Monday, July 22, 2024

வற் வரியும் வெள்ளத்தம்பி நானாவும் (சிறுகதை 15)

 சிறுகதை

வற் வரியும் வெள்ளத்தம்பி நானாவும்

வெள்ளத்தம்பி நானா பிறக்கும் போது நல்ல வெள்ளை நிறமாக இருந்திருக்கவேண்டும். அதனால்தான் அவரது பெற்றோர்கள் அவருக்கு வெள்ளத்தம்பி எனப் பெயர் வைத்திருக்கவேண்டும். 

வெள்ளத்தம்பி நானா என்றால் ஊரில் தெரியாதவர்கள் யாருமில்லை. நல்ல மாநிறம். நல்ல உடற்கட்டு. கடுமையான, கண்ணியமான உழைப்பாளி. வயது ஐம்பத்தைந்து அல்லது அறுபது இருக்கலாம். தாய்க்குத் தலைமகன். மூன்று இளைய சகோதரர்கள். மூவரும் ஓரளவு படித்து அரச தொழில் புரிபவர்கள். மூத்த அண்ணன் மீது அதீத மரியாதையும் இரக்கமும் உள்ளவர்கள். தங்களால் முடிந்த உதவிகளைத் தேவைப்படும் போதெல்லாம் செய்யத் தயங்காத நல்ல உள்ளம் படைத்தவர்கள். திருமணம் முடித்து, பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழ்பவர்கள். வெள்ளத்தம்பி நானாதான் கஷ;டப்பட்டு கூலி வேலைகள் செய்து தனது சகோதரர்களைப் படிப்பித்து ஆளாக்கியது என ஊரில் பேசிக்கொள்வார்கள். ஏனோ வெள்ளத்தம்பி நானா படிக்கவில்லை. ஏனென்பது யாருக்கும் தெரியாது. ஒரு வேளை தனது இளைய சகோதரர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக தனது படிப்பைக்கூட தியாகம் செய்திருக்கலாம். 

மனைவி வீட்டில் தையல் வேலைகள் செய்து ஓரளவு வருமானத்தைத் தேடிக்கொள்வதால் குடும்பப் பிரச்சினைகள் மிகக் குறைவு. ஓர் ஆண்மகன் உண்டு. அவன் தற்போது பல்கலைக்கழகப் படிப்பை முடித்து அரச தொழில் புரிபவன். இன்னும் திருமணமாகவில்லை. வளர்ந்துவரும் சிறந்ததோர் எழுத்தாளன். நல்ல படைப்பாளி. மனிதாபிமானமுள்ளவன்.

மகன் அரச தொழில் பெற்றுக்கொண்டதன் பின், கூலி வேலை செய்யாது வீட்டில் ஓய்வாக இருக்குமாறு பல தடவைகள் அப்பாவிடம் வேண்டிக்கொண்டபோதும், வெள்ளத்தம்பி நானா கேட்டுக்கொள்ளவில்லை. தன் உயிர் தன்னைவிட்டுப் பிரியும்வரை தனது சொந்தக் காலில் நிற்கவேண்டுமென்பது அவரது கொள்கை. அவரால் குடும்பத்தினருக்கோ அல்லது உறவினர்களுக்கோ இதுவரை எவ்வித தொல்லைகளும் ஏற்பட்டதில்லை. அதுபோல் குடும்பத்தினராலோ அல்லது உறவினர்களாலோ அவருக்கும் இதுவரை எவ்வித தொல்லைகளும் ஏற்பட்டதில்லை. மனைவி மக்களுடன் எவ்வாறு அன்பாகப் பழகுவாரோ அதேபோல்தான் ஏனையோருடனும் நடந்துகொள்வார். வீட்டில்கூட அதிகம் பேசமாட்டார்.

வெள்ளத்தம்பி நானா கூலித்தொழில் செய்தாலும் அதில் ஒரு கண்ணியமும் மரியாதையும் வைத்திருந்தார். மிக நேர்மையானவர். துப்பரவு செய்தல், பாரமான பொருட்களை ஏற்றி இறக்குதல் போன்ற வேலைகள் எல்லாம் செய்யமாட்டார். அவர் விரும்பும் வேலைகள் கிடைத்தால் மட்டும் செய்வார். இல்லையேல் சும்மா இருந்துவிடுவார். கூலிகூட அவர் கேட்டும் தொகையைக் கொடுத்துவிட வேண்டும். ஆனால் மனசாட்சிப்படி நியாயமான கூலிதான் கேட்பார். அவர் செய்யும் வேலைகளின் நேர்த்தியைப் பார்த்தால் நாமே விரும்பி நூறு இருநூறு அதிகமாகக் கொடுக்கத் தோன்றும்.

வெள்ளத்தம்பி நானாவிடம் சில விநோதமான பழக்கவழக்கங்களுமுண்டு. மரக்கறி, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்குப் பொதுச் சந்தைக்கு வந்தால் பொருட்களின் விலைகளைக் கேட்கமாட்டார். மற்றவர்கள் விலைகேட்டு பேரம்பேசி வாங்குவதை அவதானித்துக் கொண்டு நிற்பார். அவருக்கு அந்த விலைகள் கட்டுப்படியாகுமென்றால் தனக்கும் தருமாறு கேட்டு வாங்கிக்கொள்வார். இல்லையேல் மெதுவாக நகர்ந்து அடுத்த கடைக்குச் சென்றுவிடுவார். இது கடைக்காரர்களுக்கும் நன்கு தெரியும் என்பதால் அவர்களும் ஒன்றும் கூறுவதில்லை. 

அதுபோல், அவரது நாளாந்த நடைமுறைகளிலொன்று, தினமும் அதிகாலை பள்ளிவாயல் சென்று  இறைவனைத் தியானித்துவிட்டு முன்னால் இருக்கும் தேநீர்க் கடைக்கு தேநீர் அருந்தச் செல்வார். நானும் சில வேளைகளில் தொழுது முடிந்தபின் அக்கடைக்குச் செல்வதுண்டு. 

அந்தக் கடையைப் பொறுத்தவரை முதலாளிதான் வாடிக்கையாளர்களுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுப்பது வழக்கம். வெள்ளத்தம்பி நானா தினமும் பால் கலந்த தேநீர்தான் அருந்துவதால் அவரிடம் கேட்காமலே முதலாளி தேநீர் தயாரித்துக்கொண்டுவந்து நானா முன் வைத்துவிடுவார்.

வழக்கம்போல் வெள்ளத்தம்பி நானா இரண்டு தேங்காய் ரொட்டிகளைக் கையிலெடுத்து, மேசைமீது கை துடைக்க வைத்திருக்கும் வெண்ணிறத் தாள் துண்டொன்றை எடுத்து அதில் ரொட்டிகளை வைத்து உண்ண ஆரம்பித்தார். உண்ணும்போது ஒரு வார்த்தைகூடப் பேசமாட்டார். குனிந்த தலை நிமிராமல் தன் வேலை முடிந்ததும் மெதுவாக எழுந்து காசாளர் இருக்கும் இடம் நோக்கிச் சென்றுவிடுவார்.

தனது பக்கட்டிலிருந்து பணத்தை எடுத்து காசாளரிடம் நீட்டினார். இரண்டு நாணயத்தாள்கள். ஒன்று நூறு ரூபா. மற்றையது ஐம்பது ரூபா.

'நானா, பால் தேநீர் இப்ப நூத்தி முப்பது ரூபாய். இருபது ரூபாய் அதிகம். நேற்று வற் வரி பதினெட்டு வீதம் அதிகரிச்சிட்டாங்க.'

காசாளர் கூறியதை வெள்ளத்தம்பி நானாவினால் புரிந்துகொள்ள முடியவில்லை. வற் வரி என்றால் என்னவென்று அவருக்குத் தெரியவும் நியாயமில்லை. ஆனால், அரசாங்கத்தினால் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் வரிகளைத் தங்களுக்குச் சாதகமாக்கி, பணம் சம்பாதிக்க ஏழைத் தொழிலாளர்கள் பகடைக்காயாக்கப்படுவது காலாகாலமாக நடந்துவரும் கொடுமை என்பதும் வெள்ளத்தம்பி நானாவுக்குப் புரியாது. 

காசாளரை நிமிர்ந்துபார்த்த வெள்ளத்தம்பி நானா, 'நாசமாப் போச்சு! தேநீருக்கு இண்டைக்கும் இருபது ரூபா கூட்டிட்டானுகள். நல்லா உருப்படும் இந்த நாடு.' என முணுமுணுத்தவாறு வீதியில் இறங்கி விறுவிறுவென நடந்து சென்றார்.


- எஸ். ஏ. கப்பார்

- 17.03.2024.








பட்டறிவு (சிறுகதை 14)

 சிறுகதை.


பட்டறிவு


நீண்ட நாட்களின் பின் வீடு சந்தோசமும் குதூகலமுமாகக் காணப்பட்டது. தங்களது அம்மாவின் மரணத்தின் பின் உறவினர்களும் நண்பர்களும் வருகை தருவது வெகுவாகக் குறைந்துவிட்டதென்பது பிள்ளைகளின் ஆதங்கம். அவர்களின் மனதில் ஏற்பட்ட வெறுமை படிப்படியாக இயல்பு நிலைக்கு மாறிவரும் தருணம்.

எனது இளைய மகனின் பல்கலைக்கழகத் தோழிகள் இருவர் அவர்களது பெற்றோருடன் இன்றிரவு எங்களது வீட்டுக்கு வருகைதருவதாக அறியக் கிடைத்தபோது, பிள்ளைகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதிகாலை மூன்று மணிவரை விழித்திருந்து விருந்தினரை வரவேற்க ஆயத்தமாகினர். எதிர்பார்த்ததுபோல் அவர்களும் அதிகாலை மூன்று முப்பது மணியளவில் வந்துசேர்ந்தனர். நித்திரைக் கலக்கம் எல்லோரையும் ஆட்கொள்ளவே பத்துப்பதினைந்து நிமிடங்களுக்குள் சிறிது நேரம் அளவளாவி, வந்தவர்களின் பயணக்களை தீர ஒன்றாகத் தேனீர் அருந்திவிட்டு தூங்கச் சென்றோம்.

கடந்த இரண்டு நாட்களாகப் பொழிந்துகொண்டிருக்கும் மழை இன்றும் விடியற் காலையிலிருந்தே ஓரளவு பெய்யத் தொடங்கியது. மழையையும் பொருட்படுத்தாது, காலை உணவும் உட்கொள்ளாது, பால், தேனீர் மட்டும் அருந்திவிட்டு ஆளுக்கொரு குடையுடன் எங்களது கடற்கரையைப் பார்க்கச் சென்றோம். எனது மகன், மகள் இருவரும் அவர்களது நண்பிகளுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர். அவர்கள் இப்போதுதான் இருபதைக் கடந்தவர்கள். நாட்டை ஆளப்போகும் எதிர்காலப் பிரஜைகள். ஓராயிரம் கனவுகளுடன் வாழ்பவர்கள். 

நானும் அவர்களது பெற்றோரும் அறுபதைக் கடந்தவர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி  மட்டுமே கனவு காண்பவர்கள். ஆதலால் எங்களது உரையாடல் சற்று வேறுபட்டிருந்தது. இரண்டொரு நாட்களாகப் பெய்து கொண்டிருக்கும் மழை தொடக்கம் கடந்த சுனாமி அனர்த்தம் வரை விரிவாக உரையாடத் தொடங்கினோம். 

நடப்பு, காலநிலை மாற்றம், அரசியல், மக்களிடையே என்றுமில்லாதவாறு பரவிக்கிடக்கும் நோய்கள் எல்லாம் உள்ளடங்கலாக உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. எனக்கு சிங்களம் கதைக்கத் தெரியும் என்பதால் அவர்களுடன் பிரச்சினையின்றி உரையாடிக்கொண்டிருந்தேன். கடினமான சொற்கள் குறுக்கிடும்போது ஆங்கிலச் சொற்களை உட்புகுத்திக் கொள்வது எனது வழக்கம். அவ்வேளை, அதனைப் புரிந்துகொண்டு அவர்களும் பொருத்தமான சிங்களச் சொற்களைத் தெரியப்படுத்துவார்கள். அதனைக் கவனமாக மனதில் பதிந்துகொள்வேன். 

அதேபோல் எனது இளைய மகனும் அவரது பல்கலைக்கழகத் தோழிகளுடன் நன்கு உரையாடுவது தெரிந்தது. ஆனால் எனது இளைய மகள் நண்பிகளுடன் சிங்களத்தில் கதைப்பது சிரமமாக இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. இருந்தும் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் சிரித்துப் பேசி சமாளித்துக் கொண்டிருந்தாள்.

தொடர்ந்து காலையுணவு, உறவினர் வீடுகள், மதிய உணவு என அந்நாளின் அரைப்பகுதி மிக வேகமாகச் சென்றுவிட்டது. 

பின்னேரம், எனது மூத்த மகன் வேலை செய்யும் வைத்தியசாலைக்குச் சென்று அவரையும் சந்தித்து விட்டு வருவோமென எண்ணி பயணமானோம். அவரை அவரது விடுதியில் சந்தித்து, வந்தவர்களை அறிமுகப்படுத்தி மகிழ்ச்சியாக உரையாடினோம். அவரது மனைவி அதாவது, எனது மருமகளும் எங்களுடன் வந்திருந்தார். 

மூத்த மகன், தான் கடமைபுரியும் வைத்தியசாலையின் தற்போதைய நிலைவரங்கள் பற்றி சிங்களத்தில் சரளமாக விருந்தினர்களுடன் உரையாடியது எனக்குக்கூட ஆச்சரியமாக இருந்தது. வந்தவர்களுக்குப் பெரும் சந்தோஷமாகவும் வியப்பாகவும் இருந்தது. தங்களது தாய்மொழியை ஏனைய மொழிகளைப் பேசும் மக்கள் சரளமாகப் பேசுவது அவர்களை எவ்வளவு தூரம் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது என்பதையும் அதனை அவர்கள் வரவேற்று ஊக்கப்படுத்துவதையும் அனுபவ ரீதியாக உணரும்போது நாம் அனைவரும் எமது நாட்டின் சகோதர மொழியைக் கற்றறிந்து பேச வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுவது இயற்கையே.

அதேவேளை, எனது மூத்த மகனின் மனைவியும் எனது இளைய மகளும் ஒருவர் முகத்தை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொள்வதை நான் அவதானிக்கத் தவறவில்லை. அவர்களுக்கு சிங்களம் நன்கு பேச வராது என்பதே அதற்குக் காரணம்.

விருந்தினர்கள் கிண்ணியாவில் வசிக்கும் இன்னொரு மாணவியின் வீடு செல்ல ஏற்பாடாகி இருந்ததால், நாங்கள் வீடு செல்லும் வழியில் கல்முனை பஸ் நிலையத்துக்குக் கூட்டிச் சென்று பஸ்ஸில் ஏற்றிவிட்டு விடைபெற்று வீடு வந்து சேர்ந்தபோது இரவு பத்தரை மணியாகிவிட்டது.

அடுத்த நாள் காலை எனது இளைய மகள் என்னிடம் வந்து, 'வாப்பா, இன்று தொடக்கம் ஒன்லைனில் சிங்களம் பேச்சுப் பயிற்சியுடன் கற்பதற்கு விண்ணப்பிக்கப் போறேன்' எனக் கூறி எனது அனுமதி வேண்டிநின்றாள். எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டபோதிலும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. நேற்றைய சம்பவம் அவளை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஒரு மொழி அறிந்தவன் ஒரு மனிதன். பல மொழிகள் அறிந்தவன் பல மனிதர்களுக்குச் சமம் எனக் கூறியதோடு அவளது மதினியையும் சேர்த்துக்கொண்டு பாடங்களைத் தொடங்குமாறு ஆலோசனை வழங்கினேன். 

நீண்ட நாட்களாக எனது மனதை உறுத்திக் கொண்டிருந்த பெருங்கவலையொன்று, இன்று படிப்படியாகக் கரையத்தொடங்கியது.


- எஸ். ஏ. கப்பார்

26-02-2024.


அப்பாவின் டைரி (எஸ் ஏ கப்பார் சிறுகதைகள்)

 


Monday, February 5, 2024

பயணங்கள் (சிறுகதை 13)

பயணங்கள்.

செல்பேசி அலறியபோது விழித்தெழுந்த நான் ஏற்கனவே இரண்டு அழைப்புகள் வந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். எனது இளைய தம்பி விமான நிலையம் வந்துவிட்டதை அறிந்து அழைப்பை ஏற்படுத்தி, இதோ, பத்து நிமிடத்தில் வந்துவிடுவோம் எனக் கூறி, தொடர்பைத் துண்டித்துவிட்டு விமான நிலையம் செல்ல ஆயத்தமானேன்.

கடந்த முப்பது வருடங்களாக மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து விடுமுறைக்காக அல்லது தனது தொழிலை முடித்துக்கொண்டு ஊருக்கு வருபவர்களையும் அவர்களது உடைமைகளையும் ஏற்றி இறக்குவதுதான் எனது தொழில். இருபத்தைந்து வயதில் ஆரம்பித்த தொழில். இப்போது எனக்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. இத்தனை வருடங்களாகவும் இல்லாத ஒரு பரபரப்பு இன்று. காரணம், அழைத்துவரப் போவது எனது சொந்தத் தம்பியை என்பதால். பத்து வருடங்களின் பின் ஊர் திரும்புகிறான்.

நேற்று அதிகாலை ஊரிலிருந்து வெளிக்கிட்டு அவனது மனைவி மக்கள் குடும்ப சகிதம் கொழும்பு வந்துசேர்ந்தோம்.  இன்று அதிகாலை இரண்டு மணியளவில் தம்பி விமான நிலையம் வந்து சேர்ந்ததும் எனக்கு அறியத்தருவதாகக் கூறியதால் சிறிதுநேரம் அயர்ந்து தூங்கிவிட்டேன்.

அவசர அவசரமாக வெளிக்கிட்டு விமான நிலையம் சேர்ந்தபோது மணி இரண்டரை ஆகிவிட்டது. தம்பி வெளியில் வந்து தனது பயணப்பொதிகளுடன் காத்திருந்தான். ஓடிச்சென்று கட்டித் தழுவிக் கொண்டேன். குடும்பத்தினரும் நலம் விசாரித்து உரையாடினர்.

''தம்பி, இப்ப அதிகாலை இரண்டரை மணிதான் ஆகுது. ஓரளவு வெளிச்சம் வரட்டும் ஊருக்குப் பயணமாவோம். பெண்களும் சிறுவர்களும் இருக்கிறார்கள்'' என்றேன்.

''இல்ல நானா, இப்பவே வெளிக்கிட்டுப் போவோம். எப்படியும் நேரத்தோடு வீட்டுக்குப் போய்விடலாம்'' என்று தம்பி கூறியவுடன் ஏனையோரும் ஆமோதிக்கவே பயணப்பொதிகளை வாகனத்தின் பின்பக்கம் ஏற்றிவிட்டு, ஊரை நோக்கிய பயணத்தை அரை மனதுடன் ஆரம்பித்தேன். 

எட்டு அல்லது பத்து கிலோமீட்டர் தாண்டி வாகனம் சென்று கொண்டிருக்கையில், எங்களது வாகனத்தைத் தொடர்ந்து இரண்டு மூன்று மோட்டார் சைக்கிள்கள் சிக்னல்களைப் போட்டுக்கொண்டு வேகமாக வருவதையும் முன்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்த ஒருவன் அவனது இரண்டு கைகளையும் உயர்த்தி ஏதோ சைகை காட்டுவதையும் அறிந்தேன். அவர்கள் வாகனத்தை நிறுத்தச் சொல்லித்தான் சைகை காட்டுகிறார்கள் என்பதை உணர்ந்தும் குறிப்பிட்ட இடம் பாதுகாப்பு இல்லாத இடமாகையால் நிறுத்தாது பயணத்தைத் தொடர்ந்தேன். இதனை அவதானித்த எனது தம்பியும் குடும்பத்தினரும் வாகனத்தின் வேகத்தைக் குறைக்குமாறு கூறவே வேறு வழியின்றி வேகத்தை நன்றாகக் குறைத்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனத்தை நெருங்கி வாகனத்தின் பின் 

சில்லுகளில் ஒன்று காற்றுப் போகிறது. விபத்தினைத் தடுக்க வாகனத்தை நிறுத்திப் பாருங்கள் என்று கூறிவிட்டு வேகமாக முன்னோக்கிச் சென்று மறைந்துவிட்டார்கள். 

எனது முப்பது வருடகால இத்தொழிலில் இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சந்தித்திருக்கிறேன். நான் வாகனத்தை நிறுத்தாமல் வேகத்தைக் குறைத்து மிக அவதானமாக ஆட்கள் நடமாடும் ஓரிடம் வரும்வரை பயணத்தைத் தொடரத்தான் நினைத்தேன். ஆனால் உள்ளேயிருந்தவர்கள் விபத்து நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் கலவரப்பட்டு வாகனத்தை நிறுத்தி என்னவென்று பார்க்குமாறு  கட்டாயப்படுத்தியதால்தான் நிறுத்தினேன்.

நான் எதிர்பார்த்ததுபோன்றே எங்கிருந்தோ மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எனது வாகனத்தின் முன்னால் வந்து நின்றன. அவற்றிலிருந்து வேகமாக வந்த இருவர் என்னை மறுபக்க வீதி ஓரத்துக்கு  இறங்கிவருமாறு அழைத்தனர். உள்ளேயிருப்பவர்களை இறங்கவேண்டாமெனக் கட்டாயப்படுத்திவிட்டு நான் மட்டும் இறங்கிச் சென்றேன். 

''ஐயா, நாங்க உங்களை எயாபோட்டிலிருந்து பலோ பண்ணித்தான் வாரோம். வெளிநாட்டிலிருந்து சாமான்கள் எல்லாம் கொண்டு வாரது தெரியும். நாங்க எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டோம். எங்களுக்கு காசுதான் வேணும். ஒரு ஐம்பதாயிரம் கொடுத்தாப் போதும். விட்டிடுவோம்.'' என்று அதிலொருவன் கூறிவிட்டு மற்றவனைப் பார்த்து சரிதானே எனத் தலையாட்டினான். அவனும் சரியெனப் பதிலுக்குத் தலையாட்டினான். 

எனது தொழில் அனுபவத்தில் இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சமாளித்து வெற்றிபெற்றதுண்டு. அவ்வாறுதான் இவர்களுடனும் கதைத்துப்பேசி, வாதாடி இறுதியில் ரூபா இருபத்தையாயிரம் கொடுத்துவிட்டு வாகனத்தில் வந்து ஏறினேன்.

''நானா, இதனை இப்படியே விட்டுவிடக்கூடாது. நேரா பக்கத்திலே வார பொலிஸ் ஸ்டேசனுக்குப் போவோம். கொம்ளைன் ஒன்று போட்டு அவங்களைப் பிடிப்போம். இவங்களெல்லாம் கள்ளனுகள்.'' - இளம் இரத்தம் ஆவேசப்பட்டது.

தம்பி அனுபவமில்லாத சின்னப் பிள்ளை. இவனுக்கு எங்கே தெரியப்போகுது நம்மட நாட்டு நடப்புப் பற்றி. பொலிஸுக்குப் போய் அவங்களுக்குப் பந்தம் கொடுத்து, வாகனத்தையும் கொண்டு பொலிஸிலே போட்டு, கடைசியிலே வெறும் இரும்புத் துண்டுகளைத்தான் வீட்டுக்குக் கொண்டுவரணும். இந்தத் தொழிலைப் பொறுத்தமட்டில் இண்டைக்கு இருபத்தையாயிரம் ரூபா இலாபம் என மனதைத் தேற்றிக்கொண்டு ஊர் நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தேன்.

- எஸ். ஏ. கப்பார்

(04-02-2024 ஞாயிறு 76வது தேசிய சுதந்திர தினத்தன்று  'தமிழன்' வார வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)



புதிய தலைமுறை (சிறுகதை 12)

 புதிய தலைமுறை

தெருவிளக்கின் ஒளியிலிருந்து தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் பொருட்டு, எனது வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி, ஒரு முச்சந்தியின் இடப்பக்க வீதியின் ஓரத்தில் மூன்று மாணவிகள் நின்றுகொண்டிருந்தனர். தினமும் தனியார் வகுப்பிற்கு வரும் மாணவிகள். வகுப்பு முடிந்தும் இன்னும் வீடு செல்லவில்லை. வானம் தன்னைப் போர்த்திக்கொள்ள இருளைச் சிறிது சிறிதாக அபகரிக்கும் மாலைப்பொழுது. இவர்களது பெற்றோர்களோ அல்லது அண்ணன் தம்பிமார்களோ இவர்கள் மீது அக்கறையில்லாதவர்கள். இல்லையென்றால் தங்கள் குமர்ப்பிள்ளைகளை இருள் படியும் மாலை வேளைகளில் தனியே விட்டுவைப்பார்களா? எனக்கு வேதனையாக இருந்தது.

சிறிது நேரத்தில், பெரும் உறுமல் சத்தத்துடன் இரு மோட்டார் சைக்கிள்கள் ஆறு இளைஞர்களைச் சுமந்துகொண்டு வேகமாக வந்து சடுதியான நிறுத்தலுடன் இலக்கை அடைந்தன. பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் மூன்றாவதாக அமர்ந்திருந்த இளைஞன் நடுவில் நின்றிருந்த மாணவி மீது ஒருவித பார்வைக் கணையைத் தொடுத்தவாறு அவளது கையில் ஏதோவொன்றைத் திணித்தான். அவளது நண்பிகள் இருவரும் மறுக்கம் திரும்பி நின்றார்கள். மீண்டும் அதே உறுமல் சத்தத்துடன் மோட்டார் சைக்கிள்கள் பறந்து சென்றன. 

இன்றைய தலைமுறை மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கும் இப்படியான நிகழ்வுகளை கண்களால் பார்த்துக்கொண்டிருப்பது கூட பாவம் போல் தோன்றியது. ஒன்றுமே செய்யமுடியாத நிலை. தட்டிக்கேட்டால் முதியவர்கள் என்றுகூடப் பார்க்காமல் எதிர்த்துப் பேசுவார்கள். இருந்தும் மனம் கேட்கவில்லை. மாணவிகளை அணுகி விசாரித்துப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே அவர்களை நோக்கி நடக்கலானேன். நான் ஓர் அடி எடுத்து வைத்ததும் அவர்கள் மூன்றடி எட்டிவைத்து வேகமாக நடந்து மறைந்து விட்டார்கள்.

இரண்டு நாட்களின் பின்னரும் இதே போன்றதொரு காட்சி. அதே இடம். அதே மாணவிகள். அதே மோட்டார் சைக்கிள்கள். முதலாவது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என்னைக் கண்டதும் 'அங்கிள் வாரார்டா, கவனம்' எனக் கூறிக்கொண்டு வேகமாக என்னைக் கடந்துவிட்டனர். மாணவிகள் நின்றிருந்த சிறிய குறுக்கு வீதியில் முச்சக்கர வண்டியொன்று வந்து கொண்டிருந்ததால் அவர்கள் பின்னோக்கி நகர்ந்துசெல்ல முடியவில்லை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட நான், அவர்களை நோக்கிச் சென்று,

'பாடம் முடிந்தால் வீட்டுக்குப் போவது தானே. என்ன ரோட்டுகளில் நின்றுகொண்டு ஆண் பிள்ளைகளுடன் அப்படி என்ன கதை. காலங் கெட்டுப் போய்க் கிடக்கிறது. உம்மா வாப்பா நீங்க படிக்கப்போன என்று நினைச்சிருப்பாங்க. நீங்க என்னடாவெண்டா ரோட்டில நின்றுகொண்டு அரட்டை அடிக்கயள்' 

- ஆத்திரத்தில் சிறிது கோபமாக அதட்டினேன்.

'அங்கிள், அத நாங்க பாத்துக்குவோம். நீங்க ஒங்கட வேலையைப் பாருங்க.'

- நடுவில் நின்றவள் முகத்தில் அறைந்தாற்போல் கூறிவிட்டு வெடுக்கென்று திரும்பி நடந்தாள். மற்றைய இருவரும் அவளைப் பின்தொடர்ந்து வேகத்தை அதிகப்படுத்தினர். நான் வெட்கித்துப்போனேன். ஒரு தந்தைக்குச் சமனான எனக்கு முகத்தில் அடித்ததுபோல் மரியாதையில்லாமல் கூறிவிட்டார்களே என்ற ஆதங்கம் மேலோங்கியது.

வீட்டுக்கு வந்த நான் மனைவியிடம் நடந்தவற்றைக்கூறி வருந்தினேன்.

'சும்மா தேவையில்லாத வேலைகளைப் பார்க்காம இருங்க. அவளுகள் எக்கேடு கெட்டுப்போனால்தான் நமக்கென்ன? நாசமாப் போகட்டும்.'

- மனைவி கூறியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு ஒவ்வொருவரும் ஒதுங்கி ஒதுங்கிச் சென்றால் இந்த இளம் சமுதாயத்தின் நிலை என்னவாகும்? கேட்கப் பார்க்க ஆளில்லாத சமூகமாய்ப் போய்விடும் அல்லவா? இவர்களின் எதிர்காலம் என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே எனக்குப் பயமாயிருந்தது. 

அடுத்த நாள் பிற்பகல் வேளை, மாணவிகள் கல்வி கற்கும் தனியார் நிறுவன ஆசிரியரை அணுகி நடந்தவற்றைக் கூறினேன். அவரும் கவலைப்பட்டார். 

'நாங்கள் பாடம் முடிந்ததும் உடனே வீட்டுக்குப் போய்விடவேண்டுமென்றும் வீதிகளில் நின்று ஆண் பிள்ளைகளுடன் கதைக்கக்கூடாது என்றும் அவ்வாறு ஏதாவது முறைப்பாடு வந்தால் வகுப்புகளுக்கு அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறித்தான் பாடங்களை நடாத்துகிறோம். எங்கட கதைகளையும் கேட்கக்கூடிய நிலையில் இந்தப் பிள்ளைகள் இல்லை.' என எடுத்துரைத்தார். சிறிது நேரம் உரையாடிவிட்டு 'நம்மால் முடிந்ததைச் செய்வோம்' என மனதிற்குள் நினைத்தவாறு வீட்டை வந்தடைந்தேன். 

இன்று மாலை குறிப்பிட்ட மாணவிகளை அந்த முச்சந்தியில் காண முடியவில்லை. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப்போல் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்தால் இளைஞர்களிடையே பரவிவரும் இது போன்ற மோசமான செயற்பாடுகளை  ஓரளவாவது தடுத்துவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. முயற்சி வீண்போகவில்லை என்ற ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டது. அதனால் எப்படியும் இந்த மாணவிகளினதும் மோட்டார் சைக்கிள் பேர்வழிகளினதும் பெற்றோர்களையும் சந்தித்து இச் சம்பவங்கள் பற்றித் தெரியப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. 

அதே எண்ணத்தோடு இருந்த எனக்கு உறங்கச் சென்றதுகூட ஞாபகமில்லை.

'படித்துப் படித்துச் சொன்னேன். இந்தத் தறுதலைகளோட விஷயங்களில் தலையிட வேண்டாமென்று. கேட்டாத்தானே. பாருங்க. நல்லாப் பாருங்க. வீட்டு ஜன்னல் கண்ணாடி எல்லாத்தையும் நொறுக்கிட்டுப் போயிட்டானுகள்.'

நித்திரையில் இருந்த என்னை அவசர அவசரமாக அரட்டி, தலையில் அடித்துக் கொண்டு அலறினாள், என் மனைவி.

நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்.

(07-01-2024 ஞாயிறு 'தமிழன்' வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)





Wednesday, January 3, 2024

அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும். (சிறுகதை - 11)

 அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும்.

துவிச்சக்கர வண்டியை வீட்டு முன்பக்க மாமரமொன்றில் சாத்திவிட்டு உள்ளே நுழைந்த கலையன்பன் வேண்டா வெறுப்போடு தன் கையிலிருந்த ஆவணத்தை மேசை மீது போட்டுவிட்டு நாற்காலி ஒன்றின் மீது வந்தமர்ந்தான்.

கடந்த மூன்று நாட்களாக அலைந்து திரிகிறான். இன்றும் கூட கவிவேந்தல் கனகசபை ஐயாவைச் சந்திக்க முடியவில்லை. இன்று எப்படியும் மதியம் வீட்டில் இருப்பதாகவும் வந்து சந்திக்குமாறும் கேட்டிருந்தார்.  அம்மாவின் வேண்டுதலையும் தட்டிக்கழித்துவிட்டு மதியம் வேகா வெய்யிலில் கனகசபை ஐயாவைச் சந்திக்க அவரது வீடு நோக்கிச் சென்று, இரண்டு மணி நேரம் காத்திருந்து, ஐயாவைக் காணமுடியாமல் திரும்பிவந்துவிட்டான்.

கவிவேந்தல் கனகசபை ஐயாவைத் தெரியாதவர்கள் இலக்கிய உலகில் எவருமில்லை. ஐயா தலைமை வகிக்காத அல்லது கலந்துகொள்ளாத எந்தவொரு நிகழ்வும் ஊரில் நடந்ததாக ஞாபகம் இல்லை. குறிப்பாக இலக்கிய நிகழ்வுகளென்றால் ஐயாதான் தலைமை. ஓய்வு நிலை தலைமை ஆசிரியரான கனகசபை ஐயா உண்மையில் சிறந்த மரபுக் கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். அவரது விமர்சனத்திற்கு உட்படாத இலக்கிய வடிவங்கள் எதுவுமில்லை எனலாம்.

கலையன்பன் வளர்ந்து வரும் இளங் கவிஞன். தனியார் நிறுவனமொன்றில் தொழில் புரிபவன். கடந்த மூன்று நான்கு வருடங்களாகக் கவிதைகள் எழுதி வருபவன். தேசிய நாளேடுகளிலும் சஞ்சிகைகளிலும் அவனது கவிதைகள் இடம்பிடித்துள்ளதோடு பாராட்டுகளையும் பெற்றுள்ளன. கவியரங்குகளில் பங்குபற்றி பரிசில்களும் பெற்றவன். 

அவன் எழுதிய கவிதைகளுள் இருபத்தைந்து முப்பது கவிதைகளைத் தெரிவுசெய்து கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட வேண்டுமென்ற ஆவல் கடந்த ஓரிரு மாதங்களாகப் பற்றிக்கொள்ளவே, தனது கவிதைகளைத் தெரிவுசெய்து தட்டச்சுச் செய்து ஒரு நகல் பிரதியைப் பெற்றுக்கொண்டான். அப்பிரதியைக் கவிவேந்தல் கனகசபை ஐயாவிடம் கொடுத்து மதிப்புரை ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் மூன்று நாட்களாக அலைந்துதிரிகிறான்.

'மகன், நேரம் போயிட்டு இல்ல. கை காலை அலம்பிக் கொண்டு வந்து சாப்பிடுங்க.' 

அம்மா அழைத்த போது எழுந்து கைகளைக் கழுவிக்கொண்டு மதிய உணவை உண்ண ஆரம்பித்தான்.

ஓரிரு கவளங்கள்தான் உட்சென்றன. அதற்குள் அவனது செல்பேசி அலறியது. அம்மா எடுத்து அவனது கையில் கொடுத்தார்.

ஐயா கனகசபை - முணுமுணுத்தவாறு எழுந்து கைகளைக் கழுவிக்கொண்டு புறப்படத் தயாரானான்.

'அம்மா சாப்பாட்டை மூடி வையுங்க. இதோ வந்துவிடுகிறேன். ஐயா வந்திட்டாராம்.'

அம்மாவிடம் கூறிவிட்டு வெளிக்கிட்ட கலையன்பனுக்கு அம்மா கூறிய எதுவுமே காதுக்கேறவில்லை.

கனகசபை ஐயாவின் வீட்டு வெளிச்சுவரில் துவிச்சக்கர வண்டியைச் சாத்திவிட்டு உள்ளே நுழைந்த கலையன்பனை வந்து அமருமாறு அழைத்தார் கலைவேந்தல் கனகசபை ஐயா.

தான் வந்த விடயத்தைச் சுருக்கமாகக் கூறினான்.

'தம்பி, எங்க பார்த்தாலும் புத்தக வெளியீட்டு விழாவாத்தான் இருக்கு. ஒரு நாளைக்கு பத்துப் பதினைந்து கவிதை நூல் வெளிவருது. ஒரு நூலாவது உருப்படியா இல்ல, ஒன்று இரண்டைத் தவிர. என்ன செய்வதெண்டு தெரியாம நாங்களும் கலந்துகொள்ளத்தான் வேண்டியிருக்கு. நீயும் என்ட சொந்தக்காரப் பொடியன். ஒண்ட கவிதைகள் ஒரு சிலதைப் பார்த்திருக்கேன். பரவாயில்லை. எப்படியும் இரண்டொரு வாரத்துக்குள்ள நல்லபடியா எழுதித்தாறன். எழுத்துப் பிழையில்லாம அச்சிட்டு எடு. விழா நடத்துறதுக்கு இரண்டு கிழமைக்கு முன் என்னை வந்து சந்தித்து விழா நடத்துற இடத்தையும் நாளையும் கலந்தாலோசி. எனக்குப் பல சோலி. தலைமை தாங்குறதெண்டா நானும் ஆயத்தப்படுத்தவேண்டும். என்ன? நான் சொல்லுறது சரிதானே?' 

மளமளவெனக் கூறி முடித்தார், கனகசபை ஐயா.

தனது கவிதைத் தொகுதிக்கு மதிப்புரை கேட்டுவந்த கலையன்பன், விழாத் தலைவராக அவரையே போடச் சொல்லி நாசூக்காகக் கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தான். செய்வதறியாது சரி, ஐயா எனக் கூறிவிட்டு விடைபெற்றான்.

இரு மாதங்கள் கடந்துவிட்டன. தங்குதடையின்றி நூல் வெளியீட்டு வேலைகள் எல்லாம் நிறைவுற்று,  விழாக்கோலம் போடும் நாளும் வந்தது.

அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் உறவினர்களும் நண்பர்களும் தவிர எதிர்பார்த்தவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே வந்திருந்தனர். அத்துடன் முக்கியஸ்தர்களான தலைவர் கலைவேந்தல் கனகசபை ஐயாவும் முதன்மை அதிதி ராசமாணிக்கம் அதிபர் ஐயாவும் இன்னும் சமுகமளிக்கவில்லை. அமைதியாக இருந்த கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. கதாநாயகன் கலையன்பனுக்குப் பதைபதைக்கத் தொடங்கியது. 

கூட்டத்தில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் 'நீங்க கூட்டத்தை ஆரம்பியுங்கோ. ஐயா கொஞ்சம் லேட்டாத்தான் வருவார்' என்றதும் அவரது வேண்டுகோள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வேறொருவரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

வரவேற்புரை, தலைமையுரை, மதிப்புரை, ஆய்வுரை, முதற்பிரதி - சிறப்புப் பிரதி வழங்கல், சிற்றுண்டி உபசாரம்,  இன்னிசை மழை, பொன்னாடை போர்த்தல், புகைப்படம் எடுத்தல் எல்லாம் சிறப்பாக நடந்தேறின. இறுதியாக நன்றியுரை மற்றும்  ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது. 

 ஒவ்வொருவராக கலையன்பனை அணுகி வாழ்த்துக் கூறி விடைபெறும்போது, 'தம்பி, கனகசபை ஐயாவும் ராசமாணிக்கம் அதிபரும் ஒருவர் போற இடத்துக்கு மற்றவர் போறதில்லையென்று தெரியாது போல. ராசமாணிக்கம் அதிபருக்குப் பதிலா வேறொருவரை போட்டிருக்கலாமே'   எனச் சத்தமாகக் கூறிவிட்டு நகர்ந்தார்.

வீடு வந்துசேர்ந்த கலையன்பனுக்கு நூல் வெளியீட்டுக்காக வங்கியில் அடகு வைத்த அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும்தான் அடிக்கடி மனதிற் தோன்றி மறைந்தன.

எஸ். ஏ. கப்பார்

04-12-2023.

(10-12-2023 ஞாயிறு 'தமிழன்' வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)