Saturday, January 30, 2010

Zahar Unavu

ஸஹர் உணவு

அதிகாலை நாலுமணியிருக்கும்
அங்கும் இங்கும்
அழகழகாய்ப் பரப்பிக்கிடக்கும்
அமுதுவகை மேசையிலே.

ஒரு பிடிபிடித்து
ஓரக்கண் நிமிர்ந்து பார்ப்பர்
ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தை.

நேரம் இருப்பின்
நெடிய வாழைப்பழங்கள்
நாலு உட்சென்றுவிடும்
நாழிகை ஆகுமுன்னே.

அதற்கும் மேலே
அரையவியல் முட்டையொன்று.
அதைக் கீழிறக்க
அப்பிள்ஜூஸ் வேறு
ஆஹா! இதுவல்லவோ ஸஹர் உணவு.

விழித்துப் பார்ப்பர்
விழி பிதுங்கும் -
விடிந்துவிட்ட சங்கதிகேட்டு
வீணானது நோன்பொன்றுதான்.

88888

அலறி அடித்துக்கொண்டு
அண்ணார்ந்து பார்ப்பாள்
சுவரில் தொங்கும்
சுவர்க் கடிகாரத்தை - அது
சுட்டும் நாலரைமணிதனை.

அருகிற் படுக்கும் கணவன்
அவனருகில் அன்புச் செல்வங்கள்
அவசர அவசரமாய் அவர்களையெழுப்பி
அன்புமொழி பேசி அமுதூட்டி
ஆனந்தமாய் ஸஹர் உண்பாள்.
அதான் கேட்டதும்
அவள் சென்றிடுவாள் தொழுகைக்கு
அவர்களையும் பள்ளிக்கு
அனுப்பி விட்டு.

88888

அரட்டி விடுவதற்கோ
அண்ணார்ந்து பார்ப்பதற்கோ
இங்கு கடிகாரம் ஒன்றுமில்லை
இவர்களுக்குப் பிள்ளைகளுமில்லை.
தள்ளாத வயதில்
தயவு அல்லாஹ்தான்.

அகப்பட்டதை அகப்பையில்
அள்ளி எடுத்துண்டு
அல்ஹம்துலில்லாஹ் எனக்கூறி
ஆவலாய்க் காத்திருப்பர்
அதான் கூறும்வரை - சிலவேளை
அதான் கூறியுமிருக்கும்.

No comments: