Saturday, January 30, 2010

Mazhai

மழை

மழையின் முதற்துளி
மண்ணில் விழுமுன்
முதற்சென்று நிற்பாளென்
மூத்த மகள்.

காலில் செருப்பிருக்காது
கையில் குடையிருக்காது
தலையில் தொப்பியிருக்காது
தரையில் காலுமிருக்காது.

மழைதான் அவளுக்கு நண்பன்
மழைதான் அவளுக்கு உணவு
மழைதான் அவளுக்கு உறக்கம்
மழைதான் அவளுக்கு எல்லாம்.

தொப்பாகி நிற்பாள்
தோணிவிட தொடர்மழையில்
மிஞ்சாது அந்நாளில்
மின்சாரப் பட்டியலும்
தொலைந்து விடும்
தொலைபேசிப் பட்டியலும்.

புத்தகத்தின் நடுப்பக்க மெல்லாம்
புதிய மழைக்குச் சொந்தம்
கதிகலங்கி நிற்பாள் என்மனைவி
கட்டுப்பாடு பெண்ணுக்கு வேண்டுமென்று.

என் பிள்ளைப்பருவம் எண்ணிப்பார்ப்பேன்
பின் நானும் நின்றுரசிப்பேன்
பிள்ளை வளர்க்கத் தெரியாதென்பாள்
பின் அவளும் வந்துரசிப்பாள்.

எண்ணிப் பார்த்தது
நான் மட்டுமல்ல - என் மனைவியும் தான்.

No comments: