Wednesday, February 15, 2023

சிறுகதை 2 - அப்பாவின் டயரி.

சிறுகதை.

அப்பாவின் டயரி.

என் அப்பாவின் டயரியைத் தொட்டுப் பார்க்கும் துணிவுகூட யாருக்கும் கிடையாது. வீட்டிலுள்ள அவரது அலுவலக அறையினை அணுகுவதற்குக்கூடப் பயப்படுவோம். வீட்டில் அவருக்கென்று ஒரு பிரேத்தியேக அறை உண்டு. அதனை ஷஅப்பாவின் அலுவலக அறை| என்றுதான் கூறுவோம். உள்ளே ஒரு சிறிய நூலகமும் அவரது தனிப்பட்ட ஆவணங்கள் கொண்ட சிறிய அலுமாரி ஒன்றும் மடிக்கணினி, அச்சிடும் கருவி, இணைய இணைப்புடனான தொலைபேசி என்பன மேசைமீதும் காணப்படும். நாங்கள் காரணமின்றி உள்ளே செல்வது கிடையாது. அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டும் உள்ளே சென்று ஏதாவது அச்சிட்டுக்கொண்டு சென்றதை சில தடவைகள் கண்டதுண்டு.

என் அப்பா, எமது நாட்டில் கணனி அறிமுகமான காலப்பகுதியிலேயே கணினிக் கல்வியை நன்கு கற்று டிப்ளோமா பட்டமும் பெற்றவர். அது சம்பந்தமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். அத்தோடு இடைக்கிடை பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதுமுண்டு. அவர் ஒரு நல்ல வாசகர். எனக்கோ கலை, இலக்கியம், கணினி சம்பந்தமான விடயங்கள் வெகு தூரம்.

வெகு நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் என் அப்பாவின் அலுவலக அறைக்குள் சென்றேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. சிறியதோர் இடத்தில் அந்த அறை அழகாகக் காட்சியளித்தது. புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட குறிப்புகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன. மடிக்கணினி மற்றும் அச்சிடும் கருவி என்பன அளவான துணிகள் கொண்டு மூடப்பட்டிருந்தன. வௌ;வேறு அளவுகளைக் கொண்ட அச்சிடும் தாள்கள் நேர்த்தியாக பொதியிடப்பட்டதுபோல் காணப்பட்டன. எழுதுகருவிகள் வைக்கப்பட்டிருந்த அழகு தனியழகு.

அலுமாரியின் பக்கம் என் கவனம் திரும்பியபோது அதன் கதவு பூட்டப்படாமல் திறந்து கிடப்பதை உணரமுடிந்தது. மெதுவாக திறந்ததும் கண்ணில் எளிதாகத் தெரியக்கூடியவாறு ஷஅப்பாவின் டயரி| உள்ளே காணப்பட்டது. அதனை எடுத்துக்கொண்டு அலுமாரிக் கதவைச் சாத்திவிட்டு பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டு டயரியைப் புரட்ட ஆரம்பித்தேன். டயரியைப் புரட்டியதும் என் அப்பாவின் கைகள் என்னைத் தொட்டு வருடியது போல் ஓர் உணர்வு ஏற்பட்டு சிறிது தடுமாறினேன். வெளியே நீட்டிக்கொண்டு சிறிய அடையாளத்தாள் ஒன்று டயரியின் நடுவே காணப்பட்டது. அந்தப் பக்கத்தை முதலில் புரட்டினேன். 

'என் இனியவளுக்கு இன்று இறுதிநாள்' என சிவப்பு நிற மையால் எழுப்பட்டிருந்தது. எழுத்துகள் நீரில் நனைந்ததுபோல் கலங்கியிருந்தன. என் அப்பாவின் கண்ணீராக இருக்குமோ என நினைத்தபோது என் நெஞ்சு படபடத்தது. சுவாசம் தடைப்படுவதுபோல் இருந்தது. கண்கள் பனித்தன. சுதாகரித்துக்கொண்டு ஏனைய பக்கங்களைப் புரட்டலானேன். ஐந்தாறு நாட்கள் வெறுமையாக் கிடந்தன. எதுவுமே எழுப்படவில்லை.

'இன்று வெள்ளிக்கிழமை. இன்றுதான் முதன்முதலாக என் இனியவளின் அறையைத் திறந்து உள்ளே சென்றேன். வெப்பமோ குளிரோ இல்லாத ஒருவகை வெதுவெதுப்புக் காணப்பட்டது. அவளது சுவாசத்தின் வாசனை என்னைத் திக்குமுக்காட வைத்தது. என்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் வெளியே வந்துவிட்டேன். கவலைகளை கண்ணீர் மூலம் வெளியேற்ற எண்ணி தோல்விகண்டேன்.' இவ்வாறு அந்தப்பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டொரு பக்கங்கள் வெறுமையாகக் காணப்பட்டன. 

'இன்று திங்கட்கிழமை. நான் அவளுடன் உரையாடினேன். எங்களது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி வெகுவான அக்கறையோடு நல்ல பல கருத்துகளைக் கூறினாள். மூத்த மகள் பிறந்தபோது நாட்டில் ஏற்பட்டிருந்த இன முறுகல் காரணமாக வைத்தியசாலைக்குச் செல்லமுடியாமல் வைத்தியரான அவளது சகோதரனின் துணையோடு வீட்டிலேயே பிரசவம் பார்த்து எந்தவொரு ஆபத்துமில்லாது இருவரையும் காப்பாற்றிய சம்பவத்தை நினைவு கூறி பரவசப்பட்டாள். அடிக்கடி படைத்தவன் பார்த்துக்கொள்வான் என்று கூறினாள். ஷஷம்|| என்று தலையாட்டிக்கொண்டேன்'. 

தொடர்ந்து வந்த தினங்களில் எனக்குத் தெரியாத பல விடயங்களும் எழுதப்பட்டிருந்தன. எனக்கு வாசிக்க வாசிக்க ஒரு வகை பயம் குடிகொள்ளத் தொடங்கியது. அப்பா ஏதோ கவலையில் அடிமனதில் பதிந்திருந்த எண்ணங்களைப் பிதற்றியிருக்கலாம் என எண்ணத் தோன்றியது. இருந்தும் எனக்குள் ஏற்பட்ட பயம் அதிகரித்துக்கொண்டு செல்லவே தொடர்ந்தும் படிக்கலானேன். சுமார் ஒரு மாத இடைவெளியில் இடைக்கிடை என்னவெல்லாமோ எழுதப்பட்டிருந்தன. அம்மாவின் இழப்பு என் அப்பாவின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் உணரமுடிந்தது. நடந்து முடிந்த ஒவ்வொரு நிகழ்வினையும் மீட்டிப் பார்க்கப் பார்க்க எனக்கே பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. கதிரைமீது நன்றாகச் சாய்ந்து கொண்டு  கால்களை நீட்டி டயரியை என் நெஞ்சில் சுமந்துகொண்டேன். நெஞ்சும் பாரமாக இருந்தது. உடல் அனலாகக் கொதிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

'இன்று என் அன்பு மனைவி என்னைவிட்டுப் பிரிந்து நாற்பதாவது நாள். நேற்றிரவு அவளைச் சந்தித்துப் பேசினேன். எவ்வளவோ கூறியும் அவள் கேட்கவில்லை. பிள்ளைகளையும் ஏனைய விடயங்களையும் படைத்தவன் பார்த்துக்கொள்வான். என்னோடு வந்துவிடுங்கள். என்னால் தனிமையில் வாழமுடியாது. சொல்வதைக் கேளுங்கள் என்றாள். நானும் நாளை காலை உன்னோடு வாழ்வதற்கு வந்துவிடுவேன் என உறுதியளித்தேன்.' 

இரண்டு மூன்று பக்கங்களின் பின் எழுப்பட்டிருந்த அப்பாவின் வரிகளைப் படித்ததும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அப்பா சித்தப்பிரமை பிடித்ததுபோல் இருந்த நாட்களிலாவது இந்த டயரியைப் பார்த்திருக்கூடாதா என எண்ணி பெரும் வேதனைப்பட்டேன். அப்பாவை நாங்கள் பார்த்ததெல்லாம் ஒரு கோபக்காரராகவும் பிடிவாதக்காரராகவும் காரசாரமான ஒரு மனிதராகவுமே. இவ்வளவு தூரம் எங்கள் அம்மாவோடு அன்பாக உயிருக்குயிராக வாழ்ந்தவர் என்று தெரியாமல் போய்விட்டது. கண்கள் கண்ணீரைச் சொரிய ஆரம்பித்தன. ஏதோ தவறுசெய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு ஆட்கொள்ளத் தொடங்கியது. நாங்கள் அக்கறையற்றவர்கள் என்ற எண்ணம் மேலோங்க குறிப்பு எழுதப்பட்ட அன்றைய தினத்தினை நோக்கினேன். நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது. உடல் தளர்வடையத் தொடங்கியது. கை கால்கள் உதற ஆரம்பித்தன.

'இன்று அன்புக்கும் பாசத்திற்கும் உரிய அப்பா எங்களை விட்டுப் பிரிந்த நாள் - இப்படிக்கு, மூத்த மகன்' என கை விரல்கள் நடுங்க நடுங்க சிவப்பு மையால் அப்பாவின் வரிகளைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். என் வரிகளும் கண்ணீரில் கரைந்து கலங்கத் தொடங்கின...

- எஸ். ஏ. கப்பார்.

(08-01-2023 ஞாயிறு தமிழன் - வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு மிக்க நன்றி.)



No comments: