Friday, December 1, 2023

சிறுகதை 6 சமூக சேவகி.

 சிறுகதை.

சமூக சேவகி.

இன்று உயர்தரப் பரீட்சை முடிவு இணையத்தில் வெளியானபோது ஜெஸீனாவின் முகம் கறுத்து வாடிப்போய்விட்டது. உயிரியல் பிரிவில் இரண்டு திறமைச் சித்திகளும் ஒரு சாதாரண சித்தியும் பெற்றிருந்தாள். எவ்வளவோ கஷ;டப்பட்டு மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருந்தும் பல்கலைக்கழகம் செல்வதற்குப் போதாது என்ற கவலை ஜெஸீனாவைப் பெரும் சங்கடத்திற்குள்ளாக்கியது. மிகவும் கவலைப்பட்டாள். அவளது அண்ணா, அக்கா, தம்பி போன்றோருக்கும் பெரும் கவலையாக இருந்தது. 

தற்போதைய குடும்பச் சூழ்நிலையில் மீண்டுமொருமுறை ரியூஷன் வகுப்புகளுக்குச் சென்று பாடங்களைப் படிக்க வேண்டும்.  அதற்கான செலவுகளைச் செய்யக்கூடிய நிலையில், தற்போது அப்பாவும் இல்லை. மேலும் பக்கத்து நகரத்திலுள்ள தனியார் வகுப்பிற்கு கூட்டிச்செல்ல அண்ணனோ அன்றி தம்பியோ முன்வர வேண்டும். அண்ணன் அரச ஊழியராகையால் அவருக்கு சிரமமாக இருக்கும். இவற்றையெல்லாம் நினைத்து ஜெஸீனா மட்டுமல்ல, அவளது சகோதரர்களும் யோசிக்கத் தொடங்கினர்.

ஜெஸீனாவின் அண்ணன் ஒரு முன் கோபி. கோபத்தில் அவசரப்பட்டு ஏதாவது உளறிவிடுவான் என்பது வீட்டில் எல்லோருக்கும் தெரியும். இன்றும் அவ்வாறு கதைக்க முற்பட்டபோது,

'யாருமே எதுவும் கதைக்கக்கூடாது. உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் முதற்தடவை பாஸ் பண்ணுறதென்பதே பெரிய விடயம்.'

அவளது அப்பா குறுக்கிட்டு தனது மகன் பேச வந்ததைப் பேசவிடாது தடுத்தார்.

'இல்ல அப்பா. நான் சொல்ல வந்தது...'

அவன் சொல்லி முடிப்பதற்குள்,

'மகன், கடந்த மூன்று வருடங்களாக உங்க அம்மா சுகமில்லாம இருந்து பட்டபாடு உங்களுக்கு நல்லாத் தெரியும்தானே. அந்தப் பிள்ளைதானே இராப்பகலா உங்கம்மாவை வேளைக்கு வேளை மருந்து கொடுத்து உணவு கொடுத்து பாத்துக்கிட்டா. அவட ராசி அவ உயர்தரம் படிக்கத் தொடங்கின நாள் தொட்டு உங்கம்மாவுக்கும் நோய்தான். அம்மாவையும் பார்த்துக்கிட்டு வகுப்புக்கும் போய் வந்து அவ எவ்வளவு கஷ;டப்பட்டிருக்கா. பரீட்சை நெருங்க நெருங்க உங்க அம்மாவின் உடல் நிலையும் மோசமா போயிட்டே இருந்தது. பரீட்சை முடியமட்டும் காத்திருந்ததுபோல அம்மாவும் நம்ம விட்டுப் பிரிஞ்சிட்டா. இவ்வளவு கஷ;டத்திற்கு மத்தியிலும் அவ பாஸ்பண்ணியிருக்கா எண்டா நாம எவ்வளவு பெருமைப்பட வேணும்.' என்றவாறு ஜெஸீனாவின் அப்பா அவளது தலையைத் தடவி ஆறுதல் கூறினார்.

ஜெஸீனா அழுகையை அடக்க முடியாமல் அப்பாவின் நெஞ்சில் தனது முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மத்தொடங்கினாள்.

தொடர்ந்துவந்த சில வாரங்களாக ஜெஸீனாவின் படிப்பு சம்பந்தமாக யாருமே வாய்திறக்கவில்லை. 

இரண்டு மாதங்களுக்குப் பின் அவளது அப்பாதான் அவளது எதிர்காலம் பற்றி எடுத்துக்கூறி மீண்டுமொரு முறை பரீட்சை எழுதிப் பார்க்குமாறும் தன்னால் முடிந்த உதவி ஒத்தாசையெல்லாம் செய்வேனென்றும் அன்பாக எடுத்துரைத்தார். எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஜெஸீனா ஒத்துக்கொள்ளவில்லை. 

என்ன செய்வது அவளது விதிப்படி நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டனர்.

மாதங்கள் பல கடந்தன. ஒரு நாள் ஜெஸீனா அப்பாவை அழைத்து,

'அப்பா. நான் அரச சார்பு உயர்கல்வி நிறுவனமொன்றில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள ஒன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தேன். இப்ப நானும் தெரிவுசெய்யப்பட்டிருக்கேன். அடுத்த வாரம் நேர்முகப்பரீட்சைக்கு கொழும்பு செல்லவேண்டும். நீங்கதான் கூட்டிச்செல்லவேண்டும்.' – சுருக்கமாகக் கூறினாள். 

'என்ன பிள்ளை. திரும்பவும் ஒருக்கா பரீட்சை எடுத்து பாஸ் பண்ணிட்டா நம்மட பகுதிகளில் உள்ள யூனிவேஸிட்டி ஒன்று கிடைக்கும்தானே. இப்ப கொழும்பில போய் படிக்கவேணும் என்று சொல்லுறயே! யாரு கூட்டிக்குப் போற? யாரு கூட்டி வார? செலவும் அதிகமாகுமே பிள்ளை!'

தனது மனக்கவலையை வெளியிட்டார் ஜெஸீனாவின் அப்பா.

'அப்படி ஒண்ணும் பெரிசா செலவு வராது அப்பா. அநேகமா பாடங்கள் எல்லாம் ஒன்லைன்லதான் நடக்கும். வருஷத்துக்கு இரண்டு தடவைதான் கொழும்புக்குப் போய் பரீட்சை எழுதிட்டு வரணும். அதுவும் நம்மட ஊர் பிள்ளைகளோடு சேர்ந்துபோய் சேர்ந்தே வந்திடலாம்.' 

ஜெஸீனாவின் ஆசையில் மண்ணை அள்ளிப்போடக்கூடாது என எண்ணிய அவளது அப்பா அவளது விருப்பப்படி நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தார். கொழும்புக்கும் அவரே கூட்டிச்சென்றார். அவளது படிப்பும் எவ்வித இடையூறுகளுமின்றி சிறப்பாகத் தொடர்ந்தது.

காலம் பறந்து சென்றது.  வருடங்கள் மூன்றாகிவிட்டன. 

தன் பெற்றோரின் விரும்பத்தைத் தட்டிக்கழிக்க முடியாமல் தனக்குப் பொருத்தமில்லாத ஒரு துறையை விருப்பமின்றி தெரிவுசெய்து மீண்டும் மீண்டும் பரீட்சைகளுக்குத் தோற்றி காலத்தை வீணடிக்கும் எத்தனையோ மாணவர் மத்தியில் ஜெஸீனா எடுத்த துணிச்சலான முடிவு அவளுக்கு வெற்றியைக் கொடுத்தது.

ஜெஸீனா எடுத்த சரியான முடிவையும் அவளுக்குக் கிடைத்த வெற்றியையும் எண்ணி எண்ணி அவளது அப்பாவும் சகோதரர்களும் உள்ளூரப் புளகாங்கிதமடைந்தனர்.

இன்று ஜெஸீனா ஒரு சமூக சேவை பட்டதாரியாக பட்டம் பெற்று தனது சமூகத்திற்கும் தனது தாய் நாட்டிற்கும் அளப்பரிய சேவை செய்யப் புறப்பட்டுவிட்டாள். 


-எஸ் ஏ கப்பார்.

27-03-2023.

(02-04-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு நன்றி.)




No comments: