Monday, February 1, 2010

Meendumoru Santharpam

மீண்டுமொரு சந்தர்ப்பம்

இருளின் பிடியின்
இறுக்கத்தைத் தளர்த்தி
கதிரவன் மெல்லமெல்ல
கண்திறந்து பார்க்கிறான்.

உலகம் இன்னும்
உறங்கிக் கிடக்கிறதுரூபவ்
பறவைகளும் மிருகங்களும்
புல்-பூண்டுகளும் தவிர.

பூச்சிகளும் தாவரங்களும்கூட
புத்துயிர்பெற்று - தங்களை
உயிர்ப்பித்துக் கொண்டு
உற்சாகமாய் உறக்கம்கலைத்தன.

மெல்ல மெல்ல
வெளிச்சத்தைப் பரப்பி
உலகம் முழுவதையும்
ஆக்கிரமித்துக்கொண்டான் கதிரவன்.

மாற்றமில்லை மாற்றமேயில்லை
மனிதரில்மட்டும் மாற்றமில்லை
கொலை பொய்-களவு
கள்ளருந்தல் குருநிந்தை.

பஞ்சமா பாதகங்கள்
பரவிக் கிடக்கும்
உலகைத்தான் காண்கிறான்
உச்சிக்குயர்ந்துவிட்ட கதிரவன்.

வெட்கித் தலைகுனிந்து
விழிதாழ்த்தி மீண்டும்
சிறை கொள்கிறான்
சினங்கொண்ட இருளின்பிடிக்குள்.

நாளையொரு சந்தர்ப்பம்
காலை வருமென்று
மாலைச் சூரியன் - தன்
வாலைச் சுருட்டிக் கொண்டான்.

No comments: