Saturday, January 30, 2010

Nilavu Aval

நிலவு அவள்.

அங்கேபார் முழுமதியை
அதைப்பிடித்து நான்தருவேன்
அன்பேயழகே நீ
அமுதுண்ணு ஆரமுதே!

அன்னையின் அரவணைப்பில்
அமுதுண்ணும் பிஞ்சும்
அண்ணார்ந்து பார்ப்பது
அந்த நிலவைத்தான்.

பள்ளி நாட்களையும்
பாட வேளையையும்
விளையாட்டாய்ப் போக்கிவிட்டு
விதிதான் இதுவென்று

அங்கலாய்த்து ஆர்ப்பரித்து
ஆரவாரப்படும் மாணவனும்
கடற்கரை மண்ணிலே
கலங்குவது அந்நிலவிடம்தான்.

கடன்தொல்லை தாங்காது
கடற்பரப்பில் குப்புறப்படுத்து
பெருமூச்சுவிடும்
பெருந் தகைக்கும்
நிமிர்ந்து பார்க்கும்போது
நிலவுதான் தஞ்சம்.

புத்தக நடுப்பக்கத்தில்
புதைத்து வைத்த
புத்தம்புதிய சிகரட்டை
பற்றவைத்து பரவசப்பட்டு

புகையினை உள்ளிழுத்து
பூமிக்கு எதிர்த்திசையில்
பூக்களாய் ஊதும்போதும்
புன்னகைப்பது அந்நிலவுதான்.

அதோபார் முழுமதியென
அவளை நிமிரவைத்து
அதிர்ச்சி முத்தமொன்று
அதிரடியாய் காதலுக்களித்து
ஆனந்தப்படும் காதலனுக்கும்
அன்புச்சாட்சி அந்நிலவுதான்.

காதலிலே தோல்வியுற்று
கதி கலங்கி
நீலவானின் நிலாவொளியில்
நீள் போத்தலொன்றை
இடுப்பிலிருந்து இதமாக
இழுத்தெடுத்து போதையின்பங்காணும்
இளைஞனையும் இனிவேண்டாமென
எச்சரிக்கை செய்வதும்
எம் நிலவுப்பெண்தான்.

நீதிமன்று நீவந்து
நீதானவள் காதலென்று
நீள்விரல் காட்டி
நீதி பகர்ந்துவிட
நிலத்திற்கு அழைப்பதும்
நிலா உனைத்தான்.

நீண்ட பயணத்தின்
நிழல்களாக வந்துநிற்கும்
நிம்மதி இல்லா
நித்திரையற்ற இரவுகளை
தவிர்த்துவிட எண்ணி
தள்ளாடும் வயதினிலும்
தரையமரும் தாத்தாக்களுக்கும்
தஞ்சம் அந்நிலவுதான்.

பூரண கண்விழிக்கும்போது
பூமி விழித்துக்கொள்வதுபோல்
கண்ணிமை பதிக்கும்போது
காதலர்கள் விழித்துக்கொள்வதேன்?

காதலர்களுக்கும் உன்மேல்
கட்டுக்கடங்கா காதல்போல்.

No comments: