Saturday, January 30, 2010

Saddaippaikkul Sankili

சட்டைப்பைக்குள் சங்கிலி.

பக்கத்து மாணவனின்
பென்சிலைத் திருடி
மூன்றாக்கிச் சட்டைப்பைக்குள்
மறைத்து விட்டேன்.

சட்டைக்குள் என்னவென
சடுதியாய் விசாரணை
சங்கிலி என்றேன்
கிலிபிடித்து நின்றநான்.

அன்று அதிபராயிருந்த
என் அப்பாவின்
ஐந்து விரல்களும்
என் கன்னத்தில்.

இன்று சங்கிலியைக் காணும்போதெல்லாம்
என் சட்டைப்பைக்குள் பென்சிலையும்
கன்னத்தில் வடுவினையும் - ஏதோ
எண்ணத்திற் தேடுகிறேன்.

Moonkil Ninaivu

மூங்கில் நினைவு.

முட்கம்பி தாண்டி
மூங்கில் மரம்தறித்து
முழுசாய் முடிவதற்குள்
முதுகில் மூங்கிலடி.

வாரிச் சுருட்டி
வேலி பாய்ந்து
வீடு வந்தபோது
விழுந்த அடிகள்
மூங்கில் தாகினை
முழுமை பெறச்செய்தன.

முந்தநாள் மூத்தமகன்
மூங்கில் வேண்டுமென்று
முகத்தைப் பார்த்தபோது
முதுகைத் தடவிக்கொண்டேன்.

முப்பது வருடங்களாக
முதுகைத்தான் தடவுகிறேன்
மூங்கில் நினைவுமட்டும்
முதுகைவிட்டு நீங்கவில்லை.

Naveena Aasankal

நவீன ஆசான்கள்

வகுப்பிலொரு ஆசான்
வரும் பதவியுயர்ப்
பரீட்சைக்காய் விழுந்தடித்துப்
படிக்கின்றார் பாலகர்முன்.

இன்னுமொரு ஆசான்
இன்சிரியூட் பாடங்களை
இதமாய்த் திருத்துகிறார்
இதுவும் வகுப்பறையில்தான்.

சொந்த வேலையென்று
சோலிகளைக் கவனிக்க
சென்றிடுவார் இன்னொருவர்
சோக்குக்கட்டிகளை எறிந்துவிட்டு.

செல்போனைக் கையிலெடுத்து
சேதி அறிந்திடுவார்
வருகிறேன் இதோ என்று
பைக்கை முறுக்கிடுவார் வேறொருவர்.

அதிபரும் பிள்ளைகளும்
அமைதியாய் இருப்பதுகண்டு
ஆச்சரியப்படுவர் மற்றைய
ஆசான்கள் ஆத்திரத்துடன்.

ஆத்திரப்படும் ஆசான்கள்
அல்லா ஹ்வுக்குப் பயந்தவர்களாம்
அப்படியும் ஒருகதை
அங்கு உலவுகிறது

பிள்ளைகளின் பள்ளிவிட்ட
பின் படிப்பும் (ரியூஷன் கல்வி)
அதிபரின் சைட் வருமானமும்
அந்த ஆசான்களின் கையில்தானாம்.

Mazhai

மழை

மழையின் முதற்துளி
மண்ணில் விழுமுன்
முதற்சென்று நிற்பாளென்
மூத்த மகள்.

காலில் செருப்பிருக்காது
கையில் குடையிருக்காது
தலையில் தொப்பியிருக்காது
தரையில் காலுமிருக்காது.

மழைதான் அவளுக்கு நண்பன்
மழைதான் அவளுக்கு உணவு
மழைதான் அவளுக்கு உறக்கம்
மழைதான் அவளுக்கு எல்லாம்.

தொப்பாகி நிற்பாள்
தோணிவிட தொடர்மழையில்
மிஞ்சாது அந்நாளில்
மின்சாரப் பட்டியலும்
தொலைந்து விடும்
தொலைபேசிப் பட்டியலும்.

புத்தகத்தின் நடுப்பக்க மெல்லாம்
புதிய மழைக்குச் சொந்தம்
கதிகலங்கி நிற்பாள் என்மனைவி
கட்டுப்பாடு பெண்ணுக்கு வேண்டுமென்று.

என் பிள்ளைப்பருவம் எண்ணிப்பார்ப்பேன்
பின் நானும் நின்றுரசிப்பேன்
பிள்ளை வளர்க்கத் தெரியாதென்பாள்
பின் அவளும் வந்துரசிப்பாள்.

எண்ணிப் பார்த்தது
நான் மட்டுமல்ல - என் மனைவியும் தான்.

Zahar Unavu

ஸஹர் உணவு

அதிகாலை நாலுமணியிருக்கும்
அங்கும் இங்கும்
அழகழகாய்ப் பரப்பிக்கிடக்கும்
அமுதுவகை மேசையிலே.

ஒரு பிடிபிடித்து
ஓரக்கண் நிமிர்ந்து பார்ப்பர்
ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தை.

நேரம் இருப்பின்
நெடிய வாழைப்பழங்கள்
நாலு உட்சென்றுவிடும்
நாழிகை ஆகுமுன்னே.

அதற்கும் மேலே
அரையவியல் முட்டையொன்று.
அதைக் கீழிறக்க
அப்பிள்ஜூஸ் வேறு
ஆஹா! இதுவல்லவோ ஸஹர் உணவு.

விழித்துப் பார்ப்பர்
விழி பிதுங்கும் -
விடிந்துவிட்ட சங்கதிகேட்டு
வீணானது நோன்பொன்றுதான்.

88888

அலறி அடித்துக்கொண்டு
அண்ணார்ந்து பார்ப்பாள்
சுவரில் தொங்கும்
சுவர்க் கடிகாரத்தை - அது
சுட்டும் நாலரைமணிதனை.

அருகிற் படுக்கும் கணவன்
அவனருகில் அன்புச் செல்வங்கள்
அவசர அவசரமாய் அவர்களையெழுப்பி
அன்புமொழி பேசி அமுதூட்டி
ஆனந்தமாய் ஸஹர் உண்பாள்.
அதான் கேட்டதும்
அவள் சென்றிடுவாள் தொழுகைக்கு
அவர்களையும் பள்ளிக்கு
அனுப்பி விட்டு.

88888

அரட்டி விடுவதற்கோ
அண்ணார்ந்து பார்ப்பதற்கோ
இங்கு கடிகாரம் ஒன்றுமில்லை
இவர்களுக்குப் பிள்ளைகளுமில்லை.
தள்ளாத வயதில்
தயவு அல்லாஹ்தான்.

அகப்பட்டதை அகப்பையில்
அள்ளி எடுத்துண்டு
அல்ஹம்துலில்லாஹ் எனக்கூறி
ஆவலாய்க் காத்திருப்பர்
அதான் கூறும்வரை - சிலவேளை
அதான் கூறியுமிருக்கும்.

Nilavu Aval

நிலவு அவள்.

அங்கேபார் முழுமதியை
அதைப்பிடித்து நான்தருவேன்
அன்பேயழகே நீ
அமுதுண்ணு ஆரமுதே!

அன்னையின் அரவணைப்பில்
அமுதுண்ணும் பிஞ்சும்
அண்ணார்ந்து பார்ப்பது
அந்த நிலவைத்தான்.

பள்ளி நாட்களையும்
பாட வேளையையும்
விளையாட்டாய்ப் போக்கிவிட்டு
விதிதான் இதுவென்று

அங்கலாய்த்து ஆர்ப்பரித்து
ஆரவாரப்படும் மாணவனும்
கடற்கரை மண்ணிலே
கலங்குவது அந்நிலவிடம்தான்.

கடன்தொல்லை தாங்காது
கடற்பரப்பில் குப்புறப்படுத்து
பெருமூச்சுவிடும்
பெருந் தகைக்கும்
நிமிர்ந்து பார்க்கும்போது
நிலவுதான் தஞ்சம்.

புத்தக நடுப்பக்கத்தில்
புதைத்து வைத்த
புத்தம்புதிய சிகரட்டை
பற்றவைத்து பரவசப்பட்டு

புகையினை உள்ளிழுத்து
பூமிக்கு எதிர்த்திசையில்
பூக்களாய் ஊதும்போதும்
புன்னகைப்பது அந்நிலவுதான்.

அதோபார் முழுமதியென
அவளை நிமிரவைத்து
அதிர்ச்சி முத்தமொன்று
அதிரடியாய் காதலுக்களித்து
ஆனந்தப்படும் காதலனுக்கும்
அன்புச்சாட்சி அந்நிலவுதான்.

காதலிலே தோல்வியுற்று
கதி கலங்கி
நீலவானின் நிலாவொளியில்
நீள் போத்தலொன்றை
இடுப்பிலிருந்து இதமாக
இழுத்தெடுத்து போதையின்பங்காணும்
இளைஞனையும் இனிவேண்டாமென
எச்சரிக்கை செய்வதும்
எம் நிலவுப்பெண்தான்.

நீதிமன்று நீவந்து
நீதானவள் காதலென்று
நீள்விரல் காட்டி
நீதி பகர்ந்துவிட
நிலத்திற்கு அழைப்பதும்
நிலா உனைத்தான்.

நீண்ட பயணத்தின்
நிழல்களாக வந்துநிற்கும்
நிம்மதி இல்லா
நித்திரையற்ற இரவுகளை
தவிர்த்துவிட எண்ணி
தள்ளாடும் வயதினிலும்
தரையமரும் தாத்தாக்களுக்கும்
தஞ்சம் அந்நிலவுதான்.

பூரண கண்விழிக்கும்போது
பூமி விழித்துக்கொள்வதுபோல்
கண்ணிமை பதிக்கும்போது
காதலர்கள் விழித்துக்கொள்வதேன்?

காதலர்களுக்கும் உன்மேல்
கட்டுக்கடங்கா காதல்போல்.

Vendaam Uththam

வேண்டாம் யுத்தம்...

வேகத்தைக் குறைத்து
வீதித்தடை தாண்டி
வலதுபக்கம் திரும்பிப்பார்க்கிறேன்
வெறிச்சோடிக் கிடக்கிறது ஷசெக்பொயின்ட்|.

செக்குமாடுகள் போல்
சுற்றிச் சுற்றிவந்த
ஒருவரையும் காணவில்லை - அந்த
ஒரு கருப்பு நாயையும்தான்.

நான் தினமும் வேலைக்குச்செல்லும்
நன்கு பரிச்சயமான பாதைதான்.

பலமுறை வானை நிறுத்திவிட்டு
பல்லிழித்து அடையாளம் காட்டிரூபவ்
அனுமதி கிடைத்ததும்
அடிதடுமாறி தப்பிப்பிழைத்தோ மென
மீண்டும் வாகனத்தில் ஏறி
மறைந்ததும் இங்குதான்.

தாய் தந்தை தாரம்
தம்பி தங்கை அண்ணா
மாமன் மாமி மச்சான்
மதினி மக்கள் உறவுகளெல்லாம்ரூபவ்

நலிந்து நடைப்பிணமாகி
நாறிவிட்ட நிலையில்
நடை பயின்று
நல்லபல பண்புகளுடன்
மீண் டெழுவதைக்
காணும் போதுரூபவ்

வேண்டாம் வேண்டாம்
மீண்டுமொரு யுத்தம்
எம் ரூடவ்ழத்திருநாட்டில்
இனி மேலும்!

En Kaathal Neethan

என் காதல் நீதான்...

பள்ளி வகுப்பறை முன் பந்தியிலே
கள்ளிபோல் என் பக்கம் வந்தமர்ந்து
விரல் நுனிகொண்டு புறங்கால் வருடி
விழிபிதுங்கும் என்னை வேடிக்கை பார்ப்பாள்.

விட்டென்று விலகி விரல்படா தூரம்தாண்டி
விந்தையாய் அவள் விழிகளை நோக்கின்
விஷமத்தனம் செய்யும் சிறு பிள்ளையாய்
விழியுருட்டி வேடிக்கை காட்டிடுவாள்.

பள்ளி விட்டு வெளியில் வரும்போதும்
தள்ளி நின்று கை அசைத்து
தந்திரங்கள் பல செய்து சுமை
தாங்கவொனா என் இதயத்தைத் தாக்கிடுவாள்.

கடைத் தெருவினிலும் கல்யாண வீட்டினிலும்
கல்லூரி விழாக்களிலும் களியாட்ட நிகழ்ச்சியிலும்
தன் இடக்கண் மடித்து இமையுயர்த்தி
என் இதயம் ஒருகணம் நிறுத்திவைப்பாள்.

வெலவெலத்து சுற்றும் முற்றும் பார்ப்பேன்
வெள்ளரிப் பழம்போல் அவள்முகம் தோன்றும்
வெட்கித் தலைகுனிந்து - அவளல்ல நான்தான்
வெயர்ப்புத் தோன்றி விரல்களைப் பிசைவேன்.

கல்லூரிப் படிக்கட்டின் முடி நிலைக்
கட்டொன்றில் கால்தடுக்கி எனை விழவைத்து
கட்டிக்கப் போறவள் கைபிடித்துக் காப்பாற்றினாற்
களங்கம் வந்திடுமோ உன் கற்புக்கென்றாள்.

இத்தனையும் செய்த அவள் ஏனென்னை
இச்சையின்றி வெருவலர் போல் வெருட்டுகிறாள்?
பூனையாய் இருந்த என்னைப் புலியாக்கிவிட்டு
பூச்சிகாட்டுகிறாளா பூட்கை இன்றி!

எட்டி உதைத்து எச்சில் உமிழ்ந்து
ஏளனப்படுத்தி என்மீது எரிகணை வீசிடினும்
அடித்து இழுத்து ஆலமரத்தில் ஏற்றி
அங்கிருந்து தள்ளிவிட்டு ஆனந்தப் பட்டாலும்

மூக்குடைந்து முன் பல் குத்தி
நாக்குடன் உதடு கிழிந்து உதிரம்
கொப்பளித்து உள் மூச்சு வாங்கிடினும்
என் காதல் நீதான் என்றுரைப்பேன்.

இப்போதே வந்துவிடு இல்லையேல் நானுன்னை
ஈசனுக்கு இன்றே இரையாக்கி விடுவேன்
இன்னொருவன் என் போல் இனிமேலும்
இறு நிலை கொள்ளாமல் இருப்பதற்கு.

Ennul Nee

என்னுள் நீ...

என்னுள் நீ ஆகிவிட்டாய்
உன்னுள் நான் ஆகுமுன்னே!
அழகில்லை நீ என்றார்கள்
அறிவும் உனக்கில்லை என்றார்கள்.

அடங்காப் பிடாரி நீ
ஆகாது குடும்பத்திற் கென்றார்கள்.
ஆனாலும் என்னுள் நீ
ஆகிவிட்டாய் அறியாப் பருவத்திலே!

கள்ளம் என்றனர் உன்னன்பு
கபடம் என்றனர் உன்காதல்.
வஞ்சகி என்றனர் உன்னை
வாழ்வுக்காகா நீ சூத்திரக்காரி என்றனர்.

ஆனாலும் என்னுள் நீ
ஆகிவிட்டாய் தெரியாப் பருவத்திலே!

என்னுள் நீயாக
உன்னுள் நானாக
என்மடியில் நீயாக
உன்மடியில் நானாக

நீ நானாக
நான் நீயாக....... ஜீரணிக்கமுடியாத
அந்தக் காதல் நிஜங்கள்
அற்றுப் போகவில்லை
இன்னும் என் மனதைவிட்டு.

ஆனாலும் என்னுள் நீ
ஆகிவிட்டாய் என்றோ!

நாளை நீ மணப்பெண்ணென்று
நாசுக்காய் கூறியபோது -
நான் நானாக இல்லாமை உணர்ந்தும்
நடைப் பிணமாகவில்லை.

அன்றும் நீ என்னுள்
ஆகிவிட்டவள் என்பதனால்!

நாட்கள் வாரங்களாகி
வாரங்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடங்களாகி
இருபது வருடங்கள் சென்றும்

இன்றும் என்னுள் நீ
ஆகிவிட்டவள் தான்!

காரும் பங்களாவும்
காசும் பணமும்
கசந்து போய்
இத்தனை வருடங்களின்பின்
உன்னுள் என்னை
உள்வாங்க நினைக்கிறாயே!
இது என்ன விந்தை!!

உள்வாங்கல் என்பது
வெளித்தள்ளல் போல்
அவ்வளவு லேசுப்பட்டதல்ல -
காதலைப் பொறுத்தவரை.

நானும் இன்று ஓர் இதயத்தின்
உள்வாங்கல்தான் -
என் செல்வங்களின்
உயிர்நாடிதான்.

ஆனாலும் என்னுள் நீ ஆகிவிட்டவள்
என்பதனால் உன்னில் ஒரு பரிதாபம்.

என்னுள் ஆகிவிட்ட
உன்காதலின் வெளித்தள்ளல்கள்
என் மரணத்தின்பின்
உன்னுள் உள்வாங்கப்படும்!

அப்போது நான்
ஆகியிருப்பேன் உன்னுள்!!