Tuesday, February 9, 2021

விரட்டிடுவோம் கொரோனாவை!

 

விரட்டிடுவோம் கொரோனாவை!

 உயிர்கொல்லி கொரோனா போல்

உயருள்ளம் நமக்கும் வேண்டும்

ஏழை பணக்காரன்

உயர்ந்தோன் தாழ்ந்தோன்

படித்தவன் படிக்காதவன்

வெள்ளையன் கறுப்பன்

முதியோன் இளையோன்

ஆடவர் பெண்டிர் என்றெல்லாம்

பேதம் பார்ப்பதில்லை

பேரிடியாய் வந்த இந்தக் கொரோனா.

 

கொரோனா போல்

கொந்தளிக்கும் வீரம் வேண்டும்

வீழ்த்த வீழ்த்த வீரியங் கொண்டெழும்

வேட்கை நமக்கும் வேண்டும்.

 

மானிடராய்ப் பிறந்த நாம்

மரிப்பதற்கென்றுதான் பிறந்தோம்

எரிந்து சாம்பலாகி

ஏழனப் படுவதற்கல்ல.

 

கனவு மெய்ப்படும் வாழ்வு வேண்டும்

காலமெலாம் நம்வாழ்வு மேம்பட வேண்டும் - ஆதலால்

கொரோனாக் கொலைக்களம் தவிர்த்து

கௌரவமாய் வாழத் துணிந்திடுவோம்.

 

நீயும் நானும் தாயும் சேயும்

நலமுடன் மீள வேண்டுமென

நாயனை வேண்டி நிற்போம்

மானிட உணர்வுகளை

மதித்து நடப்போம்

மக்களுடன் மக்களாய்

மகிழ்வுடன் வாழப் பழகிடுவோம்.

 

பெரும்பான்மை சிறுபான்மை

பேதம் நமக்கு வேண்டாம்

சாதி மத ஏற்றத்தாழ்வும்

சதவீதமும் நமக்கு வேண்டாம்.

 

கைகளை நன்கு கழுவிடுவோம்

முகத்தினை முறையாக மூடிடுவோம்

கூடுவதைத் தவிர்த்திடுவோம்

தள்ளி நின்றும் வேடிக்கை பார்க்காது

ஒன்றுபட்டு விரட்டிடுவோம்

பாடம் புகட்டவந்த கொரோனாவினை

பாரில் நின்றும் வெகு தூரம்.

 

- கவிஞர் எஸ். ஏ. கப்பார்,

 மருதமுனை.

No comments: