Monday, January 5, 2026

மூன்று கால் ஆட்டுக்குட்டி.

 

22. மூன்று கால் ஆட்டுக்குட்டி.

 “பக்கத்துத் தோட்டத்தில சண்டை நடக்குது போல. எந்நேரமும் அதையே நோண்டிக்கொண்டு இருக்காம வெளிய போய் என்னெண்டு பாருங்க.” – இதுவரை தனது கைத்தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்த அனஸின் மனைவி அதை மேசையில் வைத்துவிட்டு கணவனின் கவனத்தைத் திசை திருப்பினாள்.

தன் கையிலிருந்த கைத்தொலைபேசியை பக்கத்திலிருந்த கதிரை மீது வைத்துவிட்டு எழுந்த கணவனிடம் “அதையும் கையோட எடுத்திட்டுப் போங்க” என அறிவுரை கூறியபோது மீண்டும் குனிந்து தனது கைத்தொலைபேசியை எடுத்தவன் “மற்றவர்களின் புதினங்களை வீடியோ வடிவில் பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி என் மனைவிக்கு” என முணுமுணுத்தவாறு வீதிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் அனீஸ்.

எதிர் வீட்டு நண்பன் றமீஸ் வெளியே நின்று எதையோ அவதானித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அனீஸ், “என்ன மச்சான் காலையிலேயே பெரிய சத்தம் கேட்குது. என்ன ஏதாவது சண்டையோ” என வினவினான்.

“இல்ல மச்சான். நம்மட இறமுளார்  மாமாட தோட்டத்துக்குப் பக்கத்துல ஒரு குடும்பம் காணி வாங்கி வீடு கட்டிக்கொண்டு இருக்காங்க இல்ல. அந்த வீட்டுக்காரன் பெரிய கில்லாடி போல இருக்கான். நேற்றிரவு இறமுளார்  மாமா வளர்க்கிற ஆட்டுக்குட்டி ஒன்றுட ஒரு கால தறிச்சிட்டான் போல” என்று கூறி முடிப்பதற்குள் “என்ன! ஆட்டுக்குட்டிட காலத் தறிச்சிட்டானோ? இது பெரும் பாவம் இல்ல. வா போய் என்ன எண்டு பாப்போம்” எனக் கூறியவாறு  றமீஸை அழைத்தான், அனீஸ்.

“நீ போய் பாரு மச்சான். நான் இப்பதான் பாத்துப்போட்டு வாரன்.” எனக் கூறினான், றமீஸ்.

இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன் மிகக் குறைந்த விலையில் சிறிய வீட்டுடன் ஓர் ஏக்கர் காணி கிடைத்ததால் தான் வசித்து வந்த இடத்தை வாடகைக்குக் கொடுத்துவிட்டு மனைவியுடன் வந்து குடியேறினான், அனஸ். புதிதாகக் குடிவந்தவர்களைப் பார்ப்பதற்குப் பக்கத்திலுள்ளவர்கள் இடைக்கிடை    வந்து தரிசித்துச் சென்றனர். வந்தவர்களில் இறமுளார் மாமாவின் மனைவி அனஸின் மனைவிக்குப் பிடித்துப்போகவே அவர்கள் நண்பிகளாயினர்.

இறமுளார் மாமா அவ்வளவு படிக்காதவர் என்றாலும் நல்ல பண்பானவர். நல்ல உழைப்பாளி. அவர் வசிக்கும் காணி மிகப் பெரியது. நாலு ஏக்கர் இருக்கும். வலது பக்க மூலையில் சிறிய வீடொன்று கட்டி மனைவி மக்களுடன் வாழ்ந்து வருபவர். இடது பக்க மூலையில் பெரியதோர் ஆட்டுக் கொட்டில் அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். மிகுதிப் பகுதியில் மரக்கறித் தோட்டம் செய்து வருகிறார். தானும் தன் பாடும் என்று இருப்பவர்.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் இறமுளார் மாமாவின் பக்கத்துக் காணியில் அரை ஏக்கர் காணித்துண்டு ஒன்றை வாங்கி, சிறிய வீடு ஒன்றைக் கட்டிய பின் மனைவியுடன் வந்து குடியமர்ந்தான் உவைஸ். பார்ப்பதற்கு அப்பாவி போல தெரிந்தாலும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போடத்தொடங்கினான்.  உவைஸ் என்ன தொழில் செய்கிறான் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு வாரத்தில் ஓரிரு நாட்கள்தான் வீட்டுக்கு வருவான். வந்ததும் வராததுமாக பக்கத்து வீடுக்காரர்களில் ஒருவருடனாவது சண்டை பிடிக்காமல் இருக்கமாட்டான். அதனால் அனஸ் மற்றும் றமீஸ் குடும்பம் அவனுடன் நல்ல உறவு வைத்துக்கொள்வதில்லை.

இறமுளார் மாமாவின் வீட்டு முற்றத்தில் கூடியிருந்த அயலவர்களுடன் இணைந்துகொண்ட அனஸ் “என்ன நடந்தது மாமா?” என வினவினான்.

“இஞ்ச பாருங்க தம்பி இந்த அநியாயத்த. வாயில்லா  ஜீவன்ட காலத் தறிச்சிட்டான் பாவி மகன். அவன் நல்லா இருப்பானா? நாசமாப்போவான். அவன்ட புள்ள குட்டிகளுக்கும் இப்படித்தான் நடக்கும்.” எனச் சபித்தபடி கண்கலங்கினார், இறமுளார் மாமா. அப்போதுதான் ஒரு கால் தறிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆட்டுக்குட்டியைப் பார்த்தான், அனஸ். ஒரு கால் துண்டாடப்பட்ட நிலையில் அவருக்குப் பக்கத்தில் சோகமே உருவாகக் கிடந்தது. இறமுளார் மாமாவின் முகத்தைப் பார்ப்பதை விட அந்த ஆட்டுக்குட்டியின் முகத்தைப் பார்ப்பதுதான் எனக்குப் பெரும் சங்கடமாக இருந்தது. பாவம் அந்த ஆட்டுக்குட்டி. ஒரு கால் இல்லாமல் எப்படித்தான் வாழப்போகுதோ.

“மாமா! இத இப்படியே விட்டுவிடாம போலீசுக்குப் போங்க. போய் ஒரு முறைப்பாடு செய்யுங்க. அவங்க மிச்சத்தப் பாத்துப்பாங்க. அதுக்கு முதல்ல பக்கத்துக் கிராமத்தில இருக்கிற மிருக வைத்தியரக் கூப்பிட்டு ஆட்டுக்குட்டியக் காட்டுங்க. நேரம் போனா ஆட்டுக்குட்டிக்கு ஏதும் ஆகிடும்.” என அறிவுரை கூறினான், அனஸ்.

“இல்ல தம்பி. நான் போலீசுக்கெல்லாம் போகப் போறல்ல. அல்லாஹ்கிட்ட பாரம் கொடுத்திட்டேன். அவன் பாத்துக்குவான். மிருக வைத்தியருக்கு சொல்லி அனுப்பியிருக்கேன். அவர் வந்து மருந்து கட்டி சுகப்படித்திடுவார்.” எனக் கூறிய இறமுளார் மாமாவிடம் விடைபெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்து நடந்தவற்றை தனது மனைவியிடம் கூறி மனவருத்தப்பட்டான், அனஸ்.

இச் சம்பவம் நடந்த பிற்பாடும் உவைஸ் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நடந்துகொள்ளும் விதம் மிக மோசமாக இருந்ததால் அந்தச் சிறிய கிராமத்து மக்கள் உவைஸ் குடும்பத்தை அந்த ஊரிலிருந்து அப்புறப்படுத்த முனைந்து வெற்றியும் கண்டனர். உவைஸ் தான் குடியிருந்த காணியை விற்றுவிட்டு வேறு ஊருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டான்.

நாட்கள் மிக வேகமாக நகர்ந்துவிட்டன. உவைஸ் ஊரைவிட்டுச் சென்று சுமார் ஐந்தாறு வருடங்களாகிவிட்டன.

ஒரு நாள் அனஸ் வீட்டுக்கு வந்த றமீஸ், இருவரும் உரையாடிக்கொண்டிருந்த போது ஏதோ ஞாபகம் வந்தவனாக “அனஸ், ஒரு விஷயம் தெரியுமா? நம்ம இறமுளார் மாமாட பக்கத்து வீட்டில இருந்த உவைஸ் இருக்கானே”

“ஆமா. அவர்ர ஆட்டுக்குட்டிட காலத்தறிச்சவன்தானே?’’

“அவன்தான். அவனுக்கு கிட்டத்திலே ஆஸ்பத்திரியிலே ஒரு பிள்ளை கிடைச்சிருக்காம். அந்தப் பிள்ளைக்கு மூன்று கால்களாம்.”

றமீஸ் சொல்லிமுடிப்பதற்குள்,

“யா அல்லாஹ். நீ படைத்த மனிதர்கள் அறியாமல் செய்யும் பாவங்களை மன்னித்துவிடு. இவ்வுலகில் உனது தண்டனைகளை வழங்கிவிடாதே, அல்லாஹ்.” எனக் கூறியவாறு நண்பன் றமீஸின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான், அனஸ்.

(முற்றும்)

எஸ். ஏ. கப்பார்.

(தமிழ்நெஞ்சம் ஜனவரி 2025 புத்தாண்டு சிறப்பு மலரில் பிரசுரமானது.)

No comments: