Monday, February 1, 2010

Kanavukalum Tsunamiyai

கனவுகளும் சுனாமியாய்!

இந்தோ அவுஸ்திரேலிய
இயூரேஷியத் தகடுகள்
திடீரென விலகித்
திறந்து கொள்கின்றன.

கடல் பிளந்து
காங்கை வெளிப்பட்டு
சரேலென மேலெழுகிறது
சுமுத்திராவுக்குத் தெற்கே!
பிடாங் மற்றும் பெங்ரே
பிடரி முறிந்து கிடக்கிறது.

பூனைபோல் பதுங்கி வந்து
புலிபோல் பாய்கிறது புதியதோர் சுனாமி.
பாயுடன் தூக்கியெறியப்பட்டு
பள்ளத்தில் கிடக்கிறேன்.
இறக்குமுன் பார்க்கிறேன்
பிறந்தமேனியை ஒருமுறை.

எங்கும் நீர் எங்கும் நிலம்
எங்கும் நிசப்தம் எங்கும் பிரளயம்
என்வீடு என்மனைவி என்மக்கள்
எல்லாம் கடலிற் கலக்கின்றன.

கடிகாரஒலி டிக்டிக் எனக்கேட்கிறது
கனவுகள் மீண்டும் கலைகின்றன!
கலண்டரைக் கவனித்துப் பார்க்கிறேன்
காலம் டிசம்பர் இருபத்தாறைக் காட்டுகிறது.

வருடம் ஒன்றாகியும்
இருட்டுக் கொட்டிலுக்குள்
கனவுகளாய் மிரட்டி
நினைவூட்ட அவ்வப்போது
வந்துபோவ தெலாம்
அந்தச் சுனாமிதான்.

No comments: