Monday, February 1, 2010

Vaalkkai

வாழ்க்கை

ஒற்றைக் கம்பியில்
ஒருக்கணித் தமர்ந்து
ஓரக்கண்ணால் காணும்
ஓராயிரம் காட்சிகள்.

நீண்ட தொலைவில்
நீள் பனையொன்று - அதன்
நிழல் வழியே
நிம்மதியாய் இருநாய்கள்.

ஆகாய உச்சியெட்ட
ஆலாக்கள் இரண்டு
அதன் பின்னே
அழகிய கிளிகள்பல.

வயலில் வயதான
விவசாயிகள் பலர்
வடிவாய்ச் செப்பனிட
வடிச்சலுக்காய் வாய்க்கால்களை.

கொங்கை குலுங்கிட
மங்கையர் பலர்
களை கொள்ளும்
கண்கொள்ளாக் காட்சிகள்பல.

சக்கரச் சவட்டுதலில்
சில புழுக்கள் - அதைக்
கொத்தித் தின்ன
கொக்குகள் பல.

வீதியால் வந்தவனை
வேருடன் பிடுங்கி
வயலில் விட்டெறிந்த
விபத்து ஒன்று.

பஸ் மிதிப்பலகையில்
பயணம்செய்த இளைஞன்
பரிதாபமாய் விழுந்ததை
பார்த்துச்சிரிக்கும் இளசுகள்.

வலதுகையை உரசிக்கொண்டு
விரைவாய்ச் செல்லும்
பாதுகாப்பு வாகனமொன்று
பாதசாரிக்கு பாதுகாப்பின்றி.

அழகழகாய் அணிவகுத்து
அவசரமாய் பறந்துவந்த
வாகனங்கள் அனைத்தும்
வந்த அரசியல்வாதிக்காய்.

இத்தனையும் பார்த்துரசித்த
இளைய காக்கை
மற்றக்காலை உயர்த்தியபோது
மரணம் மின்கம்பியில்.

No comments: