று நாட்கள் தனிமையில் எவ்வாறு காத்துக்கிடந்தேன் என எனக்கே புரியவில்லை. மனதுக்கு மிகப் பாரமாக இருந்தது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளாமல் தவிப்பதும் தாங்களாகவே பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டு பரிதவிப்பதும் எனக்கு மட்டுமல்ல, அவளுக்கும் நன்கு புரியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ இன்னும் பழகிக்கொள்ள முடியவில்லையே என எண்ணும்போது கவலையாகவே இருந்தது. அதற்கான வாய்ப்புக்கூட ஏற்படவில்லை, ஒரு குழந்தை வடிவிலாவது. என்னதான் இருந்தாலும் அவள் என் ஜெஷp. அவளை எப்படியாவது சமாதானப்படுத்தி அழைத்துவர நினைத்து எழுந்த என்னை முச்சக்கர வண்டிச் சத்தம் வேகமாக நிமிர்ந்துபார்க்க வைத்தது. அவள் திரும்பி வந்துவிட்டாள்.

எழுந்த நான் அப்படியே நின்றேன். உள்ளே வந்தவள் என்னை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மின்விளக்குகளையும் மின்விசிறியையும் உயிர்ப்பித்தாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது வீடும் நானும் உறங்கிக்கிடந்தது. மின்விசிறியின் அரட்டலில் விழித்துக்கொண்ட அவ்வார இதழொன்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது. அதைக் கையிலெடுத்து மீண்டும் சோபாவில் சாய்ந்தேன், இன்னும் சில நாட்களுக்கு என் ஜெஷp என்னைத் தவிக்கவிட்டு தாய்வீடு செல்லமாட்டாள் என்ற நம்பிக்கையுடன்.

- எஸ். ஏ. கப்பார்.

(22-01-2023 ஞாயிற்றுக்கிழமை தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு மிக்க நன்றி.)

சிறுகதை 2 - அப்பாவின் டயரி.

சிறுகதை.

அப்பாவின் டயரி.

என் அப்பாவின் டயரியைத் தொட்டுப் பார்க்கும் துணிவுகூட யாருக்கும் கிடையாது. வீட்டிலுள்ள அவரது அலுவலக அறையினை அணுகுவதற்குக்கூடப் பயப்படுவோம். வீட்டில் அவருக்கென்று ஒரு பிரேத்தியேக அறை உண்டு. அதனை ஷஅப்பாவின் அலுவலக அறை| என்றுதான் கூறுவோம். உள்ளே ஒரு சிறிய நூலகமும் அவரது தனிப்பட்ட ஆவணங்கள் கொண்ட சிறிய அலுமாரி ஒன்றும் மடிக்கணினி, அச்சிடும் கருவி, இணைய இணைப்புடனான தொலைபேசி என்பன மேசைமீதும் காணப்படும். நாங்கள் காரணமின்றி உள்ளே செல்வது கிடையாது. அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டும் உள்ளே சென்று ஏதாவது அச்சிட்டுக்கொண்டு சென்றதை சில தடவைகள் கண்டதுண்டு.

என் அப்பா, எமது நாட்டில் கணனி அறிமுகமான காலப்பகுதியிலேயே கணினிக் கல்வியை நன்கு கற்று டிப்ளோமா பட்டமும் பெற்றவர். அது சம்பந்தமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். அத்தோடு இடைக்கிடை பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதுமுண்டு. அவர் ஒரு நல்ல வாசகர். எனக்கோ கலை, இலக்கியம், கணினி சம்பந்தமான விடயங்கள் வெகு தூரம்.

வெகு நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் என் அப்பாவின் அலுவலக அறைக்குள் சென்றேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. சிறியதோர் இடத்தில் அந்த அறை அழகாகக் காட்சியளித்தது. புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட குறிப்புகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன. மடிக்கணினி மற்றும் அச்சிடும் கருவி என்பன அளவான துணிகள் கொண்டு மூடப்பட்டிருந்தன. வௌ;வேறு அளவுகளைக் கொண்ட அச்சிடும் தாள்கள் நேர்த்தியாக பொதியிடப்பட்டதுபோல் காணப்பட்டன. எழுதுகருவிகள் வைக்கப்பட்டிருந்த அழகு தனியழகு.

அலுமாரியின் பக்கம் என் கவனம் திரும்பியபோது அதன் கதவு பூட்டப்படாமல் திறந்து கிடப்பதை உணரமுடிந்தது. மெதுவாக திறந்ததும் கண்ணில் எளிதாகத் தெரியக்கூடியவாறு ஷஅப்பாவின் டயரி| உள்ளே காணப்பட்டது. அதனை எடுத்துக்கொண்டு அலுமாரிக் கதவைச் சாத்திவிட்டு பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டு டயரியைப் புரட்ட ஆரம்பித்தேன். டயரியைப் புரட்டியதும் என் அப்பாவின் கைகள் என்னைத் தொட்டு வருடியது போல் ஓர் உணர்வு ஏற்பட்டு சிறிது தடுமாறினேன். வெளியே நீட்டிக்கொண்டு சிறிய அடையாளத்தாள் ஒன்று டயரியின் நடுவே காணப்பட்டது. அந்தப் பக்கத்தை முதலில் புரட்டினேன். 

'என் இனியவளுக்கு இன்று இறுதிநாள்' என சிவப்பு நிற மையால் எழுப்பட்டிருந்தது. எழுத்துகள் நீரில் நனைந்ததுபோல் கலங்கியிருந்தன. என் அப்பாவின் கண்ணீராக இருக்குமோ என நினைத்தபோது என் நெஞ்சு படபடத்தது. சுவாசம் தடைப்படுவதுபோல் இருந்தது. கண்கள் பனித்தன. சுதாகரித்துக்கொண்டு ஏனைய பக்கங்களைப் புரட்டலானேன். ஐந்தாறு நாட்கள் வெறுமையாக் கிடந்தன. எதுவுமே எழுப்படவில்லை.

'இன்று வெள்ளிக்கிழமை. இன்றுதான் முதன்முதலாக என் இனியவளின் அறையைத் திறந்து உள்ளே சென்றேன். வெப்பமோ குளிரோ இல்லாத ஒருவகை வெதுவெதுப்புக் காணப்பட்டது. அவளது சுவாசத்தின் வாசனை என்னைத் திக்குமுக்காட வைத்தது. என்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் வெளியே வந்துவிட்டேன். கவலைகளை கண்ணீர் மூலம் வெளியேற்ற எண்ணி தோல்விகண்டேன்.' இவ்வாறு அந்தப்பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டொரு பக்கங்கள் வெறுமையாகக் காணப்பட்டன. 

'இன்று திங்கட்கிழமை. நான் அவளுடன் உரையாடினேன். எங்களது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி வெகுவான அக்கறையோடு நல்ல பல கருத்துகளைக் கூறினாள். மூத்த மகள் பிறந்தபோது நாட்டில் ஏற்பட்டிருந்த இன முறுகல் காரணமாக வைத்தியசாலைக்குச் செல்லமுடியாமல் வைத்தியரான அவளது சகோதரனின் துணையோடு வீட்டிலேயே பிரசவம் பார்த்து எந்தவொரு ஆபத்துமில்லாது இருவரையும் காப்பாற்றிய சம்பவத்தை நினைவு கூறி பரவசப்பட்டாள். அடிக்கடி படைத்தவன் பார்த்துக்கொள்வான் என்று கூறினாள். ஷஷம்|| என்று தலையாட்டிக்கொண்டேன்'. 

தொடர்ந்து வந்த தினங்களில் எனக்குத் தெரியாத பல விடயங்களும் எழுதப்பட்டிருந்தன. எனக்கு வாசிக்க வாசிக்க ஒரு வகை பயம் குடிகொள்ளத் தொடங்கியது. அப்பா ஏதோ கவலையில் அடிமனதில் பதிந்திருந்த எண்ணங்களைப் பிதற்றியிருக்கலாம் என எண்ணத் தோன்றியது. இருந்தும் எனக்குள் ஏற்பட்ட பயம் அதிகரித்துக்கொண்டு செல்லவே தொடர்ந்தும் படிக்கலானேன். சுமார் ஒரு மாத இடைவெளியில் இடைக்கிடை என்னவெல்லாமோ எழுதப்பட்டிருந்தன. அம்மாவின் இழப்பு என் அப்பாவின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் உணரமுடிந்தது. நடந்து முடிந்த ஒவ்வொரு நிகழ்வினையும் மீட்டிப் பார்க்கப் பார்க்க எனக்கே பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. கதிரைமீது நன்றாகச் சாய்ந்து கொண்டு  கால்களை நீட்டி டயரியை என் நெஞ்சில் சுமந்துகொண்டேன். நெஞ்சும் பாரமாக இருந்தது. உடல் அனலாகக் கொதிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

'இன்று என் அன்பு மனைவி என்னைவிட்டுப் பிரிந்து நாற்பதாவது நாள். நேற்றிரவு அவளைச் சந்தித்துப் பேசினேன். எவ்வளவோ கூறியும் அவள் கேட்கவில்லை. பிள்ளைகளையும் ஏனைய விடயங்களையும் படைத்தவன் பார்த்துக்கொள்வான். என்னோடு வந்துவிடுங்கள். என்னால் தனிமையில் வாழமுடியாது. சொல்வதைக் கேளுங்கள் என்றாள். நானும் நாளை காலை உன்னோடு வாழ்வதற்கு வந்துவிடுவேன் என உறுதியளித்தேன்.' 

இரண்டு மூன்று பக்கங்களின் பின் எழுப்பட்டிருந்த அப்பாவின் வரிகளைப் படித்ததும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அப்பா சித்தப்பிரமை பிடித்ததுபோல் இருந்த நாட்களிலாவது இந்த டயரியைப் பார்த்திருக்கூடாதா என எண்ணி பெரும் வேதனைப்பட்டேன். அப்பாவை நாங்கள் பார்த்ததெல்லாம் ஒரு கோபக்காரராகவும் பிடிவாதக்காரராகவும் காரசாரமான ஒரு மனிதராகவுமே. இவ்வளவு தூரம் எங்கள் அம்மாவோடு அன்பாக உயிருக்குயிராக வாழ்ந்தவர் என்று தெரியாமல் போய்விட்டது. கண்கள் கண்ணீரைச் சொரிய ஆரம்பித்தன. ஏதோ தவறுசெய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு ஆட்கொள்ளத் தொடங்கியது. நாங்கள் அக்கறையற்றவர்கள் என்ற எண்ணம் மேலோங்க குறிப்பு எழுதப்பட்ட அன்றைய தினத்தினை நோக்கினேன். நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது. உடல் தளர்வடையத் தொடங்கியது. கை கால்கள் உதற ஆரம்பித்தன.

'இன்று அன்புக்கும் பாசத்திற்கும் உரிய அப்பா எங்களை விட்டுப் பிரிந்த நாள் - இப்படிக்கு, மூத்த மகன்' என கை விரல்கள் நடுங்க நடுங்க சிவப்பு மையால் அப்பாவின் வரிகளைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். என் வரிகளும் கண்ணீரில் கரைந்து கலங்கத் தொடங்கின...

- எஸ். ஏ. கப்பார்.

(08-01-2023 ஞாயிறு தமிழன் - வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு மிக்க நன்றி.)



சிறுகதை 1 : துரோகம்

சிறுகதை.

துரோகம்.

பொலிஸ் நிலையத்தை நெருங்க நெருங்க...

என் மனம் பதைபதைத்தது. பாசம் பரிதவித்தது. அதேவேளை நாட்டுப் பற்று மறுதலித்தது.  உடல் கனலாகக் கொதித்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன... குளமாகின... கால்கள் நடக்க மறுத்தன... 

நான் ஓர் ஆசிரியை. எனது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்தார். எங்களுக்கு ஒரேயொரு பெண்பிள்ளை. படிப்பில் மட்டுமல்ல, பாடசாலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு அவளது திறமையை வெளிக்காட்டிய கெட்டிக்காரி. நான் கற்பித்தது பெண்கள் பாடசாலை. ஆகையால், அப்பாடசாலையிலேயே என் மகளையும் சேர்ப்பித்தேன். எங்கள் இருவரையும் என் கணவர்தான் காலையில் பாடசாலைக்குக் கூட்டிச்சென்று விட்டு விட்டு வேலைக்குச் செல்வார். பாடசாலை முடிந்ததும் முச்சக்கரவண்டியொன்றில் வீடு வந்து சேர்வோம்.

இருவரது வருமானமும் எங்களது சின்னஞ்சிறு குடும்பத்தை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும்  வாழ வழிவகுத்தது. மகளின் எதிர்காலம் ஒளி மயமானதாக இருக்கவேண்டும் என்பதில் இருவரும் மிகக் கவனமாக இருந்தோம். க. பொ. த. (சாஃத) பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று எங்களது பாடசாலைக்கும் எங்களுக்கும் பெருமை சேர்த்தாள். அதே பாடசாலையில் உயர்தர வகுப்பில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. உயர்தர வகுப்புப் பாடங்கள் ஆரம்பமாகி ஓரிரு வாரங்களில் முழு உலகையும் ஆட்டிப்படைத்த கொரோனா எமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை. அடிக்கடி பாடசாலைகள் மூடப்படுவதும் நாட்டின் வௌ;வேறு பகுதிகள் இடைக்கிடை 'லொக் டவுன்' செய்யப்படுவதும் ஊரடங்குகள் அமுலாக்கப்படுவதும் எங்களது குடும்பத்தையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்தன. 

இதன் விளைவாக எனது கணவர் ஒழுங்காகத் தொழிலுக்குச் செல்வதில் உண்டான தடங்கல்கள் அவரது வருமானத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  வேலைக்குச் செல்லாமல் பல நாட்கள் வீட்டில் தனியாக தங்கியிருந்தார். அவர் வேலை செய்த நிறுவனமும் தொழிலைக் கொண்டு நடத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது. அவரது சொந்தச் செலவுகளுக்கே என்னிடம் பணம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவருக்கொரு தன்மானப் பிரச்சினையை ஏற்படுத்தி அவரது மனோநிலையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் எங்கள் குடும்பத்தில் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நாளாந்தம் கிடுகிடுவென்று ஏறிச்சென்றது. எனது மாதச் சம்பளம் இரு வாரங்களுக்கே போதுமானதாக இருந்தது. எனவே, என்ன செய்வதென்று அறியாமல் விழிபிதுங்கி நின்றோம்.

வேறுவழியின்றி கணவரிடம் நாசூக்காகப் பேசி அவரை ஒரு தொழிலைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டி நின்றேன். அவரும் பல இடங்களிலும் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு நல்ல இடத்தில் வேலை கிடைத்துள்ளதாகக் கூறினார். நல்ல சம்பளம் என்றும் கூறினார். மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது. 

மாதங்கள் பல கடந்தன. நாட்டின் நிலைமைகளும் படிப்படியாக வழமைக்குத் திரும்ப ஆரம்பித்தன. நாட்டு மக்கள் வழமைபோல் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். திருமண நிகழ்வுகளும் உல்லாசப் பயணங்களும் சமய நிகழ்வுகளும் களைகட்டத்தொடங்கின. பாடசாலைகளும் ஒழுங்காக நடைபெற்றன. 

இப்போதெல்லாம், கணவரின் தொழில் வேலைப் பழு காரணமாக, அவர் வீட்டில் தங்குவது மிகவும்  குறைந்தது. எங்களைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்வதுமில்லை. வீட்டு வேலைகளிலும் பங்குகொள்வதில்லை. எங்கள் மீதுள்ள அக்கறை படிப்படியாகக் குறைந்து வருவதை உணரக்கூடியதாக இருந்தது. நாங்களும் பொறுமையாக இருந்து நாட்களைக் கடத்தி வந்த வேளையில், என்  உறவினர் ஒருவர் மூலம் கிடைத்த ஒரு தகவல் என்னையும் என் மகளையும் கதிகலங்க வைத்தது. 

ஒரு நாசகாரக் கும்பலுடன் சேர்ந்து போதை தரக்கூடியதும் பாடசாலை  மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடக் கூடியதுமான  ஒரு வகை போதை மாத்திரைகளை என் கணவர் விநியோகம் செய்கின்றார் என்ற தகவல்தான் அது. என் கணவர் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாக ஆரம்பத்தில் இத்தகவலை எனது மனம் நம்ப மறுத்தது. பின்னர் படிப்படியாக அவரது நடவடிக்கைகள் அவரது தேசவிரோதச் செயலை உறுதிப்படுத்தின. இது எமது எதிர்கால மாணவ சமூகத்திற்குச் செய்யும் பாரதூரமான துரோகம் எனச் சுட்டிக்காட்டி இச் செயலை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். அழுதேன். அவரோ இணங்கவில்லை. என்னைத் துன்புறத்திக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தினார். 

இறுதியாக, இந் நாட்டின் எதிர்காலச் செல்வங்களான  மாணவ சமூகத்தின் விடிவுக்காக எனது மனதைக் கல்லாக்கிக்கொண்டு எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் இன்றி எனது கணவரின் தேசவிரோதச் செயலை நாட்டுக்குப் பறைசாற்றி தண்டனை வழங்கக் கோரி பொலிஸ் நிலையத்தை நோக்கி நடக்கலானேன்.

பொலிஸ் நிலையத்தை நெருங்க நெருங்க...

- எஸ். ஏ. கப்பார்.

(18-12-2022 ஞாயிறு தமிழன் - வார வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு மிக்க நன்றி.)