Monday, January 5, 2026

தன் வினை

 24. தன் வினை

ஏழு வயதில் ஒன்று. ஐந்து வயதில் ஒன்று. இரண்டும் பெண் பிள்ளைகள். திருமணம் முடித்துப் பத்து வருடங்கள் கடந்து விட்டன. பிள்ளைகளுக்குப் புத்தி தெரிந்த பிறகாவது தனது முன்கோபத்தைத் தணிக்க முடியாது தினமும் வேதனைப்பட்டான், முகைமின்.

முகைமின் நல்ல வாட்டசாட்டமான அழகானவன். பல்கலைக்கழகப் பட்டதாரி. தற்போது வேலை செய்யும் நிறுவனம் அவனது மூன்றாவது தொழில் புரியும் இடம். முதலில் பட்டதாரி ஆசிரியராகக் கடமை புரிந்து படிப்பித்த பாடசாலை அதிபருடன் வாக்குவாதப்பட்டு ஆத்திரத்தில் தொழிலைத் தூக்கியெறிந்து விட்டு ஐந்தாறு மாதங்கள் தொழில் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தான்.

மனைவி ஜெஸிலாவும் உயர்தரம் வரை படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தாள். ஜெஸிலா அமைதியான அடக்கமான அழகானவள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது அப்பாவும் ஒரு பட்டதாரி ஆசிரியர். தலைநகரிலுள்ள பிரபல்யமான கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றியவர். அம்மா நல்லதொரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பண்பான பெண். படித்தவர். தொழில் எதுவும் புரியவில்லை.

ஒரேயொரு பிள்ளையை நல்லதொரு ஆடவனுக்குத் திருமணம் முடித்துவைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நன்கு விசாரித்து முகைமினை மணமுடிந்து வைத்தனர். ஜெஸிலாவின் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை ஒரே வீட்டில் ஒன்றாகவே மகள் மருமகனுடன் வாழ்ந்து வந்தனர். ஜெஸிலாவுக்கு இரண்டாவது மகள் பிறந்து எட்டு மாதங்களுக்குள் பெற்றோர்கள் இருவரும் மூன்று மாத கால இடைவெளியில் இயற்கை எய்திவிட்டார்கள். மிகவும் மனம் நொந்து போன ஜெஸிலா பிள்ளைகளைப் பராமரிக்க வேறு வழிகளில்லாது தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு தனது பிள்ளைகளையும் கணவனையும் நன்கு கவனித்துவந்தாள்.

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து நேரத்தோடு வீடு வந்த முகைமின் மிகவும் கோபத்தோடு காணப்பட்டான்.

'என்னங்க. ஒப்பிஸில ஏதாவது பிரச்சினையா? உங்கட முகத்தைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கு. என்ன நடந்தது?' எனப் பக்குவமாய்க் கேட்டாள், ஜெஸிலா.

'இனி நான் அந்தக் கம்பனிக்கு வேலைக்குப் போவதாய் இல்லை. மரியாதை தெரியாத மனேஜர்மார்கிட்ட வேலை செய்ய முடியாது. அதனால் அவன்ட முகத்திலேயே எல்லாத்தையும் வீசி எறிந்துவிட்டு வந்திட்டேன். இனிப் போறதா இல்லை' - எரிந்து தள்ளினான் முகைமின்.

'இஞ்சப் பாருங்க. எனக்கும் தொழிலுக்குப் போக முடியாத நிலை. நம்ம பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பார்க்கவேண்டும். அடிக்கடி சண்டை பிடித்துக்கொண்டு வேலையை விட்டிட்டு வாரது அவ்வளவு நல்லாயில்லை. நல்லா யோசிச்சுப் பாருங்க. இன்னொரு வேலை எடுப்பது எவ்வளவு சிரமம் என்று. உங்களுக்கே நல்லாத் தெரியும். வாழ்க்கைச் செலவு மலைபோல ஏறியிருக்கிற இந்தக் காலத்திலே வேலையில்லாம எப்படி காலத்தைக் கடத்துற' - யாராவது முகைமினுக்குப் புத்தி சொன்னால் அது அவனுக்குப் பிடிக்காது என்பது அவளுக்கு நன்கு தெரிந்தும் வேறு வழியின்றி ஒரே மூச்சில் கூறிவிட்டு, கணவனுக்குக் கோப்பி போட்டு எடுத்து வர உள்ளே சென்றாள்.

கோப்பி தயாரித்துக்கொண்டு வந்த ஜெஸிலா கணவன் இன்னும் அமராது நின்றுகொண்டே யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டு சிறிது கலங்கினாள். 'இந்தாங்க கோப்பி' என்றவாறு கோப்பிக் கோப்பையைத் தன் கணவனிடம் நீட்டினாள். தன் கையை நீட்டி கோப்பிக் கோப்பையை வாங்கிய முகைமின் சற்றும் எதிர்பாராத விதமாக அதை ஜெஸிலாவின் முகத்தை நோக்கி வேகமாக வீசினான்.

நல்ல சூடாக இருந்த கோப்பி முகத்திற் பட்டதும் துடியாய்த் துடித்து வீறிட்டு அலறினாள், ஜெஸிலா. தாயின் அலறலைக் கேட்டு இரு பெண் பிள்ளைகளும் கத்திக் கொண்டு தாயை நோக்கி ஓடி வந்தனர். பிள்ளைகள் வீட்டில் இருப்பதை உணராமல் தான் செய்த செயலை எண்ணி முகைமின் மிகவும் கவலைப்பட்டான். தனது முன்கோபத்தை தன்னால் அடக்க முடியாமல் இருப்பதை எண்ணி மனம் வருந்தினான்.

பெண் பிள்ளைகள் இரண்டும் அழத்தொடங்கின. ஒருவாறு நிலைமையைச் சமாளித்துக்கொண்டு உடனே ஜெஸிலாவையும் பிள்ளைகளையும் தனது காரில் ஏற்றிக்கொண்டு பக்கத்து அரச வைத்தியசாலைக்கு விரைந்தான். மனைவி பிள்ளைகளை வெளியே அமரச் சொல்லிவிட்டு வைத்தியரைக் காண உள்ளே சென்ற முகைமின் சிறிது நேரத்தில் வெளியே வந்து உள்ளே வருமாறு சைகை செய்தான். தன் பிள்ளைகளிடம் கவனமாக இருக்குமாறு கூறிவிட்டு கணவன் நின்ற திசையை நோக்கி நடந்து சென்றாள், ஜெஸிலா. ஒரு நேர்ஸ் ஜெஸிலாவை நோக்கி வந்து கண் வைத்தியர் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

'இருங்க மேடம். கவலைப்படாதீங்க. என்ன நடந்தது என்று எங்களால் யூகிக்க முடிகிறது. இதே போல எத்தனையோ கேஸ்களைப் பார்த்திருக்கோம். என்ன செய்வது விதிப்படித்தான் எல்லாம் நடக்கும். உங்க கணவருடன் கதைத்ததிலிருந்து அவரொரு முன்கோபக்காரர் தவிர கெட்டவரல்ல என்பது புரிகிறது. உங்கள் மீதும் பிள்ளைகள் மீதும் அதீத பாசம் வைத்திருப்பவர் போல்தான் தெரிகிறது. ஏதோ நடந்தது நடந்துவிட்டது. அதை முதலில் விட்டு விடுங்க.' எனக் கூறிவிட்டு ஜெஸிலாவின் இரு கண்களையும் பரிசோதித்தார். சிறிது நேரம் அமைதியாக இருந்த வைத்தியர் 'உங்கட வலது கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் சிறியதொரு சத்திர சிகிச்சை செய்யவேண்டி வரும். இடது கண்ணில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் இடது கண்ணும் சரியாகத் தெரியவில்லை என்று நீங்கள் சொல்வதுதான் எனக்கு வியப்பாக இருக்கு. அதைப் பிறகு பார்ப்போம். முதலில் வலது கண்ணை சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையேல் நிரந்தரமாகப் பார்வை போய்விடும். உங்க கணவரிடமும் கொஞ்சம் பேச வேண்டும். நீங்க சிறிது நேரம் வெளியே இருங்க' என கண் வைத்தியர் கூறியதை நன்கு அவதானித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஜெஸிலாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.

சத்திர சிகிச்சைக்கான நாளும் வந்தது. இறைவன் உதவியால் நல்லபடி சத்திர சிகிச்சையும் முடிவடைந்தது.

'நல்லபடி ஆபரேஷன் முடிவடைந்து விட்டது. ஒரு வாரத்துக்கு ஒரு முறை கிளினிக் வந்து போனால் போதும். பழையபடி பார்வை திரும்ப ஓரிரு வாரங்கள் செல்லும். மருந்து மாத்திரைகளை தவறாது நேரத்திற்கு உட்கொள்ளவும். வாழ்த்துகள். வீட்டுக்குச் சென்று சந்தோஷமாக இருங்கள்.' என்று கணவன் மனைவி இருவரையும் பார்த்துக் கூறிவிட்டு நகர்ந்து சென்றார், சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்.

இந்த இரு வாரங்களும் முகைமின் மற்றும் பிள்ளைகள் இருவரும் ஜெஸிலாவுடன் தனியார் வைத்தியசாலையில்தான் பணம் செலுத்தித் தங்கியிருந்தார்கள்.

வீடு வந்து சேர்ந்தபின் கணவன் மனைவி இருவரிடமும் ஏற்கனவே இருந்த பரஸ்பர புரிந்துணர்வும் அன்பும் படிப்படியாகக் குறையத் தொடங்கின. முகைமின் மீண்டும் தான் வேலை செய்த கம்பனிக்கே வேலைக்குச் சென்றுவந்தான்.  பிள்ளைகள் வழமை போல் பாடசாலை சென்று வந்தனர். குற்ற உணர்வு முகைமினை ஆட்டிப்படைக்கத் தொடங்கியதில் வியப்பொன்றுமில்லை.

பதினைந்து வருடங்கள் ஓடி மறைந்தன. ஆனாலும் நடந்த சம்பவத்தை மறக்கமுடியாது கவலைப்பட்டுக்கொண்டே வாழ்ந்தாள் ஜெஸிலா. ஜெஸிலாவின் நடத்தைகளில் என்றுமே காணாத பல மாற்றங்கள் தென்படத் தொடங்கின. அவளது கண் பார்வை பழையபடி சரியாகிவிட்டதா அல்லது அதன் பாதிப்புகள் இன்னும் அவளைப் பாதித்துக் கொண்டிருக்கின்றனவா என அறிய முடியாது தவித்தான், முகைமின். நாள்கள் செல்லச்செல்ல ஜெஸிலாவின் கண் பார்வை சீராக இல்லை போல் தோன்றுவதாக எண்ணி தினமும் மிகக் கவலைப்பட்டான், முகைமின்.

'ஜெஸிலா, எனக்கு என்னவோ சந்தேகமாக இருக்கு ஜெஸிலா. உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லைதானே? வேண்டுமென்றால் கண் வைத்தியரிடம் சென்று காட்டி சிகிச்சை பெறலாம். நானும் பல நாட்களாக அவதானித்து வருகிறேன். உண்மையைச் சொல் ஜெஸிலா' என வருத்தப்பட்டான், முகைமின்.

'ஒன்றுமில்லைங்க. எனக்கு முழுசாக் கண் பார்வை இல்லாட்டிக்கூட வருத்தப்படமாட்டேன். என்ட பிள்ளைகளின் திருமணத்தை முடிக்கும் வரை எனக்கு ஓரளவு பார்வை இருந்தாப் போதும். அதைத்தான் இறைவனிடம் அனுதினம் வேண்டுகிறேன்.' என்ற ஜெஸிலாவின் கண்கள் பனித்தன.

தன் மனைவியிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பாராத முகைமின் அதிர்ந்துபோனான். தனது முன்கோபத்தால் ஏற்பட்ட விளைவு ஜெஸிலாவை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து மிகவும் வேதனைப்பட்டான்.

நாள்கள் செல்லச் செல்ல ஜெஸிலா 'கண் பார்வை நன்றாகத் தெரியாத ஒருவளாக' மாறி தனது கணவன் முன் நடிக்கத் தொடங்கினாள். தன் கணவனைத் திருத்தியெடுக்கவும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சிறப்புற அமைக்கவும் இதைத் தவிர வேறு வழி அவளுக்குத் தெரியவில்லை.

பிள்ளைகள் இருவரும் வளர்ந்து பருவ வயதை அடைந்துவிட்டார்கள். இருவரும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை முடித்து திருமணமும் செய்துகொண்டு தங்கள் கணவன்மார்களுடன் வெளிநாடு சென்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது வீட்டிலிருப்பது முகைமினும் ஜெஸிலாவும் மட்டுமே. கணவன் வேலைக்குச் சென்ற பின் ஜெஸிலா வீட்டில் தனியாக இருந்து பழக்கப்பட்டுவிட்டாள்.

காலம் தன் கடமைகளைச் சரிவரச் செய்துகொண்டு வரும் அதே வேளை ஜெஸிலாவுக்குத் தன் கணவருடனான அன்பும் பாசமும் குறைவடைந்து இருவருக்குமிடையேயான உறவு விரிவடைந்துகொண்டே வந்தது. இருந்தும் நடந்தவற்றை மறக்க முயற்சித்து இயலாதபோதும் ஜெஸிலா தன் கணவரை நன்றாகவே கவனித்துவந்தாள். இப்போதெல்லாம் முகைமின் அதிகம் கதைப்பதுமில்லை. கோபப்படுவதும் இல்லை.

ஒரு வெள்ளிக்கிழமை காலை தன் நாளாந்த வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்த ஜெஸிலா தொலைபேசி அழைப்புமணி கேட்டதும் எழுந்துசென்று றிஸீவரைக் கையிலெடுத்து  'ஹலோ' என்றாள்.

'நாங்க உங்க கணவன் முகைமின் வேலை செய்யும் அலுவலகத்திலிருந்து கதைக்கிறம், மேடம். ஒரு பேட் நியூஸ். முகைமின் வேலை செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் காயப்பட்டு அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கிறோம். உடனடியாக கொழும்பு கண் ஆஸ்பத்திரிக்கு வாங்க.' - அழைப்பு சில வினாடிகளில் துண்டிக்கப்பட்டது.

எந்தவித பதட்டமும் இல்லாமல் ஒரு ஆட்டோ பிடித்து அவசர அவசரமாக ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றாள், ஜெஸிலா.

'வாங்க, மேடம். கவலைப்படாதீங்க. என்னை ஞாபகம் இருக்கா? உங்களுக்கு கண் ஆபரேஷன் செய்தவன்தான். உங்கட கணவன்ட இரு கண்களிலும் அஸிட் பட்டு மிக மோசமாப் பாதிக்கப்பட்டிருக்கு. கண் பார்வை மீண்டும் திரும்பி வர சான்ஸே இல்ல.' - சர்வ சாதாரணமாகக் கூறிய வைத்தியரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் ஜெஸிலா.

'நான் கடந்த நாற்பது வருடங்களாக கண் வைத்தியராக் கடமைபுரிகிறேன். வெற்றுக் கண்களைப் பார்த்தாலே எனக்குப் புரிந்துவிடும். இவ்வளவு காலமும் பூரணமாகக் கண் தெரியாதது போல் நீங்க நடித்து வருவதும் எனக்குத் தெரியும். அடிக்கடி உங்க கணவன் என்னிடம் வந்து உங்க நடவடிக்கைகளைப் பற்றிக் கூறி ஆலோசனை கேட்பார். நானும் 'கவலைப்படாதீங்க. விரைவில் சரியாகிவிடும்' என்று கூறி அனுப்பி வைப்பேன். இப்ப நீங்க நிரந்தரமாகவே உங்கள் கண்களைத் திறந்து பார்க்கலாம். இனியும் நடிக்கத் தேவையில்லை. கோட் பிளஸ் யு (God bless you).

வைத்தியர் கூறியதைக் கேட்ட ஜெஸிலா விக்கித்து விறைத்து அப்படியே அசைவற்று நின்றாள்.

எஸ். ஏ. கப்பார்.


No comments: