Monday, January 5, 2026

கம்பளை நோக்கிய பயணம்.

 25. கம்பளை நோக்கிய பயணம்.

இன்னும் இரு வாரங்களில் பல்கலைக்கழக இறுதிப் பரீட்சைகள் ஆரம்பமாக உள்ளன. கடந்த நான்கு வருடங்களாக தன் பட்டப் படிப்பை முடிப்பதற்காக தான் பட்ட கஷ்டங்களையும் அலைச்சல்களையும் தன் பெற்றோரின் தியாகங்களையும் மீட்டிப்பார்த்த அமினாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

கண்டி மாவட்டம், கம்பளையைச் சேர்ந்த அமினா குடும்பத்தில் மூத்த பெண் பிள்ளை. அவளுக்குப் பிறகு இரண்டு ஆண் பிள்ளைகள். அமினாவின் வாப்பா மரக்கறித் தோட்டம் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தைச் சிரமமின்றி ஓட்டிவந்தார். உம்மா வீட்டோடு சிறியதொரு சில்லறைக் கடை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளைக் கவனித்து வந்தார்.

அமினாவுக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததும் குடும்பமே குதூகலித்து மகிழ்ந்தது. ஆனாலும் உம்மாவுக்கு கிழக்குப் பகுதி என்றால் ஒருவித பயம். மகளுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கிடைத்தது பயமாகவும் கவலையாகவும் இருந்தது. தமது பகுதியில் கிடைத்திருந்தால் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்திருக்குமே என எண்ணினார்.

உம்மாவின் கவலையைப் புரிந்து கொண்ட அமினா “உம்மா, தென் கிழக்குப் பல்கலைக்கழகம் அம்பாரை மாவட்டம் ஒலுவில் பகுதியில்தான் இருக்கு. ஒலுவில் துறைமுகமும் பக்கத்திலேதான். ஒலுவில் முழுக்கிராமும் முஸ்லிம்கள் வாழும் கிராமம். அங்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. நாங்க கொஸ்டலில் தங்கியிருந்துதான் படிக்கப் போறம். முஸ்லிம், தமிழ், சிங்களப் பிள்ளைகள் எல்லாம் ஒன்றா தங்கியிருந்து படிப்பதாலே பிரச்சினை ஒன்றும் இல்லை உம்மா. என்றாள். - நான்கு வருடங்களுக்கு முன் உம்மாவிடம் கூறியது நினைவுக்கு வந்தது, அமினாவுக்கு.

“வாப்பா, நாளை எப்படியும் நாங்க நாலு பேரும் ஒலுவில் செல்லவேண்டும். ஜெஸா பஸ்ஸுக்கு புக் பண்ணிட்டாவாம். பஸ் காசு கொடுக்கணும். எனக்கும் செலவுக்கு காசு வேணும். என வாப்பாவிடம் கூறினாள், அமினா.

மகள், உங்கட சல்லி எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன், மவ. என்னவோ கிழக்குப் பகுதியில் வெள்ளம் சூறாவளி வரப்போவதாக மிஹ்றுன் மாமி சொன்னா. எதுக்கும் பாத்து அனுப்புங்க எண்டு சொன்னவ மவ. போன வாட்டியும் கெம்பஸுக்குள்ளே வெள்ளம் வந்து நீங்க எல்லாம் கஷ்டப்பட்டு வந்து சேந்தீங்க. அதில வெள்ளத்துல வுளுந்து மதரஸாப் பிள்ளைகள் மவுத்தான சேதியும் தெரியும் தானே. எதற்கும் நல்லா விசாரிச்சுப் போங்க மவ

“அங்க பிரச்சினை ஒன்னும் இல்ல உம்மா. மழைதான் கொஞ்சம் மிச்சம் என்று சொன்னாங்க. அப்படி ஏதும் பிரச்சினை என்றால் பாதுகாப்பாக எங்களை அனுப்பிவைப்பாங்க. நீங்க கவலப்படாதீங்க உம்மா.

அடுத்த நாள் காலை நண்பிகளுடன் பல்கலைக்கழகம் வந்தடைந்த அமினாவுக்கு சிறிது பயமாகத்தான் இருந்தது. அநேகமான வெளியூர்ப் பிள்ளைகள் சமுகமளிக்கவில்லை. பரீட்சைகளும் நடைபெறமாட்டாதுபோல் தெரிந்தது. அமினா நினைத்துபோலவே பரீட்சைகள் ஒத்திப்போடப்பட்டுள்ளதாகவும் மாணவர்களை விடுதிகளிலிருந்து பாதுகாப்பாக தங்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டது. வெளியூர் பிள்ளைகளை அனுப்பி வைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் இரண்டு மணியளவில் உம்மாவுக்கு அறிவித்துவிட்டு தன் நண்பிகளுடனும் இன்னும் சில மாணவர்களுடனும் தனியார் பஸ் ஒன்றில் ஊர் வந்து சேர ஆயத்தமானாள், அமினா. பல்கலைக்கழக நிருவாகத்தினால் பயணத்துக்கான எல்லா ஒழுங்குகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்பட்டன. ஒலுவிலிலிருந்து அம்பாரை, மஹியங்கனை, கண்டி வழியாக கம்பளை நோக்கி வெளிக்கிட்ட பஸ் எப்படியும் ஆறு ஏழு மணித்தியாலங்களில் கம்பளை நகரை வந்தடைந்துவிடும். பஸ் வெளிக்கிடத் தொடங்கியதிலிருந்து மழை பொழிய ஆரம்பித்தது. வானம் விம்மிப் புடைத்துக் காணப்பட்டது. பாதையில் மண் மேடுகள் சரிந்து கற்பாறைகள் பாதையை மறித்துக் காணப்படுகின்றன போன்ற செய்திகளும் பஸ்ஸின் உள்ளே பரவ ஆரம்பித்தன. கண்டி, கம்பளை பகுதிகளில் பலத்த மழை பெய்வதாகவும் பல வீதிகள் நீரில் மூழ்கிக் கிடப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

பயணம் எந்தவித ஆபத்துகளும் இல்லாமல் கண்டி நகரை நெருங்கிக் கொண்டிருக்கையில் பாதுகாப்புப் படையினரால் இடையில் பஸ் நிறுத்தப்பட்டு கூடுதலான வெள்ளம் பரவுவதால் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர்களைப் பின் தொடர்ந்து வருமாறும் கூறி ஒரு பௌத்த விகாரையை நோக்கி அழைத்துச் சென்றனர். பஸ்ஸில் இருந்த எல்லோர் முகத்திலும் அச்சத்தின் ரேகைகள் படர ஆரம்பித்தன. பஸ்ஸிலிருந்து இறங்கி விகாரைக்குள் சென்றபோது அங்கு ஏற்கனவே சில குடும்பங்கள் பாதுகாப்புக் கருதிக்  கொண்டுவரப்பட்டிருந்தன. அமினாவுக்கும் அவளது நண்பிகளுக்கும் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் அங்கிருந்த புத்த பிக்கு ஒருவர் வந்து “நீங்க பயப்படாதீங்க. நிலைமை மோசமாக உள்ளது என்பது என்னவோ உண்மைதான். கண்டி, கம்பளை எல்லாம் பெரும் வெள்ளம். பலத்த காற்று அடிச்சிக்கிட்டிருக்கு. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கு. எங்கட ஆட்கள் எல்லாம் இங்கேயே இருக்கட்டும். நான் பள்ளிவாசல் மௌலவிமாருக்கு அறிவிச்சிருக்கேன். உங்களை வந்து அழைச்சிட்டுப் போவாங்க. என ஆறுதல் வார்த்தைகள் கூறி, வந்தவர்களின் கவலையைப் போக்கினார். கூறி சில நிமிடங்களில் கண்டி பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள் சிலர் ஒரு வேனில் வந்து அமினாவையும் நண்பிகள் மூவரையும் அழைத்துச்சென்று ஒரு முஸ்லிம் வீட்டில் ஒப்படைத்தனர். பஸ் சாரதியும் நடத்துனரும் இன்னும் சில ஆண்  மாணவர்களும் விகாரையில் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டன. அந்த வீடு இரு மாடிகளைக் கொண்ட பெரிய வீடு. அங்கும் வீட்டுச் சொந்தக்காரர்களின் உறவுகளான இரண்டு மூன்று குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி தங்கியிருந்தனர்.

இடி, மின்னல், மழை ஓய்ந்தபாடில்லை. சோவென்ற இரைச்சலுடன் காற்றும் மிக வேகமாக வீசியது. “மவ. நீங்க இப்ப வீட்டுக்கு போவ ஏலா. ஒங்கட உம்மா, வாப்பாக்கு கோல் போட்டு சொல்லுங்க. என ஒரு தாய் கூறியபோது அமினா உடனடியாக தனது தாய்க்கு அழைப்புவிடுத்தாள். அவளது நல்ல காலம் தொடர்பு கிடைத்துவிட்டது.

“மவ. எங்க இருக்கயள். இங்க நிலமை மிக மோசமாக இருக்கு. வந்திடாதீங்க. சரியான தண்ணி வருது. மழையும் பெரிசா பெய்யுது. மண் சரிவும் இருக்காம். எனக் கூறிக்கொண்டிருக்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை முயற்சித்தும் அமினாவினால் உம்மாவுடன் கதைக்க முடியவில்லை. அமினாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. அன்றிரவு முழுக்க பயத்தினாலும் உம்மா, வாப்பா, சகோதரர்கள் பற்றிய கவலையாலும் எவருக்கும் நித்திரை வரவில்லை. சிறுவர்களைத் தவிர எவரும் உறங்கவில்லை.

நள்ளிரவு இரண்டரை மூன்று மணியிருக்கும் “மவ, எழுந்திருங்க. முன்பக்கமெல்லாம் தண்ணி பெரிசா வர ஆரம்பிச்சி. நீர்த்தேக்கம் எல்லாம் தொறந்தாச்சாம். மகாவலி கங்கையும் பெருக்கெடுத்திட்டாம். மேல் மாடிக்குப் போய் பாதுகாப்பா இருப்போம். முதல்ல பொம்பிளைப் பிள்ளைகள் சின்னதுகள் எல்லாம் மேலே போங்க. என வீட்டிலிருந்த பெரியவர் கூறிவிட்டு வீட்டிலிருந்த ஆண் பிள்ளைகள் இருவரையும் அழைத்து கீழ்மாடியில் இருந்த முக்கிய சாமான்களை எல்லாம் மேல் மாடிக்கு ஏற்றத் தொடங்கினார்.  அமினாவும் நண்பிகளும் மேல் மாடிக்குச் சென்று ஒரு ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டனர்.

மறுநாள் பொழுது புலர ஆரம்பித்தது. மழை ஓய்ந்தபாடில்லை. வெள்ளம் வீட்டின் தாள்வாரம் வரை மட்டுமே காணப்பட்டது. வல்ல அல்லாஹ்வின் கருணையால் தங்கியிருந்த வீட்டுக்கு எந்தவொரு பாதிப்புமில்லை.

அவசர அவசரமாக ஒரு குடையைக் கையிற் பிடித்துக் கொண்டு பெரியவர் வெளியே வந்தார். பிரதான வீதி எங்கும் சன நெரிசல். முச்சக்கர வண்டிகள் ஒன்றிரண்டைத் தவிர வாகனங்களைக் காணவில்லை. வெள்ளம் வடிந்தோடும் இடமெல்லாம் சேறும் சகதியுமாகக் காணப்பட்டன. பெரியவரைக் கண்டதும் அவரை நோக்கி வந்த முஸ்தபா ஆசிரியர் “எண்ட அல்லாவே! நம்மட பக்கம் மட்டும்தான் பாதிக்கப்படல்ல போல. பள்ளத்து காணி, கடை, வீடெல்லாம் சரியான மோசம். மிச்சம் மௌத்தும் போல. அரசாங்கம் அவசர கால நிலையை அறிவிச்சிருக்காங்க. கம்பளப் பக்கம்தான் பாதிப்பு அதிகம் போல. பல இடத்தில மலை சரிஞ்சிருக்காம். நான் கண்டிக்கு வந்து அம்பது வருஷமாகுது. இப்படி ஒரு மழையைக் கண்டதில்லை. கம்பளையில வீடுகள் எல்லாம் பத்து பதினைந்து அடி தண்ணி வந்து பெரும் சேதமாம்.என ஆச்சரியப்பட்டுக் கொண்டே நகர்ந்து சென்றார், முஸ்தபா ஆசிரியர்.

 வகமாக வீடு வந்த பெரியவர் “என்ட அல்லாஹ். நுவரெலிய, அக்குரண, கம்பளை எல்லாம் பெரும் சேதமாம். அரசாங்கம் நாடு பூரா அனர்த்த நிலை அறிவிச்சிருக்காம். மிச்சம் பேர் மௌத்தாம். றம்புக் எல என்ற கிராமம் மொத்தமா மண்ணுக்கே போயிடுச்சாம். எத்தனை பேர் மௌத்து என்று தெரியாதாம். ரெண்டு மாடிக்கு மேலே எல்லாம் தண்ணி வந்துச்சாம்.” எனக் கூறிவிட்டு முன்பாகக் கிடந்த கதிரையில் அமர்ந்து தலையைத் தடவிக் கொண்டிருந்தார்.

இதைக்கேட்ட அமினாவுக்குப் பொறி கலங்கியது. றம்புக் எல அவளது தோழி ஜெஸாவின் வீடு அமைந்துள்ள ரம்மியமான கிராமம். கண்டி மாவட்டத்தில் அக்குறண பிரதேச சபைக்குட்பட்ட அலவதுகொட அங்கும்புர பிரதான பாதையின் மத்தியில் காணப்படும் அழகிய பசுமையான கிராமம். அக் கிராமத்தைச் சூழ மலைகள் அமைந்திருப்பது அக்கிராமத்தை மேலும் அழகுபடுத்துகிறது. சுமார் அறுநூறு முஸ்லிம் குடும்பங்கள் வாழும் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். வீட்டிலிருந்து வரும்போது ஜெஸாவின் உம்மா வாப்பா சகோதரர்கள் எல்லாம் றம்புக் எலவில்தான் இருந்தார்கள் என நினைத்தபோது அமினாவுக்கு வயிற்றைக் கலக்கியது. ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு ஜெஸாவை அணுகி,

“ஜெஸா. நம்மட பகுதி பெரிசாப் பாதிச்சிருக்கு போல. அதிலும் உங்கட றம்புக் எலவில் மண் சேதம் அதிகம் போல. உடனே வீட்டுக்கு கோல் போட்டுக் கேளு எனப் பதட்டத்துடன் கூறினாள், அமினா.

ஜெஸா உம்மாவுடன் கதைப்பதற்குப் பல முறை முயற்சி செய்தும் பலனில்லாமல் போயிற்று. அமினாவும் தனது வீட்டுக்கும் பல தடவை கோல் பண்ணிப் பார்த்தாள். தொடர்பு கொள்ள முடியவில்லை. நெருக்கடியான வேளைகளில் தொலைத்தொடர்பும் சதி செய்வது கண்டு மனம் வருந்தினாள். வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வது தவிர வேறு வழியில்லை என நினைத்து அனைவரும் இறைவனைப் பிராத்தனை செய்தனர்.

மதிய வேளை அமினாவின் உம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. மகள் அமினா மகிழ்ந்துபோனாள். ஆனால் உம்மாவோ, குரல் தழுதழுக்க மகளை அழைத்து, மவ. எங்க இருக்கீங்க. இங்க எல்லாம் அழிஞ்சு போச்சு. வீட்டில தண்ணி வருதென்று சொல்லி இரவு எங்களை எல்லாம் அழைச்சிட்டுப் போய் ஒரு எடத்தில தங்க வச்சாங்க. அங்கதான் இப்ப இருக்கம். எங்களுக்கு ஒண்ணும் ஆகல. அல்லாட கருணையால தப்பிச்சிட்டோம். வீடு முழுக்க சேறும் சகதியுமாப் போச்சாம். வீட்டிலிருந்த சாமான் எல்லாம் நாசமாப் போச்சாம். வீட்டுக்குப் போவ ஏலா. இங்க பாதுகாப்பு படையும் வெளியிலிருந்து வந்த ஆக்களும் வீடு காணிகளைச் சுத்தம் பண்ணுறாங்க. உங்க வாப்பாவும் அங்கதான் நிண்டு வேலை செய்றாங்க. நீங்க இப்ப வர வேணா. இருக்கிற இடத்திலேயே கவனமா இருங்க. நம்மட ஜெஸா ஆக்கள் இருந்த வீடெல்லாம் மண்ணுக்குள்ளே புதைஞ்சு போச்செண்டு கதைக்கிறாங்க. அவள்ட உம்மா வாப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அல்லாதான் காப்பத்த வேணும் எனக் கூறி அழத் தொடங்கினார், அமினாவின் உம்மா.

“உம்மா நீங்க கவலைப்படாதீங்க. பாதுகாப்பா இருங்க. இன்று எங்களை ஊருக்கு கூட்டி வாரதா பள்ளிவாசல் ஆட்கள் சொல்லிட்டுப் போறாங்க. வெளிக்கிட்டதும் நான் கோல் எடுத்துச் சொல்றேன்.” எனக் கூறிவிட்டு ஜெஸாவை நோக்கி வந்தாள் அமினா.

ஜெஸாவும் ஏனைய இரு தோழிகளும் தங்களது வீடுகளுக்குத் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஜெஸாவைத் தவிர ஏனைய இருவருக்கும் உம்மா வாப்பாவுடன் கதைப்பதற்கு லைன் கிடைத்துவிட்டதும் அவர்களுடன் உரையாடி ஆறுதல் அடைந்தார்கள். ஆனால் ஜெஸாவுக்கு மட்டும் முடியவில்லை. ஜெஸா மிகவும் பதட்டப்பட்டவளாகவும் பயந்தவளாகவும் காணப்பட்டாள்.

ஜெஸாவின் றம்புக் எல கிராமம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்ட சேதியை ஜெஸாவிடம் கூற முடியாது தவித்தாள் அமினா. நல்ல வேளை சமூக வலைத்தளங்கள் அவர்கள் இருந்த இடத்தில் வேலை செய்யவில்லை. அதுவும் ஒரு வகையில் நன்மையாப் போய்விட்டது.

கண்டி பெரிய பள்ளிவாசல் நிருவாகிகளால் வேன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டு தாய்மார்மகளுடன் ஒரு முதியவரும் அடங்கலாக கம்பளை நோக்கிப் பயணமாவதற்காக ஆயத்தமானார்கள்.

“யா அல்லாஹ். எங்களது ஊர்ப்பகுதிக்கு எதுவுமே நடந்து விடக்கூடாது. எனது உம்மா, வாப்பா, தம்பிமார்களை உயிர்களுக்கு ஆபத்தில்லாமல் காப்பாத்திவிட்டாய். வீடு, வாசல், பொருட்கள் போனாலும் பரவாயில்லை. நீ நாடினால் அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். ஜெஸாவின் நிலைதான் மிகக் கவலையாக இருக்கு. அவள்ட குடும்பத்துக்கு என்ன நடந்தது என்று தெரியல்ல. அவள்ட குடும்பத்தக் காப்பாத்து அல்லாஹ். ஜெஸாட முகத்தைக் கூடப் பார்க்க முடியல்ல. அவ்வளது சோகமா இருக்கா. வல்ல ரஹ்மானே எங்க எல்லோரையும் காப்பாத்து. எனக் கண்ணீர் விட்டு அழுதாள் அமினா.

ம்... எல்லாரும் ஏறுங்க என றைவர் கூறியதும் தன் உம்மா, வாப்பா, தம்பி, தங்கை, வீடு வாசல் அனைத்தும் தான் பிறந்து வளர்ந்து வசித்த மண்ணுக்குள்ளேயே புதையுண்ட செய்தி அறியாது தனது வலது காலை முன்வைத்து உள்ளே ஏறி அமர்ந்தாள், ஜெஸா.

 எஸ்.ஏ. கப்பார்.

25.12.25

தன் வினை

 24. தன் வினை

ஏழு வயதில் ஒன்று. ஐந்து வயதில் ஒன்று. இரண்டும் பெண் பிள்ளைகள். திருமணம் முடித்துப் பத்து வருடங்கள் கடந்து விட்டன. பிள்ளைகளுக்குப் புத்தி தெரிந்த பிறகாவது தனது முன்கோபத்தைத் தணிக்க முடியாது தினமும் வேதனைப்பட்டான், முகைமின்.

முகைமின் நல்ல வாட்டசாட்டமான அழகானவன். பல்கலைக்கழகப் பட்டதாரி. தற்போது வேலை செய்யும் நிறுவனம் அவனது மூன்றாவது தொழில் புரியும் இடம். முதலில் பட்டதாரி ஆசிரியராகக் கடமை புரிந்து படிப்பித்த பாடசாலை அதிபருடன் வாக்குவாதப்பட்டு ஆத்திரத்தில் தொழிலைத் தூக்கியெறிந்து விட்டு ஐந்தாறு மாதங்கள் தொழில் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தான்.

மனைவி ஜெஸிலாவும் உயர்தரம் வரை படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தாள். ஜெஸிலா அமைதியான அடக்கமான அழகானவள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது அப்பாவும் ஒரு பட்டதாரி ஆசிரியர். தலைநகரிலுள்ள பிரபல்யமான கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றியவர். அம்மா நல்லதொரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பண்பான பெண். படித்தவர். தொழில் எதுவும் புரியவில்லை.

ஒரேயொரு பிள்ளையை நல்லதொரு ஆடவனுக்குத் திருமணம் முடித்துவைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நன்கு விசாரித்து முகைமினை மணமுடிந்து வைத்தனர். ஜெஸிலாவின் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை ஒரே வீட்டில் ஒன்றாகவே மகள் மருமகனுடன் வாழ்ந்து வந்தனர். ஜெஸிலாவுக்கு இரண்டாவது மகள் பிறந்து எட்டு மாதங்களுக்குள் பெற்றோர்கள் இருவரும் மூன்று மாத கால இடைவெளியில் இயற்கை எய்திவிட்டார்கள். மிகவும் மனம் நொந்து போன ஜெஸிலா பிள்ளைகளைப் பராமரிக்க வேறு வழிகளில்லாது தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு தனது பிள்ளைகளையும் கணவனையும் நன்கு கவனித்துவந்தாள்.

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து நேரத்தோடு வீடு வந்த முகைமின் மிகவும் கோபத்தோடு காணப்பட்டான்.

'என்னங்க. ஒப்பிஸில ஏதாவது பிரச்சினையா? உங்கட முகத்தைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கு. என்ன நடந்தது?' எனப் பக்குவமாய்க் கேட்டாள், ஜெஸிலா.

'இனி நான் அந்தக் கம்பனிக்கு வேலைக்குப் போவதாய் இல்லை. மரியாதை தெரியாத மனேஜர்மார்கிட்ட வேலை செய்ய முடியாது. அதனால் அவன்ட முகத்திலேயே எல்லாத்தையும் வீசி எறிந்துவிட்டு வந்திட்டேன். இனிப் போறதா இல்லை' - எரிந்து தள்ளினான் முகைமின்.

'இஞ்சப் பாருங்க. எனக்கும் தொழிலுக்குப் போக முடியாத நிலை. நம்ம பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பார்க்கவேண்டும். அடிக்கடி சண்டை பிடித்துக்கொண்டு வேலையை விட்டிட்டு வாரது அவ்வளவு நல்லாயில்லை. நல்லா யோசிச்சுப் பாருங்க. இன்னொரு வேலை எடுப்பது எவ்வளவு சிரமம் என்று. உங்களுக்கே நல்லாத் தெரியும். வாழ்க்கைச் செலவு மலைபோல ஏறியிருக்கிற இந்தக் காலத்திலே வேலையில்லாம எப்படி காலத்தைக் கடத்துற' - யாராவது முகைமினுக்குப் புத்தி சொன்னால் அது அவனுக்குப் பிடிக்காது என்பது அவளுக்கு நன்கு தெரிந்தும் வேறு வழியின்றி ஒரே மூச்சில் கூறிவிட்டு, கணவனுக்குக் கோப்பி போட்டு எடுத்து வர உள்ளே சென்றாள்.

கோப்பி தயாரித்துக்கொண்டு வந்த ஜெஸிலா கணவன் இன்னும் அமராது நின்றுகொண்டே யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டு சிறிது கலங்கினாள். 'இந்தாங்க கோப்பி' என்றவாறு கோப்பிக் கோப்பையைத் தன் கணவனிடம் நீட்டினாள். தன் கையை நீட்டி கோப்பிக் கோப்பையை வாங்கிய முகைமின் சற்றும் எதிர்பாராத விதமாக அதை ஜெஸிலாவின் முகத்தை நோக்கி வேகமாக வீசினான்.

நல்ல சூடாக இருந்த கோப்பி முகத்திற் பட்டதும் துடியாய்த் துடித்து வீறிட்டு அலறினாள், ஜெஸிலா. தாயின் அலறலைக் கேட்டு இரு பெண் பிள்ளைகளும் கத்திக் கொண்டு தாயை நோக்கி ஓடி வந்தனர். பிள்ளைகள் வீட்டில் இருப்பதை உணராமல் தான் செய்த செயலை எண்ணி முகைமின் மிகவும் கவலைப்பட்டான். தனது முன்கோபத்தை தன்னால் அடக்க முடியாமல் இருப்பதை எண்ணி மனம் வருந்தினான்.

பெண் பிள்ளைகள் இரண்டும் அழத்தொடங்கின. ஒருவாறு நிலைமையைச் சமாளித்துக்கொண்டு உடனே ஜெஸிலாவையும் பிள்ளைகளையும் தனது காரில் ஏற்றிக்கொண்டு பக்கத்து அரச வைத்தியசாலைக்கு விரைந்தான். மனைவி பிள்ளைகளை வெளியே அமரச் சொல்லிவிட்டு வைத்தியரைக் காண உள்ளே சென்ற முகைமின் சிறிது நேரத்தில் வெளியே வந்து உள்ளே வருமாறு சைகை செய்தான். தன் பிள்ளைகளிடம் கவனமாக இருக்குமாறு கூறிவிட்டு கணவன் நின்ற திசையை நோக்கி நடந்து சென்றாள், ஜெஸிலா. ஒரு நேர்ஸ் ஜெஸிலாவை நோக்கி வந்து கண் வைத்தியர் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

'இருங்க மேடம். கவலைப்படாதீங்க. என்ன நடந்தது என்று எங்களால் யூகிக்க முடிகிறது. இதே போல எத்தனையோ கேஸ்களைப் பார்த்திருக்கோம். என்ன செய்வது விதிப்படித்தான் எல்லாம் நடக்கும். உங்க கணவருடன் கதைத்ததிலிருந்து அவரொரு முன்கோபக்காரர் தவிர கெட்டவரல்ல என்பது புரிகிறது. உங்கள் மீதும் பிள்ளைகள் மீதும் அதீத பாசம் வைத்திருப்பவர் போல்தான் தெரிகிறது. ஏதோ நடந்தது நடந்துவிட்டது. அதை முதலில் விட்டு விடுங்க.' எனக் கூறிவிட்டு ஜெஸிலாவின் இரு கண்களையும் பரிசோதித்தார். சிறிது நேரம் அமைதியாக இருந்த வைத்தியர் 'உங்கட வலது கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் சிறியதொரு சத்திர சிகிச்சை செய்யவேண்டி வரும். இடது கண்ணில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் இடது கண்ணும் சரியாகத் தெரியவில்லை என்று நீங்கள் சொல்வதுதான் எனக்கு வியப்பாக இருக்கு. அதைப் பிறகு பார்ப்போம். முதலில் வலது கண்ணை சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையேல் நிரந்தரமாகப் பார்வை போய்விடும். உங்க கணவரிடமும் கொஞ்சம் பேச வேண்டும். நீங்க சிறிது நேரம் வெளியே இருங்க' என கண் வைத்தியர் கூறியதை நன்கு அவதானித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஜெஸிலாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.

சத்திர சிகிச்சைக்கான நாளும் வந்தது. இறைவன் உதவியால் நல்லபடி சத்திர சிகிச்சையும் முடிவடைந்தது.

'நல்லபடி ஆபரேஷன் முடிவடைந்து விட்டது. ஒரு வாரத்துக்கு ஒரு முறை கிளினிக் வந்து போனால் போதும். பழையபடி பார்வை திரும்ப ஓரிரு வாரங்கள் செல்லும். மருந்து மாத்திரைகளை தவறாது நேரத்திற்கு உட்கொள்ளவும். வாழ்த்துகள். வீட்டுக்குச் சென்று சந்தோஷமாக இருங்கள்.' என்று கணவன் மனைவி இருவரையும் பார்த்துக் கூறிவிட்டு நகர்ந்து சென்றார், சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்.

இந்த இரு வாரங்களும் முகைமின் மற்றும் பிள்ளைகள் இருவரும் ஜெஸிலாவுடன் தனியார் வைத்தியசாலையில்தான் பணம் செலுத்தித் தங்கியிருந்தார்கள்.

வீடு வந்து சேர்ந்தபின் கணவன் மனைவி இருவரிடமும் ஏற்கனவே இருந்த பரஸ்பர புரிந்துணர்வும் அன்பும் படிப்படியாகக் குறையத் தொடங்கின. முகைமின் மீண்டும் தான் வேலை செய்த கம்பனிக்கே வேலைக்குச் சென்றுவந்தான்.  பிள்ளைகள் வழமை போல் பாடசாலை சென்று வந்தனர். குற்ற உணர்வு முகைமினை ஆட்டிப்படைக்கத் தொடங்கியதில் வியப்பொன்றுமில்லை.

பதினைந்து வருடங்கள் ஓடி மறைந்தன. ஆனாலும் நடந்த சம்பவத்தை மறக்கமுடியாது கவலைப்பட்டுக்கொண்டே வாழ்ந்தாள் ஜெஸிலா. ஜெஸிலாவின் நடத்தைகளில் என்றுமே காணாத பல மாற்றங்கள் தென்படத் தொடங்கின. அவளது கண் பார்வை பழையபடி சரியாகிவிட்டதா அல்லது அதன் பாதிப்புகள் இன்னும் அவளைப் பாதித்துக் கொண்டிருக்கின்றனவா என அறிய முடியாது தவித்தான், முகைமின். நாள்கள் செல்லச்செல்ல ஜெஸிலாவின் கண் பார்வை சீராக இல்லை போல் தோன்றுவதாக எண்ணி தினமும் மிகக் கவலைப்பட்டான், முகைமின்.

'ஜெஸிலா, எனக்கு என்னவோ சந்தேகமாக இருக்கு ஜெஸிலா. உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லைதானே? வேண்டுமென்றால் கண் வைத்தியரிடம் சென்று காட்டி சிகிச்சை பெறலாம். நானும் பல நாட்களாக அவதானித்து வருகிறேன். உண்மையைச் சொல் ஜெஸிலா' என வருத்தப்பட்டான், முகைமின்.

'ஒன்றுமில்லைங்க. எனக்கு முழுசாக் கண் பார்வை இல்லாட்டிக்கூட வருத்தப்படமாட்டேன். என்ட பிள்ளைகளின் திருமணத்தை முடிக்கும் வரை எனக்கு ஓரளவு பார்வை இருந்தாப் போதும். அதைத்தான் இறைவனிடம் அனுதினம் வேண்டுகிறேன்.' என்ற ஜெஸிலாவின் கண்கள் பனித்தன.

தன் மனைவியிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பாராத முகைமின் அதிர்ந்துபோனான். தனது முன்கோபத்தால் ஏற்பட்ட விளைவு ஜெஸிலாவை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து மிகவும் வேதனைப்பட்டான்.

நாள்கள் செல்லச் செல்ல ஜெஸிலா 'கண் பார்வை நன்றாகத் தெரியாத ஒருவளாக' மாறி தனது கணவன் முன் நடிக்கத் தொடங்கினாள். தன் கணவனைத் திருத்தியெடுக்கவும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சிறப்புற அமைக்கவும் இதைத் தவிர வேறு வழி அவளுக்குத் தெரியவில்லை.

பிள்ளைகள் இருவரும் வளர்ந்து பருவ வயதை அடைந்துவிட்டார்கள். இருவரும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை முடித்து திருமணமும் செய்துகொண்டு தங்கள் கணவன்மார்களுடன் வெளிநாடு சென்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது வீட்டிலிருப்பது முகைமினும் ஜெஸிலாவும் மட்டுமே. கணவன் வேலைக்குச் சென்ற பின் ஜெஸிலா வீட்டில் தனியாக இருந்து பழக்கப்பட்டுவிட்டாள்.

காலம் தன் கடமைகளைச் சரிவரச் செய்துகொண்டு வரும் அதே வேளை ஜெஸிலாவுக்குத் தன் கணவருடனான அன்பும் பாசமும் குறைவடைந்து இருவருக்குமிடையேயான உறவு விரிவடைந்துகொண்டே வந்தது. இருந்தும் நடந்தவற்றை மறக்க முயற்சித்து இயலாதபோதும் ஜெஸிலா தன் கணவரை நன்றாகவே கவனித்துவந்தாள். இப்போதெல்லாம் முகைமின் அதிகம் கதைப்பதுமில்லை. கோபப்படுவதும் இல்லை.

ஒரு வெள்ளிக்கிழமை காலை தன் நாளாந்த வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்த ஜெஸிலா தொலைபேசி அழைப்புமணி கேட்டதும் எழுந்துசென்று றிஸீவரைக் கையிலெடுத்து  'ஹலோ' என்றாள்.

'நாங்க உங்க கணவன் முகைமின் வேலை செய்யும் அலுவலகத்திலிருந்து கதைக்கிறம், மேடம். ஒரு பேட் நியூஸ். முகைமின் வேலை செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் காயப்பட்டு அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கிறோம். உடனடியாக கொழும்பு கண் ஆஸ்பத்திரிக்கு வாங்க.' - அழைப்பு சில வினாடிகளில் துண்டிக்கப்பட்டது.

எந்தவித பதட்டமும் இல்லாமல் ஒரு ஆட்டோ பிடித்து அவசர அவசரமாக ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றாள், ஜெஸிலா.

'வாங்க, மேடம். கவலைப்படாதீங்க. என்னை ஞாபகம் இருக்கா? உங்களுக்கு கண் ஆபரேஷன் செய்தவன்தான். உங்கட கணவன்ட இரு கண்களிலும் அஸிட் பட்டு மிக மோசமாப் பாதிக்கப்பட்டிருக்கு. கண் பார்வை மீண்டும் திரும்பி வர சான்ஸே இல்ல.' - சர்வ சாதாரணமாகக் கூறிய வைத்தியரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் ஜெஸிலா.

'நான் கடந்த நாற்பது வருடங்களாக கண் வைத்தியராக் கடமைபுரிகிறேன். வெற்றுக் கண்களைப் பார்த்தாலே எனக்குப் புரிந்துவிடும். இவ்வளவு காலமும் பூரணமாகக் கண் தெரியாதது போல் நீங்க நடித்து வருவதும் எனக்குத் தெரியும். அடிக்கடி உங்க கணவன் என்னிடம் வந்து உங்க நடவடிக்கைகளைப் பற்றிக் கூறி ஆலோசனை கேட்பார். நானும் 'கவலைப்படாதீங்க. விரைவில் சரியாகிவிடும்' என்று கூறி அனுப்பி வைப்பேன். இப்ப நீங்க நிரந்தரமாகவே உங்கள் கண்களைத் திறந்து பார்க்கலாம். இனியும் நடிக்கத் தேவையில்லை. கோட் பிளஸ் யு (God bless you).

வைத்தியர் கூறியதைக் கேட்ட ஜெஸிலா விக்கித்து விறைத்து அப்படியே அசைவற்று நின்றாள்.

எஸ். ஏ. கப்பார்.


தலைமுறை மாற்றம்.

23. தலைமுறை மாற்றம்.

நிலோஜினியின் 37 ஆவது பிறந்த நாளன்று, அவளது ஒரே மகள் அனோஜாவுக்கும் 16 ஆவது பிறந்த நாள். சொல்லி வைத்தாற் போல் இருவரும் ஜனவரி ஒன்பதாம் திகதி பிறந்தவர்கள். அதனால் தாயும் மகளும் ஒரே தினத்தில் அவர்கள் வழக்கமாகச் செல்லும் ஹோட்டலுக்குச்; சென்று ஒரு சில நண்பர்களுடன் தங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதுண்டு. அனோஜாவின் வயதைப் பார்த்தால், நிலோஜினி 20 அல்லது 21 இள வயதில் திருமணம் முடித்து ஓரிரு ஆண்டுகளில் அனோஜா பிறந்திருக்க வேண்டும்.

அனோஜாவின் அம்மா நிலோஜினி புகழ்பெற்ற நாகரிகமான ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவள். சாதாரண தரத்துடன் தனது படிப்பை நிறுத்திக் கொண்டவள். அனோஜாவின் அப்பா கருணாகரன் பிரபல்யமான வர்த்தகர். தனியாக ஏற்றுமதி இறக்குமதிக் கம்பனி ஒன்றை சொந்தமாக நடத்திவருகிறார். அவருக்கு வயது 57. தோற்றத்தில் 47 வயது மதிக்கத்தக்கவர். திடகாத்திரமானவர். நன்றாகப் படித்தவர். மும்மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். நிலோஜினியை இரண்டாந் தாரமாகக் கைப்பற்றியிருக்க வேண்டுமென நினைப்பவர்கள் அதிகம். சிலர் சொத்துக்காக நிலோஜினியை அவளது பெற்றோர்கள் வயது முதிர்ந்தவருக்குத் திருமணம் முடித்து வைத்து விட்டதாகக் கூறுவதுண்டு. இன்னும் சிலர் காதல் திருமணம் என்றும் வீடடில் சொல்லிக்கொள்ளாமல் பெற்றோரை வெறுத்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டவர்கள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் உண்மை எதுவென யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

நிலோஜினி பணக்காரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் பண்பாகவும் நாகரிகமாகவும் நடப்பவள். மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பவள். கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவள். மற்றவர்களைப் போல் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களிலோ அன்றி கைத்தொலைபேசியிலோ மூழ்கிக்கிடப்பவள் அல்ல. வீட்டில் வேலைக்காரி இருந்தாலும் தன்னுடைய சொந்த வேலைகளைத் தானே செய்வதோடு சமையல் வேலைகளிலும் வேலைக்காரிக்கு உதவி செய்வாள். எவருடனும் கடிந்து பேச மாட்டாள். இரக்க குணமுள்ளவள்.

ஆனால் மகள் அனோஜா நாகரிகத்தில் ஊறிப்போய் மற்றவர்களை மதிக்கும் பண்பு அற்றுப் போனவள். முன்கோபக்காரி. எடுத்தெறிந்து பேசுபவள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என வாதிடுபவள். நண்பர்களுடன் சகஜமாகப் பழகுபவள். ஆண் நண்பர்கள் அதிகம். முழு நேரமும் கைத்தொலைபேசியுடன் உறவாடுபவள். ஆனாலும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. 'ஒரே பிள்ளையென்று அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்தாலும் இப்படித்தான் பிள்ளைகள் வளர்வதுண்டு' என வருத்தப்பட்டுக் கொள்வாள் நிலோஜினி.

'மேடம். மேல் மாடி றூம் ஓகே மேடம்.' - முதலாவது மாடியில் அமர்ந்திருந்த நிலோஜினியிடம் வெயிட்டர் வந்து பக்குவமாகக் கூறியதும், தனது பெண் நண்பிகளுடன் மேல் மாடி நோக்கிச் சென்றாள் நிலோஜினி. மேல் மாடியில் விசாலமான அறை ஒன்று பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்ற வகையில் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தனது ஐந்தாறு நண்பிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து, கேக் வெட்டி, மதிய உணவு வழங்கி பிறந்த நாளைக் கொண்டாடுவது வழக்கம். சில வேளைகளில் அவளது கணவர் கருணாகரனும் குறித்த நேரத்துக்கு வந்து உணவருந்திச் செல்வதுண்டு.

நிலோஜினி தனது கைத்தொலைபேசியை உயிர்ப்பித்து, 'அனோஜா, மேலே நாங்க காத்திருக்கோம். உன் நண்பிகளை அழைத்துக்கொண்டு மேலே வா.' என மகளை அழைத்தாள்.

'என்ன அம்மா. அவசரப்படுத்துற. நண்பிகள் எல்லாம் வந்துட்டாங்க. போய்ஸ்தான் இன்னும் வரல்ல. நீங்க ஆரம்பிங்க. இதோ வந்திடுவோம்.' எனக் கூறித் தொடர்பைத் துண்டித்தாள். மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி 'என்னடி விசர்க்கதை கதைக்கிற. எத்தனை தடவை சொல்லியிருக்கேன், போய்ஸைக் கூப்பிடாதே என்று. இன்று அப்பாவும் வருவதாகக் கூறியிருக்கார். எனக்குத்தான் பேசப் போறார்.' எனக் கடிந்து கூறினாள்.

'அம்மா, அப்பாவை நான் எப்படியோ சமாளிச்சுக்குவேன். நீங்க உங்கட நண்பிகளைக் கவனியுங்க. வயது போன ஆட்கள். மயங்கிக் கியங்கி கீழே விழுந்துடப் போறாங்க.' சிரித்தவாறே தொடர்பைத் துண்டித்தாள்.

சிறிது நேரத்தில் அனோஜாவின் நண்பர்களும் கலந்து கொள்ள வௌ;வேறாகக் கேக் வெட்டி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி, மதிய உணவும் பரிமாறப்பட்டது. அனோஜாவின் அப்பா வருவதாகக் கூறியதால் என்னவோ அனோஜாவின் ஆண் நண்பர்கள் மிகவும் அமைதியாகவும் ஆர்ப்பாட்டங்களில்லாமலும் அமர்ந்திருந்து உணவருந்தி அனோஜாவை வாழ்த்திவிட்டு பிரிந்து சென்றனர். ஆனால் அலுவலக வேலைப் பழு எனக் கூறி அவளது அப்பா வரவில்லை. அப்பா வராதது அனோஜாவுக்குச் சிறிது ஏமாற்றமாகவும் அதேவேளை அவளது அம்மாவுக்கு நிம்மதியாகவும் இருந்தது.

வீடு வந்து சேர்ந்த நிலோஜினி நீண்ட நேரம் யோசித்தாள். தனது மகளின் எதிர்கால வாழ்க்கையை முன்னிட்டு இனிமேல் தனது பிறந்த நாட்களைக் ஹோட்டலிலோ அன்றி வீட்டிலோ கொண்டாடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள். அவள் விரும்பியது போல் அனோஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மட்டும் வீட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பெரும்பாலும் அனோஜாவின் அப்பாவும் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் ஓரிரு கொண்டாட்டங்களுக்குச் சமுகமளித்த ஆண் நண்பர்கள் தொடர்ந்துவந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதில் நின்றும் படிப்படியாகத் தவிர்த்துக் கொண்டனர்.

காலங் கடந்து சென்றது. அனோஜா நன்றாகப் படித்து வந்தாள். இம்முறை உயர்தரப் பரீட்சையில் நன்றாகச் சித்தியடைந்து தான் விரும்பியது போல் பல்கலைக் கழகம் சென்று ஒரு வைத்தியராக வரவேண்டுமென எண்ணியிருந்தாள். ஆனால் அவளொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது. பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி இருந்த போதும் வைத்தியத் துறைக்குத் தெரிவாகவில்லை. மிகவும் மனமுடைந்து காணப்பட்டாள். தன் கனவுகள் நனவாகவில்லையே என எண்ணி அடிக்கடி அழுதாள். 

'அனோஜா, ஏன் மகள் இவ்வளவு கவலைப்படுற. இன்னும் இரண்டு தடவை எடுக்கலாம்தானே! உனக்கு சின்ன வயது தானே. இன்னுமொரு தடவை எடுத்துப் பாரு. அப்பா வந்ததும் சொல்லி டியூஷன் ஏற்பாடு ஏதாவது செய்து தொடர்ந்து படி.' என ஆறுதல் கூறினாள், அம்மா.

வரவேற்பறை சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அனோஜா அம்மாவின் ஆறுதல் வார்த்தைகளுக்கு எதுவுமே கூறாது, எழுந்து சென்று தனது படுக்கையறைக் கட்டில் மீது சாய்ந்துகொண்டு தலையணையை முகத்தில் அழுத்தியவாறு அழுதாள்.

சில மணி நேரத்தில் அப்பா வந்ததும் எழுந்து வந்து 'அப்பா! நான் வெளிநாடு சென்று படிக்கப் போறேன். ஏற்பாடு செய்யுங்க' - இரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள். கேட்டுக் கொண்டிருந்த அம்மா அனோஜாவை நோக்கிச் சென்றதும் அவளது விசும்பல் சத்தங் கேட்டு, எதுவுமே கூறாது வெளியே வந்துவிட்டாள்.

வைத்தியக் கல்வி கற்க கடல் கடந்து வெளிநாடு சென்று ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. வருடத்தில் ஒரு முறை வீடு வந்து அப்பா அம்மாவுடன் ஒன்றரை அல்லது இரு மாதங்கள் தங்கியிருந்து மீண்டும் செல்வதுண்டு. வீட்டில் தங்கியிருக்கும் நாட்களில் முன்புபோல் அம்மாவுடன் அவ்வளவாக உரையாடுவதில்லை. தானும் தன் பாடும் என்பது போல் தனது படுக்கையறையிலேயே நேரத்தைக் கழிப்பாள். அப்பாவுடன் சில வேளை சிரித்துப் பேசுவாள். 

இம்முறை வீடு வந்த தனது மகளில் ஏற்பட்டிருக்கும் விசித்திர மாற்றங்களைக் கடந்த ஒரு மாதமாகக் கண்டும் காணாதது போல் அவதானித்து வந்தாள் நிலோஜினி. பிந்திய இரவு நேரங்களில் நீண்ட நேரம் கைத்தொலைபேசியில் உரையாடுவாள். அம்மா நடமாடுவது தெரிந்தால் கதவை தாளிட்டுக்கொள்வாள். இது இறுதி வருடம் என்பதாலும் இறுதிப் பரீட்சை எழுதவேண்டி உள்ளதாலும் மகள் பதற்றமாக இருக்கிறாள் என நினைத்து ஆறுதல் அடைந்தாள். இருந்தும் பெற்ற தாயின் உள்ளம் கடந்த ஒரு மாதமாகப் பரிதவிப்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.

இன்று மீண்டும் பயணிக்கும் நாள். நேரம் நெருங்க நெருங்க பரபரப்பாகத் தொடங்கினாள் அனோஜா. ஓரிரு கைத்தொலைபேசி அழைப்புகளையும் தவறவிட்டிருந்தாள். அவள் வோஷ் றூம் சென்றபோது ஓர் அழைப்பு நீண்டு கொண்டு செல்லவே உள்ளே சென்று கைத்தொலைபேசியை எடுத்தாள், நிலோஜினி. அழைப்பு முடிவுற்ற போதும் திரையில் 'மை லிட்டில் கார்ட்' என மிளிர்ந்தது. 

அப்படியே வைத்துவிட்டு வெளியே வந்த நிலோஜினிக்கு 'மை லிட்டில் கார்ட்' என்ற பெயர்  சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தியது. தனது மகள் யாரையாவது காதலிக்கிறாளா? அப்படியானால் 'மை கார்ட்' என்றுதானே போட்டிருப்பாள். அது என்ன 'மை லிட்டில் கார்ட்?'. பயணம் புறப்படும் போது பிரச்சினைப் பட்டுக்கொள்ளக் கூடாது என எண்ணி பிறகு பார்ப்போம் என விட்டுவிட்டாள்.

விமான நிலையத்தை அடைந்து விடைபெறும்போது அம்மாவைக் கட்டியணைத்து  முத்தமிடுவது வழக்கம். அன்றும் அவ்வாறுதான் அம்மாவை நோக்கிவந்து முத்தமிட்டாள், அனோஜா. ஆனாலும் அம்மாவின் கண்களை நேரடியாகப் பார்க்க முடியாமல் தடுமாறினாள். இதனை அவதானித்த அவளது அம்மா 'எங்கோ ஏதோ தப்பு நடக்கிறது என்பது மட்டும் தெளிவாத் தெரியுது' என எண்ணி வருந்தத் தொடங்கினாள்.

வீடு வந்து சேர்ந்த நிலோஜினி இரண்டு நாட்கள் இருப்புக் கொள்ளாது தவித்தாள். எதற்கும் தன் மகளுடன் படிக்கும் பக்கத்துக் கிராம வினோதினியின் அம்மாவைத் தொடர்பு கொண்டு வினோதியின் வட்ஸ்அப் இலக்கத்தைப் பெற்றுக் கொண்டாள். எப்படியாவது தன் மகள் மீது ஏற்பட்ட சந்தேகத்தைத் துடைத்தெறிந்துவிட வேண்டுமெனத் துடியாய்த் துடித்தாள். அவசரப்பட்டு கணவனிடம் ஏதும் கூறிவிடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தாள். தாமதியாது வினோதினியைத் தொடர்புகொண்டு தன் மகள் பற்றி விசாரிக்கவேண்டுமென எண்ணி அழைப்பை ஏற்படுத்தினாள். மூன்று முறை அழைத்தும் அழைப்புக்குப் பதில் கிடைக்கவில்லை. அழைப்பு இலக்கம் சரியா என ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அழைத்தாள். நான்காவது முறையும் வெற்றி கிடைக்கவில்லை. ஏமாற்றத்தில் சோர்ந்து போய் சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தாள். கழுத்தில் தனது இடது புறங் கையை வைத்துப் பார்த்தாள். உடல் வேகமாகச் சூடாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. உள்ளே சென்று இரண்டு பனடோல் மாத்திரைகளை வாயில் இட்டு நீரை அருந்திவிட்டு திரும்பியபோது கைத்தொலைபேசி அலறியது. கைகள் நடுங்க கைத்தொலைபேசியை எடுத்து ஹலோ என்றாள்.

'அன்ரி. நீங்க அனோஜாவோட அம்மாதானே. உங்கட நம்பர் எங்கிட்ட ஏற்கனவே இருக்கு. அவசரத்துக்குத் தேவை என்றா நல்லம் என்று அனோஜாதான் கொடுத்து வைச்சா. இப்ப எங்களுக்கு பாடம் நடக்கிறதாலே உடனே எடுக்க முடியல்ல' என்று கூறி என்ன விடயம் என வினவினாள்.

 அனோஜா பற்றி நாசுக்காக வினவினாள் நிலோஜினி.

'சரிம்மா. பதற்றப்படாதீங்க. அனோஜா எனக்குப் பக்கத்தில்தான் இருக்கா. இப்ப பாடம் நடக்கிறதால கதைக்க முடியாது. அவ றூமுக்குச் சென்றதும் உங்களோட கதைக்கச் சொல்றேன். அனோஜாட விடயம் எல்லாம் உங்களுக்கு தெரியும் என்றுதான் நினைச்சேன். இதெல்லாம் இங்க சகஜம் அம்மா. சரிம்மா சரி. கவலப்படாதீங்க' - நமக்கேன் வீண் வம்பு என நினைத்து பட்டும் படாமலும் கூறிவிட்டு நழுவிக் கொண்டாள் வினோதினி.

அனோஜாவின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலோஜினிக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. கடவுளே! நான் நினைப்பது போல் விபரீதமாக எதுவுமே நடந்துவிடக்கூடாது என எண்ணி இல்லாத தெய்வங்களை எல்லாம் வேண்டி நின்றாள். நா வறண்டது. சிறிது நீர் அருந்தினால் நலம் என எண்ணி எட்டிக் கால் வைத்தவளை கைத்தொலைபேசியின் அலறல் தடுத்து நிறுத்தியது.

விரைந்து சென்று, 'அனோஜா, மகள் அனோஜா' என்றாள்.

'அம்மா, எப்படியாவது உன்னிட்ட சொல்லணும் என்றுதான் நினைத்து பல தடவை முயற்சி செய்தேன்;, ஆனா முடியல்ல, அம்மா. என்னை வெறுத்திடுவீங்க என்ற பயமா? அல்லது அப்பா என்மீது வைத்திருக்கிற பாசத்தின் வெளிப்பாடு நிலை குலைந்துவிடும் என்ற எண்ணமா? அல்லது உங்களப் போன்ற பழைய தலைமுறைக்கு இத எப்படிப் புரிய வைப்பது என்ற வருத்தமா? எனத் தெரியவில்ல. இந்த வருஷம் என் படிப்பு முடிஞ்சதும் லண்டனுக்குப் போகலாம் என்று எண்ணியிருக்கோம். ஏற்பாடு எல்லாவற்றையும் அவர் செய்திட்டிருக்கார். பிள்ளையக் கூட்டிச் செல்வதில்தான் சின்ன சிக்கல். இன்னும் அவக்குப் பிறப்புப் பதிவு வைக்கல்ல. எங்கட திருமணப் பதிவு கூட இன்னும் செய்யல்ல. எப்படியும் இம்முறை ஊருக்கு வரக் கிடைக்காது. அவரும் அவங்க அம்மா வீட்டுக்குப் போகமாட்டார். நாங்க நேரா லண்டன் போயிடுவோம்.' - சர்வசாதாரணமாகச் சொல்லி முடித்தாள் அனோஜா.

அனோஜா சொல்லச் சொல்ல நிலோஜினிக்குக் குலை நடுக்கம் ஏற்பட்டது. அடி பாவி எங்களை ஏமாத்திப் போட்டியேடி என மனம் பதைபதைத்தவளாக தன் அடிவயிற்றை வலது கையால் அழுத்திப் பிடித்தவாறு தொடர்ந்தாள்.

'என்னடி சொல்ற. பெத்து வளத்து வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பி நாட்டுக்குச் சேவை செய்ய ஒரு டொக்டரா வருவாய் என்று பார்த்தா, ரோஷம் மானம் மரியாதை எல்லாம் இழந்து யாரோ ஒரு தறுதலையை காதலிச்சு கல்யாணம் பண்ணினதும் இல்லாம குடும்பம் நடத்தி பிள்ளையும் பெத்துக்கிட்டியா? எப்பிடிடி உனக்கு இந்த மனசு வந்தது? நம்மட கலாச்சாரம் சம்பிரதாயங்கள் குடும்ப கௌரவம் எல்லாத்தையும் ஒரு நொடியில குழிதோண்டிப் புதைச்சிட்டயே. ஊரிலே எப்படி நாங்க தலைநிமிர்ந்து வாழுற? உங்க அப்பன் அறிஞ்சா உன்ன மட்டுமில்லடி என்னையும் ரெண்டு ரெண்டு துண்டா வெட்டிப் போட்டிட்டு அவரும் செத்திடுவார். யார் செய்த பாவமோ எங்கட தலையிலே மண்ணள்ளிப் போட்டிட்டயே. ' - என செய்வதறியாது புலம்பினாள்.

'அம்மா! குடும்பம் நடத்தி பிள்ளை பெத்துக்கிறது என்பதெல்லாம் பழைய கதை. உங்களப் போல பழசுகள் எல்லாம் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று அப்பா அம்மா காட்டுறவன் கட்டை என்றாலும் குட்டை என்றாலும் சொட்டை என்றாலும் கழுத்த நீட்டின காலம் மலை ஏறிப்போச்சு. இது நவீன காலம். நாங்க விரும்புறவனோடு கைகோர்த்துக் கொண்டு பழகி அவனைப் புரிந்து கொண்டு பிடிச்சா வாழ்ந்து பார்க்கிற காலம் இது. பிடிக்காட்டி இருவரும் டீசண்டா பிரிஞ்சிடுவோம். தப்பித் தவறி குழந்தை கிடைச்சாக் கூட அது தப்பில்லை. அப்படிப் பிறந்த குழந்தைகளை வளர்க்கிறதுக்கென்றே இங்கே நிறைய இடம் இருக்கு.'

'இதைத்தான் அம்மா - லிவ் இன் ருகெதர் (Live in together) என்று சொல்வாங்க. சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்வது. இருவரும் தானாக முன்வந்து ஒன்றாக வாழ ஒப்புக்கொள்வது. இந்த உறவுகள் சட்ட அல்லது மத விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுவதில்லை. பரஸ்பர புரிதலை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலும் பொருந்தக்கூடிய தன்மையை ஆராய்வதற்கும் திருமணம் அல்லது நீண்டகால உறுதிப்பாட்டைத் தீர்மானிக்கு முன் ஆழமான தொடர்பை உருவாக்குவதற்கும் ஒரு வழியாகக் காணப்படுகிறது இந்த லிவ் இன் ருகெதர். விரும்பினா வாழ்ற இல்லாட்டி விட்டிட்டுப் போற'

அனோஜா கதைக்கக் கதைக்க நிலோஜினியில் தலை விறைக்கத் தொடங்கியது. கைகள் நடுங்கின. கால்கள் இருப்புக் கொள்ளாது தள்ளாடின. வியர்த்துக் கொட்டியது. கையிலிருந்த கைத்தொலைபேசி நழுவிக் கீழே விழுந்து வேறுவேறாகிய இரு பாகங்கள் எட்டாத தூரத்தே சிதறிக் கிடந்தன.

'அம்மா, அம்மா! டோன் வொறி. டேக் இட் ஈஸி' என்ற வார்த்தைகள் நிலோஜினியை விட்டும் தூரமாக, மிகத் தூரமாக விலகிச் சென்றுகொண்டிருந்தன.

(முற்றும்)

- எஸ். ஏ. கப்பார்.


ஜீவநதி ஆடி மாத இதழில் (01-07-2025) பிரசுரிக்கப்பட்டது. அதன் பிரதம ஆசிரியர் க. பரணீதரன் அவர்களுக்கு மிக்க நன்றி.


மூன்று கால் ஆட்டுக்குட்டி.

 

22. மூன்று கால் ஆட்டுக்குட்டி.

 “பக்கத்துத் தோட்டத்தில சண்டை நடக்குது போல. எந்நேரமும் அதையே நோண்டிக்கொண்டு இருக்காம வெளிய போய் என்னெண்டு பாருங்க.” – இதுவரை தனது கைத்தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்த அனஸின் மனைவி அதை மேசையில் வைத்துவிட்டு கணவனின் கவனத்தைத் திசை திருப்பினாள்.

தன் கையிலிருந்த கைத்தொலைபேசியை பக்கத்திலிருந்த கதிரை மீது வைத்துவிட்டு எழுந்த கணவனிடம் “அதையும் கையோட எடுத்திட்டுப் போங்க” என அறிவுரை கூறியபோது மீண்டும் குனிந்து தனது கைத்தொலைபேசியை எடுத்தவன் “மற்றவர்களின் புதினங்களை வீடியோ வடிவில் பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி என் மனைவிக்கு” என முணுமுணுத்தவாறு வீதிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் அனீஸ்.

எதிர் வீட்டு நண்பன் றமீஸ் வெளியே நின்று எதையோ அவதானித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அனீஸ், “என்ன மச்சான் காலையிலேயே பெரிய சத்தம் கேட்குது. என்ன ஏதாவது சண்டையோ” என வினவினான்.

“இல்ல மச்சான். நம்மட இறமுளார்  மாமாட தோட்டத்துக்குப் பக்கத்துல ஒரு குடும்பம் காணி வாங்கி வீடு கட்டிக்கொண்டு இருக்காங்க இல்ல. அந்த வீட்டுக்காரன் பெரிய கில்லாடி போல இருக்கான். நேற்றிரவு இறமுளார்  மாமா வளர்க்கிற ஆட்டுக்குட்டி ஒன்றுட ஒரு கால தறிச்சிட்டான் போல” என்று கூறி முடிப்பதற்குள் “என்ன! ஆட்டுக்குட்டிட காலத் தறிச்சிட்டானோ? இது பெரும் பாவம் இல்ல. வா போய் என்ன எண்டு பாப்போம்” எனக் கூறியவாறு  றமீஸை அழைத்தான், அனீஸ்.

“நீ போய் பாரு மச்சான். நான் இப்பதான் பாத்துப்போட்டு வாரன்.” எனக் கூறினான், றமீஸ்.

இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன் மிகக் குறைந்த விலையில் சிறிய வீட்டுடன் ஓர் ஏக்கர் காணி கிடைத்ததால் தான் வசித்து வந்த இடத்தை வாடகைக்குக் கொடுத்துவிட்டு மனைவியுடன் வந்து குடியேறினான், அனஸ். புதிதாகக் குடிவந்தவர்களைப் பார்ப்பதற்குப் பக்கத்திலுள்ளவர்கள் இடைக்கிடை    வந்து தரிசித்துச் சென்றனர். வந்தவர்களில் இறமுளார் மாமாவின் மனைவி அனஸின் மனைவிக்குப் பிடித்துப்போகவே அவர்கள் நண்பிகளாயினர்.

இறமுளார் மாமா அவ்வளவு படிக்காதவர் என்றாலும் நல்ல பண்பானவர். நல்ல உழைப்பாளி. அவர் வசிக்கும் காணி மிகப் பெரியது. நாலு ஏக்கர் இருக்கும். வலது பக்க மூலையில் சிறிய வீடொன்று கட்டி மனைவி மக்களுடன் வாழ்ந்து வருபவர். இடது பக்க மூலையில் பெரியதோர் ஆட்டுக் கொட்டில் அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். மிகுதிப் பகுதியில் மரக்கறித் தோட்டம் செய்து வருகிறார். தானும் தன் பாடும் என்று இருப்பவர்.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் இறமுளார் மாமாவின் பக்கத்துக் காணியில் அரை ஏக்கர் காணித்துண்டு ஒன்றை வாங்கி, சிறிய வீடு ஒன்றைக் கட்டிய பின் மனைவியுடன் வந்து குடியமர்ந்தான் உவைஸ். பார்ப்பதற்கு அப்பாவி போல தெரிந்தாலும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போடத்தொடங்கினான்.  உவைஸ் என்ன தொழில் செய்கிறான் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு வாரத்தில் ஓரிரு நாட்கள்தான் வீட்டுக்கு வருவான். வந்ததும் வராததுமாக பக்கத்து வீடுக்காரர்களில் ஒருவருடனாவது சண்டை பிடிக்காமல் இருக்கமாட்டான். அதனால் அனஸ் மற்றும் றமீஸ் குடும்பம் அவனுடன் நல்ல உறவு வைத்துக்கொள்வதில்லை.

இறமுளார் மாமாவின் வீட்டு முற்றத்தில் கூடியிருந்த அயலவர்களுடன் இணைந்துகொண்ட அனஸ் “என்ன நடந்தது மாமா?” என வினவினான்.

“இஞ்ச பாருங்க தம்பி இந்த அநியாயத்த. வாயில்லா  ஜீவன்ட காலத் தறிச்சிட்டான் பாவி மகன். அவன் நல்லா இருப்பானா? நாசமாப்போவான். அவன்ட புள்ள குட்டிகளுக்கும் இப்படித்தான் நடக்கும்.” எனச் சபித்தபடி கண்கலங்கினார், இறமுளார் மாமா. அப்போதுதான் ஒரு கால் தறிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆட்டுக்குட்டியைப் பார்த்தான், அனஸ். ஒரு கால் துண்டாடப்பட்ட நிலையில் அவருக்குப் பக்கத்தில் சோகமே உருவாகக் கிடந்தது. இறமுளார் மாமாவின் முகத்தைப் பார்ப்பதை விட அந்த ஆட்டுக்குட்டியின் முகத்தைப் பார்ப்பதுதான் எனக்குப் பெரும் சங்கடமாக இருந்தது. பாவம் அந்த ஆட்டுக்குட்டி. ஒரு கால் இல்லாமல் எப்படித்தான் வாழப்போகுதோ.

“மாமா! இத இப்படியே விட்டுவிடாம போலீசுக்குப் போங்க. போய் ஒரு முறைப்பாடு செய்யுங்க. அவங்க மிச்சத்தப் பாத்துப்பாங்க. அதுக்கு முதல்ல பக்கத்துக் கிராமத்தில இருக்கிற மிருக வைத்தியரக் கூப்பிட்டு ஆட்டுக்குட்டியக் காட்டுங்க. நேரம் போனா ஆட்டுக்குட்டிக்கு ஏதும் ஆகிடும்.” என அறிவுரை கூறினான், அனஸ்.

“இல்ல தம்பி. நான் போலீசுக்கெல்லாம் போகப் போறல்ல. அல்லாஹ்கிட்ட பாரம் கொடுத்திட்டேன். அவன் பாத்துக்குவான். மிருக வைத்தியருக்கு சொல்லி அனுப்பியிருக்கேன். அவர் வந்து மருந்து கட்டி சுகப்படித்திடுவார்.” எனக் கூறிய இறமுளார் மாமாவிடம் விடைபெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்து நடந்தவற்றை தனது மனைவியிடம் கூறி மனவருத்தப்பட்டான், அனஸ்.

இச் சம்பவம் நடந்த பிற்பாடும் உவைஸ் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நடந்துகொள்ளும் விதம் மிக மோசமாக இருந்ததால் அந்தச் சிறிய கிராமத்து மக்கள் உவைஸ் குடும்பத்தை அந்த ஊரிலிருந்து அப்புறப்படுத்த முனைந்து வெற்றியும் கண்டனர். உவைஸ் தான் குடியிருந்த காணியை விற்றுவிட்டு வேறு ஊருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டான்.

நாட்கள் மிக வேகமாக நகர்ந்துவிட்டன. உவைஸ் ஊரைவிட்டுச் சென்று சுமார் ஐந்தாறு வருடங்களாகிவிட்டன.

ஒரு நாள் அனஸ் வீட்டுக்கு வந்த றமீஸ், இருவரும் உரையாடிக்கொண்டிருந்த போது ஏதோ ஞாபகம் வந்தவனாக “அனஸ், ஒரு விஷயம் தெரியுமா? நம்ம இறமுளார் மாமாட பக்கத்து வீட்டில இருந்த உவைஸ் இருக்கானே”

“ஆமா. அவர்ர ஆட்டுக்குட்டிட காலத்தறிச்சவன்தானே?’’

“அவன்தான். அவனுக்கு கிட்டத்திலே ஆஸ்பத்திரியிலே ஒரு பிள்ளை கிடைச்சிருக்காம். அந்தப் பிள்ளைக்கு மூன்று கால்களாம்.”

றமீஸ் சொல்லிமுடிப்பதற்குள்,

“யா அல்லாஹ். நீ படைத்த மனிதர்கள் அறியாமல் செய்யும் பாவங்களை மன்னித்துவிடு. இவ்வுலகில் உனது தண்டனைகளை வழங்கிவிடாதே, அல்லாஹ்.” எனக் கூறியவாறு நண்பன் றமீஸின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான், அனஸ்.

(முற்றும்)

எஸ். ஏ. கப்பார்.

(தமிழ்நெஞ்சம் ஜனவரி 2025 புத்தாண்டு சிறப்பு மலரில் பிரசுரமானது.)

அவன் வகுத்த வழி.

 

21. அவன் வகுத்த வழி.  

வாப்பா இப்படிக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. உம்மா ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் கண் கலங்கியபடி அமர்ந்திருந்தார்.

“எல்லாம் இந்த புரோக்கர் சாயிவுத்தம்பி பார்த்த வேலை. நம்மள நல்லா ஏமாத்திப்போட்டான். தூரத்து சொந்தக்காரன் எண்டுதான் நானும் நம்பின. இவன் இப்படிச்செய்வானெண்டு நான் நம்பல. மாப்பிளட உம்மா, வாப்பா, தம்பி கூட ஒரு வார்த்தை சொல்லல்ல.” – கண்களில் கசிந்த நீரை தனது வலதுபக்கச் சட்டையில் துடைத்துவிட்டு பக்கத்திற் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார், வாப்பா.

“சரி. மாப்பிள வீட்டுக்காரங்கதான் ஆயிரம் பொய்யச்சொல்லி ஒரு கலியாணத்த நடத்தி முடிச்சிட்டாங்க. இந்த ஊர் ஒலகமெல்லாம் திரிஞ்சி ஆயிரம் பேருக்கு புத்தி சொல்லுற நீங்க ஒரு மனிசனுக்கிட்டாயாலும் விசாரிக்கல்லய? தொடர்ந்து படிக்கப்போறன் எண்டவளப் படிக்கவும் விடல்ல. நீங்கதான் நல்ல மாப்பிள்ள. இஞ்சீனியர் மாப்பிள்ள. இதயும் விட்டா மாப்பிள தேடுறது கஷ்டம் எண்டும், நாம கண்ண மூடுறதுக்குள்ள அவள்ள விஷயத்த முடிச்சிடுவமெண்டு அவசரப்பட்டு முடிச்சிட்டயள்.” – உம்மா இவ்வளவு துணிச்சலாகக் கதைப்பார் என நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

நல்லது கெட்டதுக்கெல்லாம் வந்து என்ன ஏது என விசாரிச்சிட்டுப் போகும் பக்கத்து வீட்டு ஜெசிமாட உம்மா,  “மச்சி, எதுக்கும் மாப்பிளய பத்தி நல்லா விசாரிச்சுக்க. பக்கத்து ஊர்க்காரங்க எண்டாலும் நமக்கு அவங்கள நல்லா தெரியா. அவங்கட சாதி சனத்தோடயும் பழக்கமில்லை. இப்பல்லாம்  இஞ்சீனியர் இஞ்சீனியர் எண்டு முடிச்ச மாப்பிள்ள எல்லாம் ஒரு தொழிலும் இல்லாம, குடும்பங்களும் விரிசலாகி பெரிய பிரச்சினயாக் கிடக்கு.” என உம்மாவிடம் கூறியதையும் அதற்கு, பக்கத்திலிருந்த வாப்பா “கலியாணத்தக் குழப்ப சனம் ஆயிரம் பொய் சொல்லும். அதுக்கெல்லாம் காது கொடுத்தா நாம ஒண்டுமே செய்ய ஏலா” எனக் கூறியதையும் இப்போது  நினைத்துப் பார்க்கும் வேளை எனக்குப் பயமாக இருக்கிறது.

“வாப்பா நீங்க ஒண்டுக்கும் கவலப்படாதீங்க. உம்மாவோடயும் சண்டை பிடிக்காதீங்க. எல்லாம் அவன்ட நாட்டம். இது நீங்க தெரியாமச் செஞ்ச தவறு. இந்த விஷயத்திலே எண்ட பிழையும் இருக்கு. பொண்ணு பாக்க வந்தவர்கிட்ட அவர்ர தொழில், படிப்பு சம்மந்தமாக நல்லா விசாரிக்கல்ல. சிவில் என்ஜினியரிங் படிச்ச எண்டுதான் சொன்னார். அவர் உண்மையான என்ஜினியர் இல்ல என்பது ஒண்ணரை வருஷம் கழிச்சு பிள்ளையும் பொறந்த பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. அவரில வேற எந்தக் குறையுமில்ல வாப்பா. என்னோடயும் பிள்ளையுடனும் அன்பாத்தான் இருக்கார்.” எனச் சமாதானப்படுத்திவிட்டு நகர்ந்து எனது அறைக்குச் சென்றேன்.

நான் உயர்தரக்கல்வி முதலாம் ஆண்டு படிக்கும்போதே எனக்கு மாப்பிள பாக்கத் தொடங்கிட்டாங்க. அதுவும் டொக்டர் மாப்பிள. நான் தொடர்ந்து படிக்க விரும்பியும் வாப்பா கேட்கவில்லை.

“இங்க பாரு மகள். எங்களுக்கு நீ ஒரே பிள்ளை. எனக்கும் வயசு போகுது. உம்மாவுக்கும் சுகமில்ல. ஒனக்கு என்ன குறை. வீடும் கட்டிமுடிஞ்சு. நான் இவ்வளவு காலம் சம்பாதிச்சதெல்லாம் ஒனக்குத்தான். எங்கட உசிர் போரத்துக்குள்ளே ஒண்ட கலியாணத்த முடிச்சிப்பார்த்து பேரப்புள்ளயளையும் கண்டுகொள்ள வேணும் என்டதுதான்  உம்மாவுடையதும்  என்னுடையதும் ஆசை. நானும் ஒரு டொக்டர் மாப்பிளை எடுக்கலாமெண்டு படாத பாடுபட்டேன். கிடைக்கல்ல. இந்த  மாப்பிளையையும் தட்டிவிட்டால் நல்ல மாப்பிளை எடுக்கிறது கஷ்டம் மகள். படிச்சு நீ என்ன உத்தியோகம் பார்க்கவா போற? இருக்க சொத்து நாலு ஜென்மத்துக்குப் போதும்.” - வாப்பாவின்  பரிதாபத்தைப் பார்க்க முடியாமல்தான்  திருமணத்துக்குச் சம்மதித்தேன்.

திருமணம் முடித்து ஐந்து மாதங்களில், கட்டாரில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது என்று கூறிப் பயணத்தை ஆரம்பித்தார். அப்போது நான் மூன்று மாதக் கர்ப்பிணி.

கடந்த ஆறு ஏழு மாதங்களாக தினமும் இரண்டு மூன்று தடவை என்னுடன் தொலைபேசியில் உரையாடத் தவறமாட்டார். வயிற்றில் வளரும் அவரது குழந்தை பற்றியும் என்னுடைய உம்மா வாப்பா பற்றியும் அன்பாக விசாரிப்பார்.

என்னுடைய மாமா மாமியும் எங்களோடு அன்பாகத்தான் இருந்தார்கள். மாமி வாரத்தில் இரண்டு தடவை வீட்டுக்கு வந்து போவார். இப்போதெல்லாம் வருவதில்லை.

என் கணவர் கட்டார் சென்று நான்கு ஐந்து மாதங்களுக்குள் எனக்கு அழகியதொரு பெண் குழந்தை கிடைத்தது. பிள்ளை கிடைத்ததும் கட்டாயம் ஊருக்கு வருவதாகக் கூறியவர் வரவில்லை. வேலைப்பளு என எண்ணிக்கொண்டேன்.

பிள்ளை கிடைத்ததும் கட்டாயம் ஊருக்கு வருவதாகக் கூறியவர் வரவில்லையே  என உம்மாவிடம் வருத்தப்பட்டுச் சொன்னபோது, பக்கத்திலிருந்த வாப்பா,

“எப்படி வருவார். அவர்தானே என்ஜீனியர் எண்டு நம்மளையெல்லாம் ஏமாத்தி சொத்துக்கு ஆசைப்பட்டு ஒண்ட வாழ்க்கையப் பாழாக்கிப்போட்டார். ஒண்ட புருஷன் சூப்பர் மார்க்கட்டுல வேலை செய்கிறாராம். சலீம் நானாட மகன் ஊருக்கு வந்தபோது அவன்ட வாப்பாக்கிட்ட சொல்லியிருக்கான். சலீம் நானா ஒரு ஓட்டை வாயன். இந்த ஊரெல்லாம் சொல்லியிருக்கான். கடையிலே இருக்கமுடியல்ல. வாறவன் போறவனெல்லாம் இதத்தான் கேட்கிறான். நீ நிறைமாதக் கர்ப்பிணியா இருந்ததால  ஒணக்கிட்ட சொல்லல்ல.” – வாப்பா மீண்டும் பொரிந்து தள்ளினார்.  

என்ன செய்வதென்று புரியவில்லை. எதற்கும் பொறுமையாக இருந்து கணவரிடம் இதுபற்றி விசாரிக்கவேண்டும். இது எனது வாழ்க்கைப் பிரச்சினை. கையில் ஒரு குழந்தை. வாப்பா சொல்வது போல தூக்கியெறிந்துவிட முடியாது. பிள்ளையினதும் என்னுடையதும் எதிர்காலத்தை யோசித்துத்தான் முடிவெடுக்கவேண்டும். முதலில் பிள்ளைக்குப் பதிவு வைக்க வேண்டும் என எண்ணியவாறு கணவரின் பிறப்புச் சான்றிதழிலுள்ளவாறு தகவல்களைப்பெற, அவரது முக்கிய ஆவணங்கள் கொண்ட  கோப்பைத் திறந்தேன். அப்போதுதான் அவரது மேற்படிப்புப் பட்டம் முடித்ததிற்கான  சான்றிதழ் கண்சிமிட்டியது. “சிவில் என்ஜினியேறிங் உயர் டிப்ளோமா” எனக் காணப்பட்டது.  சிவில் என்ஜினியேறிங் உயர் டிப்ளோமா முடித்ததன் பின், சில தனியார் கல்வி நிறுவனங்களில் என்ஜினியேறிங் படிப்பைத் தொடர்வதுண்டு. அவ்வாறு தொடர்ந்தாரோ தெரியவில்லை. எதற்கும் இதுபற்றி இன்றே கணவருடன் கதைக்கவேண்டுமென எண்ணிப் பிள்ளையைத் தூங்கவைத்துவிட்டு ஆயத்தமானேன்.

“நான் ஆயிஷா. அஸ்ஸலாமு அலைக்கும்.”

“வஸ்ஸலாம் ஆயிஷா. இப்பதான் எங்க வாப்பாவுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். நான் உம்மா வாப்பாவுக்கு பொய் சொல்லினதால அவங்க என்னை என்ஜினியர் எண்டு சொல்லி உனக்கு கலியாணம் முடிச்சிக் கொடுத்ததாகவும் இப்ப நான் சூப்பர் மார்க்கட்டுல வேலை செய்யிறதாகவும் ஊரில கதைக்கிறாங்களாம். ஊரில தலகாட்ட முடியல்லயாம். அவங்கட முகத்தில முழிக்கக்கூடாதாம். மாமாவும் வாப்பாக்கிட்ட மிச்சம் மனவருத்தப்பட்டு பேசியிருக்காங்க. சொத்துக்காக ஏமாத்தி எண்ட புள்ளட வாழ்க்கைய நாசமாக்கிப்போட்டியள் எண்டு சொன்னாராம். உண்மையாக நான் ஏமாத்தல்ல ஆயிஷா.” எனக் கவலையுடன் கூறினார்.

“நானும் ஒரு முடிவு எடுக்கவேண்டுமென்றுதான் இப்ப கோள் எடுத்த. பிள்ளை பிறந்ததும் வருவேன் என்ற நீங்க இதுவரைக்கும் வரல்ல. ஒவ்வொரு நாளும் கதைக்கிற நீங்க இதுபற்றி ஒரு வார்த்தைகூடக் கதைக்கல. பிள்ளைக்கு பதிவு வைக்க உங்கட பிறப்புச் சான்றிதழை தேடும் போதுதான் உங்கட சிவில் என்ஜினியேறிங் உயர் டிப்ளோமா முடித்த சான்றிதழைக் கண்டேன். இப்பதான் எனக்கும் தெரியிது, நீங்க என்ஜினியர் இல்ல எண்டு” – நான் பேசி முடிப்பதற்குள் இடையில் குறுக்கிட்டவர்,

“அப்படியில்ல ஆயிஷா. நான் ஃபைனல் என்ஜினியர் எக்ஸாம் எடுத்தேன்,. ஆனால் பெயில் ஆகிட்டேன். இன்னும் ஒரு வருடத்துக்குள்ளே பாஸ் பண்ணிடலாம். கையிலே காசு இல்லாததாலும் உம்மா வாப்பாவ தொடர்ந்து சிரமப்படுத்தப்போடாது என்பதாலும் அப்ப நான் இருந்த நிலையில எக்ஸாம் பாஸ் பண்ணியதாக சொல்லிட்டேன். இங்கவந்து ஒரு நல்ல கம்பனியிலே வேலைசெய்யலாம் என்றுதான் முயற்சிசெய்தேன். ஆனா நல்ல இடம் கிடைக்கல்ல. சும்மா இருக்கக்கூடாது என்றுதான் சூப்பர் மார்க்கட்டுல தற்காலிகமாக வேலைசெய்றேன். அதுக்குள்ள இப்படியாப்போயிட்டு.” - அவரது குரல் தளதளத்தது. நான் மெளனமானேன். தொடர்ந்தும் அவரே பேசினார்.

“என்னக் கல்யாணம் பண்ணிக்கச்சொல்லி உம்மாவும் வாப்பாவும் அவசரப்படுத்தியதாலேதான் ‘எனக்குப் பெண் பிடிக்கல்ல என்று சொல்லி தப்பிக்கலாம்’ என நினச்சு உன்ன பெண்பார்க்க வந்தேன். ஆனா உன்னப் பார்த்து இரண்டு வார்த்தை பேசியதும்  நீதான் என் மனைவியெண்டு முடிவெடுத்திட்டேன். இப்பகூட நீ எந்தவித பிழையான முடிவையும் எடுக்கமாட்டாய் எனத் தெரியும். உன்னையும் பிள்ளையையும் உசிராக மதிக்கிறேன். எனக்கு நீ வேண்டும். என் பிள்ளை வேண்டும். குடும்பத்தோடு சந்தோஷமா வாழ வேண்டும். நீ என்னை மன்னிச்சிடு ஆயிஷா. – அவரது குற்ற உணர்வு என்னை ஒரு கணம் தடுமாறவைத்தது.

“சரி. ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க. போய்த் தூங்குங்க. நடந்தது நடந்து போயிட்டு. எல்லாம் நன்மைக்குத்தான். நாளை கதைப்போம்” எனக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்த எனக்கு நா வறண்டது. சிறிது நீர் அருந்தினால் நன்றாக இருக்குமென எண்ணி வெளியே வந்தபோது நள்ளிரவு இரண்டு மணியாகியும் உம்மாவும் வாப்பாவும் தூங்காது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். நான் கண்டும் காணாததுபோல் நீரை அருந்திவிட்டு எனது படுக்கையறைக்குச் சென்றேன். அன்றிரவு என்னால் தூங்கமுடியவில்லை. என்ன செய்யலாம் என விடியும்வரை யோசித்தேன்.

அடுத்த நாள் காலை வாப்பாவிடம் சென்று “வாப்பா அவர் நம்மள ஏமாத்தவேண்டுமென்று பொய் சொல்லித் திருமணம் செய்யவில்லை. என்னையும் பிள்ளையையும் உசிரா மதிக்கிறார் வாப்பா. அவர் நல்லவர். நல்ல வேலை ஒன்று கிடைச்சா அவர்ர படிப்ப முடிச்சிடலாமென்றுதான் வெளிநாடு சென்றிருக்கார். ஆனா வேலைகிடைக்கல்ல. நல்ல வேலையொன்றைத் தேடும்வரை காலத்த வீணாக்கக்  கூடாதென்றுதான் சூப்பர் மார்க்கட்டுல வேலை செஞ்சாராம். என்ஜினியர் என்று பெரிய எடத்துல கலியாணம் செஞ்சவர் சூப்பர் மார்க்கட்டுல வேலை செய்யிறத்த கண்ட நம்மட ஊர் மக்கள் ஊரில கதைய பரப்பிட்டாங்க.” நான் சொல்லி முடித்ததும் வாப்பா ஏதாவது சொல்லுவார் என எதிர்பார்த்தேன். ஒன்றுமே சொல்லவில்லை. ஏமாற்றமாக இருந்தது. அதனால் நான் தொடர்ந்தேன்.

“வாப்பா நான் அவர ஊருக்கு வரச்சொல்லப்போறன். வந்ததும் உங்கட கடையில  கணக்கு வழக்குகளை பாத்துக்கொண்டு ஒரு வருஷம் இருக்கட்டும். அவருக்கு நீங்க விரும்பின சம்பளத்தக் கொடுங்க. அந்தக் காசுல அவர்ர படிப்ப முடிக்கட்டும். பொறகு யாரு என்ன கதைக்காங்க என்று பார்ப்போம்.”

எனது வேண்டுகோளைப் புறக்கணிப்பதுபோல் எழுந்து அடுத்த அறைக்குச் சென்று விட்டார் வாப்பா.

ஈற்றில் எனது எண்ணமே ஈடேறியது. எனது கணவர் நாடு திரும்பிவந்து எனது வாப்பாவின் கடையை முகாமைத்துவம் செய்து ஒரு வருடத்துக்குள் தனது படிப்பையும் பூர்த்திசெய்துவிட்டார்.

முகத்தை முறித்துக்கொண்டு பல மாதங்கள் பகைத்துக்கொண்டிருந்த சம்மந்திகள் சிரித்த வதனங்களோடு மகிழ்ச்சியாக கொழும்பு நோக்கிய எங்கள் பயணத்தோடு இணைந்துகொண்டனர்.

நாளை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அதில் எனது கணவரும் பொறியியல் பட்டம் பெறப்போகும் தருணத்தைக் கற்பனைசெய்தவாறு மகிழ்ச்சிக்கடலில்  மூழ்கினேன்.

(முற்றும்)

எஸ். ஏ. கப்பார்.

 *****

தொடர்பு: 0776968671

மின்னஞ்சல்: kavignarsagaffar@gmail.com

  

(,r; rpWfij jkpo;neQ;rk; xf;Nlhgu; 2024 ,jopy; gpuRukhdJ. jkpo;neQ;rk; gpujk Mrpupau; mkpd; nkh`kl; mtu;fSf;Fk; Mrpupau; FOtpw;Fk; kdkhu;e;j ed;wp.)

இறைவனின் நாட்டம்.

 

20. இறைவனின் நாட்டம்.

சமீமா இம்முறையும் போட்டிப் பரீட்சை எழுதிவிட்டு வீடுவந்து சேர்ந்தபோது ஆறு மணியாகிவிட்டது. இது அவளெழுதிய ஐந்தாவது போட்டிப் பரீட்சை. பல்கலைக் கழகப் பட்டம் பெற்றதன்பின் ஏற்கனவே நான்கு போட்டிப் பரீட்சைகளுக்கு முகங்   கொடுத்துள்ளாள். மூன்று நேர்முகத்தேர்வுகளுக்கும் சமுகமளித்துள்ளாள். போட்டிப் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு முகங்கொடுத்துவிட்டு ஆவலுடன் காத்துக்கிடந்ததைத் தவிர வேறு எதையும் காணவில்லை. அவளுடன் போட்டிப் பரீட்சைகளுக்குச் சென்ற பக்கத்து வீட்டு பரீனா, இரண்டு தெரு தள்ளி வசிக்கும் மசிஹா எல்லாம் உத்தியோகம் பெற்று இரண்டு வருடங்களாகிவிட்டன. திருமணமும் முடித்துவிட்டார்கள். இத்தனைக்கும் அவர்களெல்லாம் சமீமாவைவிட போட்டிப் பரீட்சையில் குறைந்த புள்ளிகள் பெற்றவர்கள். எப்படித்தான் உத்தியோகம் பெற்றார்களென சமீமா அடிக்கடி யோசிப்பதுண்டு.

நேர்முகத் தேர்வு முடிந்து வீடு வந்ததும் முதலில் உம்மா ஓடிவந்து சமீமாவை உச்சி முகர்ந்து ஆறுதல் வார்த்தைகள் கூறுவாள். வாப்பா வீட்டிலிருந்தால் நன்கு விசாரித்து உற்சாகப்படுத்துவார். இன்று அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. உம்மா வாப்பா வீட்டிலதான் இருந்தார்கள். இருவரும் ஏதோ உரையாடுவது தெரிந்தது. “உம்மா, நான் வந்துட்டேன்” எனக் கூறிக்கொண்டு அவர்களை நோக்கிச் சென்றாள், சமீமா.

“எத்தனை பரீட்சைக்குத்தான் போய்வந்துட்டே. அவ்வளவுதான் மிச்சம். ஒன்னோட  சோதின எழுதினவளெல்லாம் உத்தியோகமும் எடுத்து கலியாணமும் பண்ணி புள்ளையும் பெத்துப்போட்டாளுகள். ஒனக்கு  மட்டும்தான்  இந்தக்கெதி.” – உம்மா அலுத்துக் கொண்டாள்.

“நான் என்ன செய்யிற உம்மா. அவளுகளுக்கெல்லாம் வாப்பா, காக்காமார் அவங்களுக்குத் தெரிஞ்ச அரசியல்வாதிகள, உயரதிகாரிகளப் புடிச்சி எப்படியோ எடுத்துக்கொடுக்கிறாங்க. எனக்கு யார் இருக்கா?” – சமீமாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“அதுதான் நானும் உங்க வாப்பாக்கிட்ட சொல்லுற. யாரையாவது புடிச்சி காசையாவது குடுத்து அவள்ள பிரச்சினயப் பாருங்கெண்டு. கேட்டாத்தானே. அல்லாஹ் நாடினதுதான் நடக்கும். அவளுக்கெண்டு ஒண்டு இல்லாமலா போயிடும். பாப்பம் பாப்பம் எண்டு காலத்தக் கடத்துறார். ஒண்ட தம்பியும் சயன்ஸ்தான்  படிக்கான். அவன நெனச்சாலும் பயமாத்தான் இருக்கு.” – பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ  என்ற கவலை சமீமாவின் உம்மாவுக்கு.

******

மூன்று மாதங்களின் பின் ஒரு காலைவேளை, சமீமாவின் தம்பி அவசர அவசரமாக சமீமாவின் அறைக்குள் நுளைந்து “தாத்தா, நீங்க போன இன்ரவியூ ரிசல்ட்ஸ் இணையத்திலே வெளியாகியிருக்காம். எண்ட பிறண்ட் றமீஸ் சொன்னான். அவன்ட நானாவுக்கும் கிடைச்சிருக்காம்.” எனக் கூறிவிட்டு நகர்ந்து சென்றான், தம்பி சமீர்.  

சமீர் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருப்பவன். காலத்தை வீணடிக்காது ஆங்கிலம் மற்றும் கணினிக்கல்வி வகுப்புகளுக்குச் சென்றுவருகிறான். தானும் தன்பாடும், வீடும் வகுப்புமென வாழ்ந்து வருபவன்.

சமீமாவுக்குக் கைகள் உதற ஆரம்பித்தன. இலேசாகப் பயமும் தொற்றிக்கொண்டது. இம்முறையாவது எடுபட்டுவிடவேண்டுமென இறைவனைப் பிராத்தித்தவளாக, கையடக்கத் தொலைபேசியில் இணையத்தை அணுகியவளின் முகம் வாடிப் போனது.

“சீ.. இம்முறையும் கிடைக்கவில்லை. நான் என்ன பாவம் செய்தேன். உம்மா வாப்பா என்னப் படிப்பித்து ஒரு பட்டதாரியாக்கி ஒரு தொழில் எடுத்தா என்னக் கல்யாணம் முடிச்சிக் கொடுத்திட்டு நிம்மதியா இருக்கலாமெண்டு கனவுகண்டாங்க. எண்ட கஷ்டகாலம் அவங்களையும் போட்டாட்டுது. அத நெனச்சாத்தான் பெரும் கவலையாயிருக்கு. மாப்பிள கேட்டுப்போனாலும் பொண்ணு என்ன உத்தியோகம் பாக்கிறா எண்டுதான் முதல்ல கேக்கிறாங்க. நான் கலியாணம் முடிக்காவிட்டாலும்  பரவாயில்ல. எப்படியாவது ஒரு தொழில அல்லாஹ் தருவான். தம்பிக்காவது நல்ல ரிசல்ட்ஸ் கிடைச்சுடனும். யூனிவர்சிடிலே நல்லதொரு இடங்கிடைச்சு படிப்ப முடிச்சிட்டானென்றால்  உம்மா வாப்பாவ நல்லா பாத்துக்குவான்.” – மனதில் பெரும் பாரத்தைச் சுமந்தவளாக, கவலைகள் எல்லாவற்றையும் படைத்தவனிடம் ஒப்படைத்துவிட எண்ணி, மதியநேர தொழுகையழைப்புக் காதில் விழும்வரை கட்டிலில் மெதுவாகச் சாய்ந்தாள்.

கையடக்கத் தொலைபேசி அலறியபோதுதான் கண்விழித்துப் பார்த்தாள். தொழுகை நேரம் கடந்துவிட்டதையறிந்து, அழைப்புக்குப் பதிலளித்துவிட்டுத் தொழுவோம் என எண்ணி அவசரமாக ‘ஹலோ’ என்றாள். சமீமாவின் தோழி பர்கானா நியூசிலாந்திலிருந்து அழைத்துக்கொண்டிருந்தாள்.

“சமீமா. அஸ்ஸலாமு அலைக்கும். ஒரு குட் நியூஸ். எண்ட மச்சான் வேலை செய்ற கம்பனியில வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு பத்து வீதம் இடம் கொடுக்கிறாங்க. நல்ல சான்ஸ். நல்ல சம்பளம். உன்னப் போல கெட்டிக்காரிகளுக்கு நல்ல வாய்ப்பு. உனக்கு இங்லிஷ், கொம்பியூட்டர் எல்லாம் தெரியுமென்பதால வேலை செய்யிறதும் லேசு. நான் ஒண்ட தகவல்கள கொடுத்திருக்கேன். இப்ப, நான் வட்ஸ்அப்பில கேட்டிருக்கிற இன்ஃபர்மேஷன் எல்லாத்திடயும் ஒரிஜினல் எடுத்து ஸ்கேன் பண்ணி நாளைக்கே வட்ஸ்அப் பண்ணு. பாஸ்போட் இருப்பதால அதுவும் லேசு. டிக்கட், விசாவெல்லாம் எண்ட பொறுப்பு.”

- அவள் பட படவெனத் தொடர்ந்தபோது சமீமாவுக்கு வியத்துக்கொட்டியது.

“அதில்ல பர்கானா. வெளிநாட்டுக்குப்போய் வேலைசெய்ய உம்மா வாப்பா சம்மதிப்பாங்கண்டு தெரியல்ல. அதுவும் குமர்ப்பிள்ளை. அதுதான் யோசிக்கிறேன்.”

“அட.. அங்ககெடந்து என்ன செய்யப்போற. எடுக்கிற சம்பளம் பத்து நாளைக்கும் காணாது. நானும் குமர்ப்பிள்ளையாத்தானே வந்தேன். அதக்கப்புறம்தானே பொண்ணுகேட்டு வந்தாங்க. நான் புருஷன் புள்ளயளோட நல்லாத்தானே இருக்கேன்.  விடு.. நான் இரவைக்கு உம்மா வாப்பாவோட கதைக்கேன். நீ ரெடியாகு. விஸ் யு மெனி மோர் கெப்பி லைப்.” எனக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தாள்.

*****

பல போராட்டங்களுக்கும் விவாதங்களுக்கும் மத்தியில் கண்ணீருடன் குடும்பத்தைப் பிரிந்து தொழிலுக்காக வெளிநாடு சென்ற சமீமா, ஒரு வருடத்துக்குள் தன் தம்பியை வைத்தியத்துறையில் கல்விகற்க ரஷ்யாவுக்கு அனுப்பிவைத்தாள்.  அவனும் நன்றாகக் கற்றுவருகிறான்.

காலம் மிக வேகமாகப் பறந்தோடியது. சமீமாவும் அங்கேயே தான் வேலைசெய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் நம் நாட்டைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவரைத் திருமணம் முடித்து, இன்னும் இரு வாரங்களில் இரட்டைச் சமீமாக்களைப் பெற்றெடுக்கப்போகிறாள்.

*****

மகள் சமீமாவையும் பிறக்கப்போகும் தங்களது இரட்டைப் பேரப்பிள்ளைகளையும் நியூசிலாந்து சென்று கண்டு மகிழப்போகும் அவாவில், விமான நிலையம் நோக்கிய இன்றைய பயணத்தை ஆரம்பித்தார்கள், சமீமாவின் பெற்றோர்.  

- எஸ். ஏ. கப்பார்.

*****

( ஜீவநதி இதழ் 252 - மாசி 01-02-2025 மாத இதழில் பிரசுரிக்கப்பட்டது. பிரதம ஆசிரியர் க. பரணீதரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.)